PUBLISHED ON : மார் 30, 2026 03:43 AM

தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக கூறி, திருப்பூர் மாநகர் மாவட்ட, அ.தி.மு.க., சார்பில், 'திருப்பூர்' குமரன் சிலை முன், சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசும்போது, 'முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்பதை, ஒரு ஸ்டாலின் அல்ல, ஒரு கோடி ஸ்டாலின் வந்தாலும் தடுக்க முடியாது. ஒரு அமாவாசை முடிந்து, பவுர்ணமி வந்தால், முதல்வராக பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும். அவரை, முதல்வர் என்ற சிம்மாசனத்தில் அமர வைக்க, நமக்கு துணையாக, நம் படையை வழி நடத்தும் கிருஷ்ணராக, பிரதமர் மோடி முன் நின்று செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
'தேர்தல் களத்தில் விளையாட, வில் வித்தையில் சிறந்தவரான அர்ஜுனராக, பழனிசாமி இருக்கிறார். நாம் போடும் ஒவ்வொரு ஓட்டும், தி.மு.க.,வின் குடும்ப ஆட்சிக்கு வைக்கக் கூடிய வேட்டாக இருக்க வேண்டும்' என்றார்.
இதை கேட்ட தொண்டர் ஒருவர், 'சீட் கிடைக்காத நம் ஆட்களே, நம்ம வேட்பாளர்களுக்கு வேட்டு வச்சுடாம பார்த்துக்கணும்...' என, முணுமுணுக்க, சக தொண்டர்கள் ஆமோதித்த படியே கலைந்தனர்.
