Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/எது ராகு காலம்?

எது ராகு காலம்?

எது ராகு காலம்?

எது ராகு காலம்?

ADDED : ஏப் 10, 2017 03:20 PM


Google News
Latest Tamil News
கடற்கரை ஓரமாக நின்ற பெரிய மரத்தின் உச்சியில், கடற்குருவி ஜோடி ஒன்று அடைகாத்து வந்தது. குஞ்சுகள் வெளிவரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தன.

ஒருநாள் புயல் வீசியது. அலைகள் பொங்கி எழுந்தன. கிளையில் இருந்த கூடு, காற்றின் வேகத்தில் கடலில் விழுந்து மூழ்கியது.

குருவிகள் மனம் பதறிக் கதறின.

பெண் குருவி, ''எப்படியாவது முட்டைகளை மீண்டும் நான் காண வேண்டும். இல்லையேல் உயிர் வாழ மாட்டேன் என்றது.

ஆண் குருவி அதனிடம், ''பயப்படாதே! முட்டைகள் கூட்டுடன் சேர்ந்து தான் கடலில் விழுந்துள்ளது. எனவே அவை உடைந்திருக்காது. கடலிலுள்ள தண்ணீரை வற்ற வைத்து விட்டால் முட்டைகளை நாம் மீட்டுவிடலாம், என நம்பிக்கை ஊட்டியது.

''கடலை எப்படி வற்ற வைப்பது?''

''முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவர இன்னும் பல நாட்கள் ஆகலாம். எனவே இடைவிடாமல் சில நாட்கள் முயற்சிக்க வேண்டும். நம் வாயில் கொள்ளும் மட்டும் தண்ணீரை எடுத்துக் கொண்டு, தொலைவில் கொட்டுவோம். இப்படியே இடைவிடாமல் செய்தால் கடல்நீர் வற்றி முட்டைகள் வெளிப்படும்''.

இவ்வாறு பேசிய குருவிகள் இரவு பகலாக செயலில் இறங்கின.

அப்போது ஒரு முனிவர் வந்தார். குருவிகளின் செய்கையைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். தன் ஞான திருஷ்டியால் முட்டைகளை இழந்த தாய்க்குருவியின் தவிப்பு, அவரது உள்ளத்தை நெகிழச் செய்தது. தனது தவ பலத்தால், கடலை சில அடிகள் பின் வாங்க வைத்தார். அங்கே கூட்டுடன் இருந்த முட்டைகள் தென்பட்டன. குருவிகள் அதைப் பார்த்து மகிழ்ந்தன.

முட்டைகளை வேறிடத்தில் சேர்த்தன.

''நான் அப்போதே சொன்னேன் பார்த்தாயா! நமது ஒரு நாள் உழைப்பில் கடல் நீரை குறைத்து முட்டைகளை மீட்டு விட்டோம்,'' என்றது ஆண் குருவி

பெருமிதமாக.

முனிவர் சிரித்தபடி நடந்தார்.

இங்கே குருவிகள் முட்டைகளை மீட்டது அவற்றின் உழைப்பாலா? இல்லை...

முனிவரின் அருளால்... ஆனால் அந்தக் குருவிகளுக்கு முனிவர் என்ற ஒருவரைப் பற்றியோ, தவ வலிமை என்றால் என்ன என்பது பற்றியோ, எதுவுமே தெரியாது. ஆனால் தன்னம்பிக்கையுடன் கடல் நீரை அள்ளின. குருவிகள் அதைச் செய்யாமல் இருந்திருந்தால் முனிவர் தம் வழியே போயிருப்பார்.

மனிதனுக்கு, உழைக்கும் நேரம் நல்ல நேரம். மற்ற நேரம் ராகு காலம்.

தன்னம்பிக்கையுடன் உழையுங்கள். கடலும் வசமாகும்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us