தி.மு.க.,விடம் தேசப்பற்றை எதிர்பார்க்க முடியுமா?
தி.மு.க.,விடம் தேசப்பற்றை எதிர்பார்க்க முடியுமா?
PUBLISHED ON : ஆக 04, 2026 12:00 AM

கே.என்.ஸ்ரீதரன், கலிபோர்னியா மாகாணம், அமெரிக்காவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'வந்தே மாதரம்' பாடலுக்கு, தேசிய கீதத்துக்கு இணையான அந்தஸ்து வழங்கும் சட்டம் குறித்து பார்லிமென்ட் விவாதத்தில், தி.மு.க., - எம்.பி., ராஜா இச்சட்டத்தை கடுமையாக எதிர்த்து, 'வீர சாவர்க்கரும், வந்தே மாதரம் பாடலும் தான், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு காரணம்' என்று பேசியுள்ளார்.
அதேபோன்று, 'வந்தே மாதரம் பாடல், நாட்டில் பிளவை ஏற்படுத்தும்' என்று கூறியுள்ளார், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.
இந்திய சுதந்திர போராட்ட வரலாறு தெரியாத தி.மு.க.,வும், அதற்கு எஜமான விசுவாசம் காட்டும், வி.சி.க., - கம்யூனிஸ்ட் கட்சியினரும் வந்தே மாதரம் பாடலை எதிர்ப்பதில் ஆச்சரியமில்லை.
தாய் மண்ணை நேசிப்பதும், அன்னையாக பாவித்து வணங்குவதும் இந்நாட்டின் கலாசாரம்.
ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில், விடுதலையின் முழக்கமாக நாடெங்கும் ஒலித்த ஒரே பாடல், வந்தே மாதரம் தான்!
வடமாநிலங்களில் உரக்க ஒலித்த இப் பாடல், தென்மாநிலங்களிலும் மக்களி டையே சுதந்திர எழுச்சியை ஏற்படுத்தியது.
காமராஜர், ராஜாஜி, சஞ்சீவ ரெட்டி, வ.உ.சிதம்பரனார், பக்தவத்சலம், முத்துராமலிங்க தேவர் போன்ற பெரும் தலைவர்கள், தங்களை சுதந்திர வேள்வியில் ஈடுபடுத்தி, ஆங்கிலேயருக்கு எதிராக, வந்தே மாதரம் என்று முழங்கிக் கொண்டிருந்தனர்.
ஆனால், ஆங்கிலேயருக்கு அடிவருடிக் கொண்டிருந்த திராவிட கழகத்தின் முன்னோடியான நீதிக்கட்சியோ, ஆரிய - திராவிட இன வாதத்தில் மூழ்கி, மக்களை பிளவுபடுத்தும் பிரிவினைவாத கருத்துக்களை பரப்பிக் கொண்டிருந்தது.
உண்மை இவ்வாறு இருக்க, நீதிக்கட்சியின் வழியில் வந்த தி.மு.க., எப்படி தேச விடுதலைக்கு வித்திட்ட வந்தே மாதரம் பாடலை போற்றும்?
அவர்கள் மரபணுவிலேயே தேச விரோத சிந்தனைகள் இருக்கும்போது, அவர்களிடம் எப்படி தேசப்பற்றை எதிர்பார்க்க முடியும்?
---------
நேர்மையுடன் செயல்படுமா கர்நாடக அரசு?
எஸ்.ஸ்ரீனிவாசன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசியல்வாதிகளை மீண்டும் சுறுசுறுப்படையச் செய்திருக்கிறது, காவிரி பிரச்னை. எப்போதெல்லாம் மழை பொய்த்துப் போகிறதோ, அப்போதெல்லாம் கர்நாடகா மற்றும் தமிழக அரசியல்வாதிகள், காவிரி பிரச்னையை கையில் எடுத்து, அரசியல் செய்ய துவங்கி விடுவர்.
காவிரி நதிநீர் பிரச்னைக்கு நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டு, அதன் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில், காவிரி நீர் பங்கீட்டைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு வழங்கியுள்ளது, உச்ச நீதிமன்றம்.
ஆணையத்தின் தீர்ப்பிற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பது சட்டத்தின் ஆட்சி. ஆணையம் உத்தரவிட்ட பின்பும், 'நீரை திறக்க மாட்டோம்' என்று கூறுவது, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறும் செயலாகும்.
