உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எரிவாயு பிரச்னை : உடனே இதை செய்யுங்க... கமல் வைத்த முக்கிய கோரிக்கை

எரிவாயு பிரச்னை : உடனே இதை செய்யுங்க... கமல் வைத்த முக்கிய கோரிக்கை

ஈரான் போரால் உலக நாடுகள் கடும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. குறிப்பாக எரிவாயு தொடர்பான பிரச்னை ஒவ்வொரு நாடுகளிலும் எழ தொடங்கி உள்ளன. இதனால் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளும் ஆரம்பமாகி உள்ளன. நம் நாட்டிலும் இந்த சூழல் மெல்ல எழ துவங்கி உள்ளது. இந்த சிக்கலை தவிர்க்க, ‛‛முடிந்தளவு வீட்டில் இருந்து வேலை பாருங்கள், எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள், சுற்றுலா செல்வதை தவிருங்கள், பொது பேருந்துகளை பயன்படுத்துங்கள்'' என நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பல மாநிலங்களில் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் நடைமுறை பின்பற்ற துவங்கிவிட்டன.

இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன், ‛‛போர்கள், பற்றாக்குறைகள், உலகளாவிய நெருக்கடிகள் என எத்தனையோ சவால்களை ஒற்றுமையாலும் தியாகத்தாலும் வென்ற நாடு நம் இந்தியா. அதே தேசிய உணர்வோடு எழுந்து நிற்க வேண்டிய தருணம் இது'' என எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

அதில், ‛‛என் அன்புள்ள நாட்டு மக்களே... இன்று ஈரான் போரின் தாக்கத்தால் ஆழ்ந்த கவலையுடன் ஒரு இந்தியனாக உங்களிடம் பேசுகிறேன். எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. கடல் வர்த்தக பாதைகள் முடக்கப்பட்டுள்ளன. நமது சமையலறைக்கும், வீடுகளுக்கும் தேவையான எரிசக்தி, நமது வயல்களையும் பயிர்களையும் வளர்க்கும் உரங்கள், நமது தொழிற்சாலைகளையும் வாகனங்களையும் இயக்கும் எரிபொருள் அனைத்தும் விலை உயர்ந்துள்ளன. இதற்கு பதிலடியாக, 60க்கும் மேற்பட்ட நாடுகள் ஏற்கனவே எரிசக்தி சேமிப்பு விதிகளை அமல்படுத்தியுள்ளன.

சமீபத்தில் சிங்கப்பூர் பிரதமர் தம் மக்களை கடினமான காலங்களுக்கு தயாராக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். நாம் மிகப் பெரிய நாடு. நமது பிரதமர் அடுத்த ஒரு வருடத்தில் எரிசக்தியை சேமிக்கும்படி நம்மை கேட்டுள்ளார். இத்தகைய தருணங்களில், தேசியப் பொறுப்பு கட்சி அரசியலைத் தாண்டி உயர வேண்டும்.

வாஜ்பாயின் புகழ்பெற்ற வார்த்தைகளில் கூறியது போல் — “அரசுகள் வரும், போகும்... ஆனால் நாடு தொடரும்.” 1962 சீனப் போரின்போது நாம் வீடுகளில் இருந்த தங்கத்தை நன்கொடையாக அளித்தோம். 1965ல் உணவு தானியங்கள் பற்றாக்குறை ஏற்பட்டபோது, லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் ஒவ்வொரு வாரமும் ஒரு உணவைத் தவிர்க்கும்படி மக்களிடம் கேட்டார். இன்று இந்தியா அத்தகைய தியாகத்தை எதிர்பார்க்கவில்லை. ஆனால் நாம் நிச்சயம் நமது நாட்டுக்காக சிறிய சேமிப்புகளைச் செய்ய வேண்டும்.

ஒரு மையவாதியாக, எனது அரசியல் கூட்டணிகளைத் தாண்டி நல்ல வேலைகளைப் பாராட்டுகிறேன். பிரதமரின் தலைமையில் கடந்த பத்தாண்டுகளில் சூரிய மற்றும் காற்று எரிசக்தி திறன் பெரிதும் அதிகரித்துள்ளது. நிலக்கரி எரிவாயு மாற்றம், புதுப்பிக்கத்தக்க மற்றும் அணு எரிசக்தி ஆகியவற்றில் சமீபத்திய முதலீடுகள் என்னை ஊக்கப்படுத்துகின்றன. ஆனால் தியாகம் மக்களிடமிருந்து மட்டும் எதிர்பார்க்கப்படக் கூடாது. அரசுகளும் பங்கு வகிக்க வேண்டும். எனவே பிரதமரை அனைத்து முதலமைச்சர்களுடனும் தேசிய உச்சி மாநாடு நடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒன்றிணைந்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும்.

உடனடியாக இரண்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்:

1. பெட்ரோல், டீசலில் உள்ள VAT உள்ளிட்ட மாநில வரிகளை குறைக்க வேண்டும்.

2. ரயில், மெட்ரோ, பேருந்து கட்டணங்களை குறைக்க வேண்டும் — இதனால் மக்கள் தனியார் வாகனங்களை விட்டு பொதுப் போக்குவரத்துக்கு மாறலாம்.

இன்று சேமிக்கப்படும் ஒவ்வொரு அலகு எரிசக்தியும் நாளை இந்தியாவை வலுப்படுத்தும். சேமிக்கப்படும் ஒவ்வொரு துளி எண்ணெயும் ஏழை இந்தியரை பணவீக்கத்திலிருந்து பாதுகாக்கும். இந்த நெருக்கடியை ஒன்றாக எதிர்கொண்டால், இந்தியா வலுவாக வெளிவரும்.

ஜெய்ஹிந்த்.

இவ்வாறு கமல் பேசி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (2)

yts
2026-05-23 16:55:35

தயவு செய்து இவர் படத்தை போட்டு எரிச்சலை எங்களை ஆளாக்க வேண்டாம்


S Subramanian
2026-05-23 06:16:09

Good. Now you speak in in clear nationalist tone. without your usual confusing foolish jargon. Come out of DMK alliance