மாற்றுத்திறனாளி மூளைச்சாவு; இருவருக்கு கிடைத்த மறுவாழ்வு
மாற்றுத்திறனாளி மூளைச்சாவு; இருவருக்கு கிடைத்த மறுவாழ்வு
UPDATED : ஜூன் 27, 2026 07:40 AM
ADDED : ஜூன் 27, 2026 12:47 AM

தர்மபுரி: காரிமங்கலம் அருகே, விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாற்றுத்திறனாளியின், இரு உறுப்புகளை அவரது குடும்பத்தினர் தானம் செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், தலையன்கொட்டகை கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணு, 61. பார்வையற்ற மாற்றுத்திறனாளி. இவரின் மனைவி முருகம்மாள். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
ஜூன் 23ல், காரிமங்கலம் அருகே, உறவினருடன் பைக்கில் சென்றபோது, நிலைத்தடுமாறி விழுந்ததில், கண்ணு காயமடைந்தார். தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார்.
அவரது கல்லீரல், கணையத்தை தானமாக அளிக்க, குடும்பத்தினர் முன்வந்தனர். கண்ணுவின் உடலுக்கு தர்மபுரி அரசு மருத்துவ கல்லுாரி நிர்வாகம் சார்பில் முதல்வர் மனோகர் தலைமையில், அரசு மரியாதை அளிக்கப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சொந்த கிராமமான தலையன்கொட்டகையில், உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