இச்சூழலில், இரு மாநில முதல்வர்களும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதோ அல்லது அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதிப்பதோ, ஒரு தவறான முன்னுதாரணத்தை உருவாக்கிவிடும். பொதுவாக ஓர் ஆணையம் அமைக்கப்பட்ட பின், அதன் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதே முறையானது.
அதை விடுத்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது, அரசியல் சாசன ரீதியாக அமைக்கப்பட்ட ஆணையத்தை, இரு மாநில அரசுகளும் மதிக்காமல் நடப்பதாகவே அமையும்.
எனவே, இதில் தமிழக அரசு மிகுந்த கவனத்துடன் செயல்படுவது அவசியம். அதேபோன்று, இரண்டு தேசிய கட்சிகளின் இரட்டை நிலைப்பாடும் இங்கு முகம் சுளிக்க வைக்கிறது.
கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ், 'நீரை திறக்க முடியாது' என்கிறது; தமிழகத்தில் ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருக்கும் அதே காங்கிரஸ், 'நீரை திறக்க வேண்டும்' என்கிறது.
தமிழக பா.ஜ.,வினர், 'நீரை திறக்க வேண்டும்' என்றும், கர்நாடக பா.ஜ.,வினரோ, 'நீரை திறக்கக் கூடாது' என்றும் போராட்டம் நடத்துகின்றனர்.
இத்தகைய இரட்டை நிலைப்பாடுகள், மக்களின் கவனத்தை திசைதிருப்பும் அரசியல் நாடகமே அன்றி வேறென்ன?
எனவே, இவ்விஷயத்தில் உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தலையிட்டு, காவிரி நதிநீர் ஆணையத்திற்கான முழு அதிகாரத்தையும், அதன் தீர்ப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தையும்,கர்நாடக அரசுக்கு வலியுறுத்த வேண்டும்.
மாநில அரசுகளும் காவிரி பிரச்னையை தங்கள் அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தாமல், டெல்டா விவசாயிகளின் தேவையை உணர்ந்து, நேர்மையுடன் செயல்பட வேண் டும்!
-------------
அபராதத்தை கைவிடுமா வங்கிகள்?
ஏ.பி.திருவடி பியோரியா, இல்லினாய்ஸ் மாகாணம், அமெரிக்காவிலிருந்து அனுப் பிய, 'இ - மெயில்' கடிதம்: நடுத்தர மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு, ஒவ்வொரு ரூபாயும் முக்கியமானது. சேமிப்பு கணக்குகள் என்பது நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதற்கும், மக்கள் தங்களின் கடின உழைப்பில் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்கவும் உருவாக்கப் பட்டவை.
ஆனால், நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச இருப்பை பராமரிக்கவில்லை என்ற காரணத்திற்காக, வங்கிகள் அபராதம் விதிப்பது, இந்த நோக்கத்தையே தோல்வியடையச் செய்கிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும், குறைந்தபட்ச இருப்பு இல்லாததற்காக வங்கிகள், 26,100 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை மக்களிடம் அபராதமாக வசூலித்துள்ளன.
இத்தொகையின் பெரும்பகுதி, அன்றாட குடும்பச் செலவுகளை சமாளிக்கப் போராடும் சாதாரண மக்களிடமிருந்தே வசூலிக்கப்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் கொண்ட தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதித்து, வங்கிகள் லாபம் ஈட்டுவது எந்த வகையில் நியாயம்?
வங்கிகள் தங்களின் நியாயமான செலவுகளை ஈடுசெய்வதற்கு உரிமை பெற்றுள்ளன. ஆனால், ஏழைகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட மக்களை அதிகமாகப் பாதிக்கும் வகையில், இருப்பு தொகைக்கான கட்டணங்களை விதிப்பதும், குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாததை காரணம் காட்டி அபராதம் விதிப்பதும் மனிதநேயமற்ற செயலாகவே தோன்றுகிறது.
குறைந்தபட்ச இருப்பு இல்லாததற்கான அபராதத்தை ரத்து செய்வதன் வாயிலாக, வங்கிகள் நிதி உள்ளடக்கத்தை வலுப்படுத்தும்; வங்கி மீதான மக்களின் நம்பிக்கையை உயர்த்தும் என்பதை மனதில் கொண்டு, நிதியமைச்சகம் இதுகுறித்து வங்கிகளுடன் ஆலோசிக்க வேண்டும்!
