மீண்டும் கதை நாயகியாக நடிக்கும் லிஸி ஆண்டனி
தொழில் அதிபராக இருந்து நடிகையாக மாறியவர் லிஸி ஆண்டனி. சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த லிஸி 'தங்க மீன்கள்' படத்தின் மூலம் கவனம் பெற்றார். பிறகு தரமணி, பேரன்பு, பரியேறும் பெருமாள், ப்ளூ ஸ்டார், கட்டா குஸ்தி 1, கட்டா குஸ்தி 2 உள்பட பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். கடைசியாக அவர் நடித்த 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' படம் வெளியானது. தற்போது ஒரே நேரத்தில் 6 படங்களில் நடித்து வருகிறார். பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பில் 6 இயக்குனர்கள் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இது அவருக்கு 75வது படம்.
ஏற்கெனவே கடந்த ஆண்டு வெளியான 'குயிலி' படத்தில் கதை நாயகியாக நடித்தார். மதுவிற்கு எதிராக போராடும் குடும்ப பெண்ணாக நடித்தார். தற்போது 'கார்க்கியின் தாய்' என்ற படத்தில் மீண்டும் நாயகியாக நடிக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: எந்தவொரு சினிமா பின்புலமும் இல்லாமல் நடிக்க வந்தேன். தமிழில் மட்டுமே 75 படங்களை முடித்துவிட்டேன். ஷிப்பிங் துறையில் மாதம் பல லட்ச ரூபாய் சம்பாதித்து வந்த நான் திடீரென்று நடிக்க வந்தபோது, பலர் என்னை பயமுறுத்தினர். எனினும், தொடர்ந்து தன்னம்பிக்கையுடன் நடித்தேன்.
'கட்டா குஸ்தி' படத்தின் 2 பாகங்களும் என்னை அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கி விட்டது. 'வேட்டுவம்' என்ற படத்தில் சோபிதா துலிபாலாவின் அம்மாவாக நடிக்கிறேன். எதிர்காலத்தில் திரைப்படம் இயக்கும் எண்ணம் இருக்கிறது. 'குயிலி' படத்தை போல், 'கார்கியின் தாய்' என்ற படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறேன். என்றார்.