Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பவுர்ணமி பரிகாரம்

பவுர்ணமி பரிகாரம்

பவுர்ணமி பரிகாரம்

பவுர்ணமி பரிகாரம்

ADDED : டிச 30, 2016 11:17 AM


Google News
Latest Tamil News
மணிபல்லவத் தீவு மன்னன் தர்மசேனனின் மகள் வசந்தசேனை. அம்பிகை மீது பக்தி கொண்டவள்.. பேரழகி. அவையில், சுமந்திரன் என்ற சூழ்ச்சிக்கார ஜோதிடன் இருந்தான். வசந்தசேனையை எப்படியாவது அடைய வேண்டும் என்று திட்டம் போட்டான்.

மன்னர் ஒருநாள் சுமந்திரனிடம், “பருவ வயதை அடைந்த இளவரசியின் ஜாதகத்தைப் பார்த்து எப்போது திருமணம் நடத்துவது என்று சொல்ல வேண்டும்,” என்றார்.

சுமந்திரனும் ஜாதகம் பார்ப்பது போல நடித்து, “மன்னா! இன்னும் ஒரு மாதத்திற்குள் இளவரசிக்கு பதினெட்டு வயது முடிகிறது. அதற்குள் நீங்கள் ராஜ்யத்தை இழக்கும் சூழல் தெரிகிறது,” என்றான்.

பதறிய மன்னர், “சுமந்திரா! இதற்கு ஏதாவது பரிகாரம் சொல்,'' என்றார்.

''மன்னரே! பயம் வேண்டாம்! இன்று பவுர்ணமி. இன்று இரவே நான் சொல்லும் பரிகாரத்தைச் செய்தால் ஆபத்து நீங்கி விடும்” என்றான் சுமந்திரன்.

“நல்லது சுமந்திரா... பரிகாரத்தை உடனே சொல்” என்றார் மன்னர்.

“இளவரசி உங்களோடு இருந்தால் தானே நாட்டை இழப்பீர்கள். அவளை நாடு கடத்தி விட்டால் ஜாதகம் பலமிழந்து விடும்.

பவுர்ணமியான இன்றிரவு அவளை ஒரு மரப்பேழையில் வைத்து நதியில் போட்டு விடுவோம். அது எங்காவது கரை ஒதுங்கும். அவளும் பிழைத்துக் கொள்வாள். நீங்களும் என்றென்றும் மன்னராக ஆட்சியைத் தொடரலாம்” என்றான்.

அந்தப் பேழையைக் கைப்பற்றி இளவரசியைத் அடைய வேண்டும் என்பது ஜோதிடனின் திட்டம்.

நாட்டை இழக்க விரும்பாத தர்மசேனன், உடனடியாக பரிகாரத்தைச் செய்ய முடிவெடுத்தான்.

தந்தையின் முடிவை அறிந்த வசந்தசேனை வருந்தினாள். அவரிடம் இதெல்லாம் மூடநம்பிக்கை என சொல்லிப் பார்த்தாள். தந்தையோ 'இது அரசகட்டளை' என கண்டிப்பாகச் சொல்லி விட்டார். வழியின்றி பரிகாரத்திற்கு சம்மதித்தாள். அம்பிகையிடம், “அம்மா! உன்னைச் சரணடைந்து விட்டேன். எனக்கு நல்வழி காட்டு,” என்று வழிபட்டாள்.

சுமந்திரன் கூறியபடி பேழையில் அடைக்கப்பட்ட இளவரசி நதியில் விடப்பட்டாள். அதற்கிடையில், அன்றிரவு பவுர்ணமி வேட்டைக்கு வந்த அண்டை நாட்டு இளவரசன் நதிக்கரையில் பேழை ஒன்று ஒதுங்கக் கண்டான். அதை அவன் திறந்த போது, இளவரசி வசந்தசேனை வெளிப்பட்டாள். ஜாதக தோஷத்தால் தனக்கிருந்த ஆபத்தையும், பரிகாரமாக நதியில் விடப்பட்டதையும் அவள் எடுத்துச் சொன்னாள். அதன் மூலம் ஜோதிடனின் சூழ்ச்சி இளவரசனுக்கு புரிந்தது. வசந்தசேனைக்கு உண்மையை விளக்கி, 'உன்னை காப்பது என் கடமை' என இளவரசன் வாக்களித்தான். காட்டில் திரிந்த குரங்கு ஒன்றைப் பிடித்து பேழைக்குள் அடைத்தான். அதை மீண்டும் நதியில் மிதக்கவிட்டு வசந்தசேனையை அழைத்துக் கொண்டு தன் நாட்டிற்குப் புறப்பட்டான்.

மறுநாள் பேழையைக் கண்டுபிடித்த சுமந்திரன், ஒரு ரகசிய இடத்திற்கு கொண்டு வந்தான். அந்தரங்க அறையில் பேழையை வைத்து விட்டு, கதவைத் தாழிட்டான்.

'அன்பே... ஆருயிரே' என்று சொல்லிக் கொண்டு பேழையைத் திறந்தான்.

உள்ளிருந்த குரங்கு சுமந்திரன் மீது தாவியது. நகத்தால் அவன் உடம்பெங்கும் கிழித்தது. அலறித் துடித்த சுமந்திரன் உயிர் விட்டான். வசந்தசேனை, அம்பிகையின் கருணையை எண்ணி வியந்தாள்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us