'பெத்தி' ரிலீஸை தொடர்ந்து மூன்று மாதம் ஓய்வெடுக்கத் தயாராகும் ராம்சரண்
தெலுங்கில் நடிகர் ராம்சரண் நடிப்பில் சமீபத்தில் 'பெத்தி' திரைப்படம் வெளியானது. புச்சிபாபு சனா இயக்கத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வெளியான நாளிலிருந்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த படம் தற்போது 300 கோடியைத் தாண்டி வசூலித்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ராம்சரண். இந்த 'பெத்தி' திரைப்படம் மல்யுத்த போட்டியை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இதற்காக கடந்த இரண்டு வருடங்களாகக் கடுமையான பயிற்சிகளை ராம்சரண் மேற்கொண்டு வந்தார்.
அதுமட்டுமல்ல, படப்பிடிப்பு தளத்திலும் அவர் நிறைய காயங்களையும் வேதனைகளையும் சந்தித்தார். ஆனாலும் படப்பிடிப்பு தடைப்படக்கூடாது என்பதற்காக அவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு இந்த படத்தில் நடித்து முடித்தார். தற்போது படம் வெளியாகி வெற்றி பெற்றுள்ள நிலையில், தனது குடும்பத்தினருக்காகவும் தன்னுடைய ஓய்வுக்காகவும் மூன்று மாதங்களை ராம்சரண் ஒதுக்கியிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதில் தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்குச் சுற்றுலா செல்ல இருக்கிறார் என்றும், சில மருத்துவ சிகிச்சைகளை அவர் மேற்கொள்ள இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.