75 ஆண்டுகளை நிறைவு செய்த 'ஓர் இரவு'
ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ப.நீலகண்டன் இயக்கத்தில் கேஆர் ராமசாமி, லலிதா, டிகே சண்முகம், பிஎஸ் சரோஜா, டிஎஸ் பாலையா, முத்துலட்சுமி, ஏ நாகேஸ்வரராவ் மற்றும் பலர் நடிப்பில் 1951ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி வெளியான திரைப்படம் 'ஓர் இரவு'.
இப்படம் வெளிவந்து இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. இப்படத்தின் கதை, வசனத்தை தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை எழுதியிருந்தார். நாடகமாக பல முறை மேடைறியது பின்னர் திரைப்படமாக உருவானது. அண்ணாதுரை, கதை வசனம் எழுதிய மூன்றாவது படம் இது. படத்தின் தலைப்புக்கேற்றபடி ஓர் இரவிலேயே இப்படத்திற்கான கதை, வசனத்தை 300 பக்கத்திற்கு எழுதிக் கொடுத்திருக்கிறார். அதற்காக அவர் வாங்கிய சம்பளம் 10 ஆயிரம் ரூபாய். இப்படம் நல்ல விமர்சனத்தைப் பெற்றிருந்தாலும், வியாபார ரீதியாக தோல்வியை சந்தித்த படம்.
இப்படத்தில் சகோதரி நடிகைகள் லலிதா - பத்மினி இணைந்து ஆடிய நடனமும், குமாரி கமலா ஆடிய நடமும் இடம் பெற்றிருந்தது. தெலுங்குத் திரையுலகத்தில் பிற்காலத்தில் புகழ் பெற்ற கதாநாயகனாக விளங்கிய ஏ நாகேஸ்வரராவ் முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருந்தார்.
பிற்காலத்தில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர் ப.நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த முதல் படம் இது. மலையாளம், தமிழ் என குணச்சித்திர நடிகையாக பிரபலமடைந்த சுகுமாரி இப்படத்தில் தான் நடிகையாக அறிமுகமானார்.
ஆர் சுதர்சனம் இசையில் பாரதிதாசன் எழுதிய 'துன்பம் நேர்கையில் யாழெடுத்து' பாடல் மிகவும் ஹிட்டான ஒரு பாடல்.
நாடகத்தை, சினிமாவுக்கேற்றபடி சரியாக மாற்றம் செய்யாத காரணத்தால்தான் இப்படம் தோல்வியைத் தழுவியது என தயாரிப்பாளர் ஏ.வி.மெய்யப்பன் பின்னர் தெரிவித்திருந்தார்.
இன்று இப்படம் 75வது வருடத்தைக் கொண்டாடும் விதத்தில் தயாரிப்பு நிறுவனம் வீடியோ டிரைலர் ஒன்றை வெளியிட்டுள்ளது.