PUBLISHED ON : ஜூன் 03, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'ஒருவர், ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை செய்யும்போது, அதை பாராட்ட வேண்டுமே தவிர, கிண்டலடிக்க கூடாது...' என, மஹாராஷ்டிரா துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவாரை விமர்சிப்பவர்களை பற்றி வருத்தத்துடன் கூறுகின்றனர், அவரது ஆதரவாளர்கள்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. சில மாதங்களுக்கு முன், அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற அஜித் பவாருக்கு, அதிகாரி கள் பூங்கொத்துகளை பரிசாக அளித்தனர்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய அஜித் பவார், 'தயவுசெய்து எனக்கு பூங்கொத்துகளை யாரும் பரிசளிக்க வேண்டாம்; இதனால், யாருக்கும் எந்த பயனும் இல்லை. பூங்கொத்துகளுக்கு பதிலாக நல்ல புத்தகங்களை பரிசளியுங்கள்...' என்றார்.
இதைத் தொடர்ந்து தற்போது நடக்கும் நிகழ்வுகளில், அஜித் பவாருக்கு பலரும் புத்தகங்களைத் தான் பரிசாக அளிக்கின்றனர்; இதனால், அவரது வீட்டில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் குவிந்து விட்டன.
இதை கிண்டலடித்த எதிர்க்கட்சியினர், 'அஜித் பவார், இன்னும் சில நாட்களில் இவற்றை எல்லாம், பழைய பேப்பர் கடையில் எடைக்கு போட்டு விடுவார்...' என்கின்றனர்.
'புத்தகங்களை எடைக்குத் தான் போட வேண்டும் என சட்டம் இருக்கிறதா... நுாலகங்களுக்கு கொடுக்க முடியாதா; எதிர்க்கட்சியினர் புத்தி ஏன் இப்படி போகிறது...' என, அஜித் பவார் ஆதரவாளர்கள் ஆவேசப்படுகின்றனர்.


