Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

ADDED : நவ 25, 2011 01:05 PM


Google News
Latest Tamil News
* குலதெய்வம் கோயிலுக்கு அகல் விளக்குகள் வாங்கிச் சென்ற பொழுது ஒரு சில உடைந்து விட்டன. இது நன்மையா கெடுதலா?
ரா.சாந்தி, கோவை

விளக்கேற்றி சுவாமி வழிபாடு செய்யும் பொழுது அதுவே தானாக விழுந்து உடைந்தால் தான் பரிகார தீபம் ஏற்ற வேண்டும். வாங்கிச் செல்லும் பொழுது கவனக்குறைவால் உடைந்ததற்கெல்லாம் பயப்பட வேண்டாம். எல்லாம் நன்மைக்கே.

* கிரகண வேளையில் கோயில் நடை சாத்துவது ஏன்?
எஸ்.பாண்டியராஜ், திருப்பூர்

நடை சாத்த வேண்டிய அவசியமில்லை. இந்தப் பழக்கம் எப்படி வந்தது என்றே புரியவில்லை.

கிரகண காலத்தில் புண்ய கால தீர்த்தம் கொடுத்துச் சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் செய்யச் சொல்லி சாஸ்திரங்கள் கூறுகின்றன. சில கோயில்களில் இது வழக்கத்திலும் உள்ளது.

* எங்கள் வீட்டில் துளசியுடன் வில்வமும் சேர்ந்து வளருகிறது. இரண்டையும் சேர்த்து வணங்கலாமா? அல்லது கோயிலில் நடலாமா?
கமலா, ஆத்தூர்

இரண்டும் உங்கள் வீட்டில் நன்றாக வளருவதே பெரிய பாக்கியம். தினமும் விளக்கேற்றி நன்றாக வழிபடுங்கள். உங்கள் வீடு மங்களகரமாக இருக்கும்.

** வீட்டில் சிலை வைத்து வழிபாடு செய்து வருகிறேன். அதனால் குறை ஏதுமில்லை. ஆனால், சிலை வழிபாடு கூடாது என்று சிலர் கூறுகின்றனர். விளக்கம் தேவை.
எஸ்.தீபா கடலூர்

வீட்டில் சாமி சிலைகளை ஆறு அங்குல உயரத்திற்கு மேல் இல்லாமல் வைத்து தாராளமாக பூஜை செய்யலாம்.

* பிறந்த கிழமையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது கூடாதா?
-அ.ராதா, திருமயிலாடி

பிறந்த நட்சத்திரத்தில் மட்டுமே எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது. கிழமை பார்க்க வேண்டாம். தீபாவளியன்று ஜென்மநட்சத்திரம் வந்தால் சும்மா இருந்து விடாதீர்கள். அது விதி விலக்கு.

* வீடு, தீர்த்தக்கரை, கடற்கரை இம்மூன்றில் பிதுர்தர்ப்பணத்தை எங்கு செய்வது சிறப்பானது?
கே.வேலுச்சாமி, தாராபுரம்

கடற்கரையில் செய்வது முதன்மையானது. நதி, குளக்கரைகளில் செய்வது விசேஷமானது. வீட்டில் செய்வது மத்திமம் தான். அவசர கதியில் சென்று கொண்டிருக்கும் வாழ்க்கைச் சூழலில், ஏதாவது ஓரிடத்தில் விட்டுவிடாமல் செய்வதே மிக மிக உத்தமமானது தான்.

* பஞ்சாட்சர மந்திரம் (நமசிவாய, சிவாயநம)சொல்லித்தான் திருநீறு பூச வேண்டும் என்பது உண்மையா?
கண.கணேசன், திருச்சுழி

பஞ்சாட்சரம் (நமசிவாய) சொல்லி திருநீறும், அஷ்டாக்ஷரம் (ஓம் நமோ நாராயணாய)சொல்லி திருமண்ணும் இட்டுக் கொள்வதைப் போன்ற புண்ணியச் செயல் இவ்வுலகில் வேறு கிடையாது.

* கருவறையில் திரைபோடும் போது சந்நிதியை தரிசனம் செய்வதோ சுற்றி வலம் வருவதோ கூடாது என்கிறார்களே? உண்மைதானா?
எஸ்.கோவிந்தராஜன், மதுரை

உண்மைதான். ஒருவரை சந்திக்கச் செல்கிறோம். அவர் நம்மை சந்தித்துப்பேசும் நிலையில் விழித்துக் கொண்டிருந்தால் தானே சந்திப்பு என்பது நிகழும். அதுபோலத் தான் திரைப்போடப்பட்ட சந்நிதியும்! அப்போது தரிசிப்பது வலம் வருவது போன்றவை செய்யக்கூடாது. இது போன்ற சமயங்களில் விமான கோபுரங்கள் உள்ளன. அவற்றை தரிசித்தாலே சுவாமி தரிசன பலம் கிட்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us