பிளாஷ்பேக் : ‛நோ' சொன்ன சத்யராஜ், சாதித்த ஆர்.கே.செல்வமணி
பின்னாளில் பல வெற்றிப் படங்களை இயக்கிய ஆர்.கே.செல்வமணி திரைப்படக் கல்லூரியில் படித்து முடித்துவிட்டு மணிவண்ணனிடம் உதவியாளராக பணியாற்றினார். மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்த பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
தனியாக படம் எடுக்க விரும்பிய ஆர்.கே.செல்வமணி சத்யராஜிடம் கால்ஷீட் வாங்கித் தரும்படி மணிவண்ணனிடம் கேடடார். அதற்கு மணிவண்ணன் “எனக்கு வேண்டுமானால் நான் கேட்கலாம், அடுத்தவர்களுக்கு கேட்டால் அது சரியாக வராது நீயே போய் கேட்டுக் கொள்” என்று கூறிவிட்டார்.
சில நாட்களுக்கு பிறகு சத்யராஜை வீட்டில் சந்தித்து கால்ஷீட் கேட்டார் செல்வமணி. அப்போது சத்யராஜ் “நான் புதுமுக இயக்குனர்களின் படத்தில் நடிப்பதில்லை. நீங்கள் ஒரு படம் இயக்கி வெற்றி பெற்று வாருங்கள் நடிக்கிறேன்” என்று கூறிவிட்டார். இது ஆர்.கே.செல்வமணி மனதில் ஆறாத காயத்தை ஏற்படுத்தியது. முதல் படத்தை வெற்றிகரமாக எடுத்துக் காட்டுவது, இனி சத்யராஜை வைத்து படம் இயக்குவதில்லை என்று மனதில் உறுதி கொண்டார்.
மிகுந்த போராட்டத்திற்கு பிறகு விஜயகாந்திடம் தனது கதையை சொல்லி அவரை இம்பரஸ் பண்ணி படம் இயக்கினார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அது 'புலன் விசாரணை'. சத்யராஜ் நடிக்க செல்வமணி கேட்ட கதை 'புலன் விசாரணை'தான். அதன்பிறகு சத்யராஜை வைத்து ஆர்.கே.செல்வமணி படம் இயக்கவில்லை. ஆனால் சத்யராஜ் பின்னர் புதுமுக இயக்குனர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.