PUBLISHED ON : மே 15, 2026 12:54 AM

'இன்னும் புதிய முதல்வர் பொறுப்பேற்கவில்லை. அதற்குள் இந்த அதிகாரிகள் ஏன் இவ்வளவு அவசரப்படுகின்றனர்...' என, கோபத்துடன் கேள்வி எழுப்புகின்றனர், கேரள மாநிலத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர்.
கேரளாவில் தொடர்ச்சியாக இரண்டு முறை வெற்றி பெற்று, முதல்வராக பதவி வகித்த பெருமைக்குரியவர், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மூத்த தலைவர் பினராயி விஜயன். இதற்கு முன், காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்ட் கட்சிகள் மாறி மாறித் தான் ஆட்சி செய்து வந்தன.
மூன்றாவது முறையும் வெற்றி பெற்று சாதனை படைத்துவிட வேண்டும் என்ற பினராயி விஜயனின் ஆசைக்கு முட்டுக்கட்டை போட்டது, சமீபத்தில் நடந்த கேரள சட்டசபை தேர்தல். இதில், காங்கிரஸ் வெற்றி பெற்றது.
காங்கிரஸ் சட்டசபை குழு தலைவராக, அந்த கட்சியின் சதீஷன் தேர்வு செய்யப்பட்டார். இன்னும் அவர் முதல்வராக பதவியேற்கவில்லை. ஆனால், அதற்குள் பினராயி விஜயனுக்கு, கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் ஒதுக்கப்பட்டிருந்த அரசு பங்களாவை காலி செய்யும்படி, அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, அவரும் பங்களாவை காலி செய்து, கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் உள்ள குடியிருப்புக்கு சென்று விட்டார். 'தொடர்ச்சியாக, 10 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்த பினராயி விஜயனுக்கு, அரசு பங்களாவை காலி செய்ய, இரண்டு மாதமாவது அவகாசம் வழங்கியிருக்கலாமே...' என கொந்தளிக்கின்றனர், மார்க்சிஸ்ட் நிர்வாகிகள்.





