காவி உடை சர்ச்சையில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்
மலையாளத்தில் வெளியான 'ஒரு அடார் லவ்' படத்தில் கதாநாயகியாக நடித்து, தனது கண் சிமிட்டல் மூலம் புருவ அழகி என பெயர் பெற்றவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். அதன்பிறகு ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்தவர், கடந்த வருடம் அஜித் நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்திலும் வில்லியாக நடித்திருந்தார்.
இந்த நிலையில், ஒரு பிரபல அழகு பொருள் நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ள பிரியா பிரகாஷ் வாரியர், சமீபத்தில் அந்த நிறுவனத்தின் நோக்கம் மற்றும் தீம் நிறம் காவி என்பதால், அதற்கு பொருத்தமாக காவி நிற ஆடை அணிந்து கேரளாவில் நடைபெற்ற அதன் விளம்பர நிகழ்வில் கலந்து கொண்டார். அந்த நிகழ்வின் போது அங்கிருந்த செய்தியாளர் ஒருவர், ஏன் காவி உடை அணிந்துள்ளீர்கள் ? கேரளாவில் விடுக்கப்பட்டுள்ள ஆரஞ்சு அலர்ட் காரணமா? என்று கேட்டார்.
அதற்கு பதில் அளித்த பிரியா பிரகாஷ் வாரியார், இந்த நிறுவனத்தின் பிராண்ட் நிறம் காவி என்பதால், அதற்கு ஏற்ப நான் இந்த ஆடையை தேர்ந்தெடுத்தேன் என்று தெளிவாக பதில் கூறினார்.
ஆனாலும், அவரது இந்த ஆடைத்தேர்வை வைத்து, காவி நிறம் என்றாலே அதை அரசியல் ரீதியாக அணுகும் போக்குடன் தேவையில்லாமல் அரசியல் சாயம் பூசுவதையும் கேள்வி கேட்பதையும் சோசியல் மீடியாவில் பலரும் விவாத பொருளாக மாற்றி உள்ளனர்.