உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிம்புவின் ‛அரசன்' படப்பிடிப்பு நிறுத்தம் : நியாயம் கேட்கும் டி ராஜேந்தர்

சிம்புவின் ‛அரசன்' படப்பிடிப்பு நிறுத்தம் : நியாயம் கேட்கும் டி ராஜேந்தர்

எஸ் தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‛அரசன்'. விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். முதற்கட்ட படப்பிடப்பு முடிந்து சமீபத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியது. இந்நிலையில் அரசன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனத்திற்கு சிம்பு ஒரு படம் நடிப்பதாக இருந்து முன்பணமாக 4 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் படத்தில் நடிக்காமல் அரசன் படத்தில் நடித்து வருகிறார். இதனால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறி பெப்சி, தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளிட்ட சினிமா சங்கத்தினரிடம் புகார் அளித்துள்ளார் ஐசரி கணேஷ். அவர்களின் அறிவுறுத்தலின்படி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்பிரச்னை தொடர்பாக சிம்புவின் தந்தையும், இயக்குனருமான டி ராஜேந்தர் வெளியிட்ட அறிக்கை : ‛‛ ‛அரசன்' படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது ஏன்? நிறுத்தியது யார்? நிறுத்த சொன்னது யார்? அரசனுக்காகவோ, சிலம்பரசனுக்காகவோ வாதாடுவதற்காக நான் வரவில்லை. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், அதற்கு துணையாக நிற்கும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமும் அறம் தவறி நடந்துவிடக்கூடாது என்பதை சுட்டிக் காட்டவே நான் வருகின்றேன்.

சிம்பு நடித்த 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தை எடுத்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், சிம்புவிற்கு எதிராக அவர் வழக்கு மன்றத்துக்கு சென்றார். அந்த வழக்கில் எங்கள் பக்கம் தீர்ப்பு வந்து வென்றுள்ளோம். நீதிமன்றம் வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து இரண்டாவது படத்துக்கு கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் சிலம்பரசனையே போய் சாரும் என்று ஒரு தீர்ப்பையும் வழங்கி இருக்கின்றார்கள். அந்த தீர்ப்புக்கான நகலும் எங்கள் கையிலே இருக்கிறது.

இப்படிப்பட்ட இந்த தருணத்திலே அந்தப் பழைய வழக்கை எடுத்து வைத்துக் கொண்டு நம்முடைய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், அதற்கு துணையாக பெப்சியும் சேர்ந்து இன்றைக்கு அரசன் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். ஒரு தயாரிப்பாளருக்காக போராடுவதற்காக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், பெப்சியும் நிற்கின்ற போது, ஒரு திரைப்பட நடிகருக்காக, போராடுவதற்காக தென் இந்திய நடிகர் சங்கமும் ஏன் நிற்கக்கூடாது? நிற்க வேண்டும். அவர்களும் போராட வேண்டும். உரிமையை பெற்று தர வேண்டும். நியாயத்தை நிலைநாட்ட வேண்டும் என்று ஒரு சுமூகமான தீர்வை ஏற்படுத்தி தரவேண்டும் என்ற கோரிக்கை வைக்கின்றேன்.

சட்டசபை தேர்தல் நடக்கக்கூடிய இந்த காலகட்டத்திலே நீதிமன்றத்தால் ஒரு வழக்கிலே தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகும், சட்டத்தை எங்கள் கையிலே எடுப்போம். நீதிமன்றத்தால் ஒரு வழக்கிலே தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகும் சட்டத்தை எங்கள் கையிலே எடுப்போம். நாங்கள் நடந்து கொண்டிருக்கக் கூடிய ஒரு படத்தை நிறுத்துவோம் என்று நிறுத்தி காட்டி இருக்கிறார்களே இது நியாயமா? என்று கேள்வி கேட்கவும் விரும்புகின்றேன். இதன் தொடர்பாக விரைவில் பத்திரிகையாளர்களை சந்திக்கவும் இருக்கின்றேன் என்பதையும் இதன் மூலம் தெரியப்படுத்திக் கொள்கின்றேன்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !