PUBLISHED ON : ஜூலை 22, 2024 12:00 AM

அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக் குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை:
தமிழக
அரசின் கோரிக்கையை ஏற்று, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு
நாணயத்திற்கு மத்திய நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. அதே போல, அரசு
மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று, கருணாநிதி வெளியிட்ட அரசாணை - 354ஐ
அமல்படுத்த, 19,000 அரசு மருத்துவர்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.
ஆடி
மாதம் நன்கொடை கேட்பவர்களிடம், 'கூழ் குடிக்க வேணும்னா வரேன்... கொடுக்க
ஒண்ணுமில்லை'னு சொல்ற, சினிமா பட,'காமெடி' சீன் தான் ஞாபகத்துக்கு வருது!
தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பேட்டி:
தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கில் ஆங்காங்கே சிறு சிறு பிரச்னை வரத் தான் செய்கிறது. ஆனால், அ.தி.மு.க., ஆட்சியில் இருந்ததை போல் இப்போது இல்லை. குற்றங்கள் நேரிடும் போது, அரசு நடுநிலையோடு விசாரித்து, போலீசார் வாயிலாக குற்றவாளிகளை கண்டறிந்து, நீதிமன்றத்துக்கு அனுப்புகிறது. செம்மையாக ஆட்சி புரியும் ஆற்றல், உதயநிதியிடம் உள்ளது. அவர் துணை முதல்வராக வருவதை வழிமொழியவும் தயாராக உள்ளோம்.
'நான் துணை முதல்வரா வருவேன்னு பலரும் இப்பவே துண்டு போடுறாங்க'னு, தி.மு.க.,வில பலரும் சொல்றது உண்மை தான் போலிருக்கு!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை:
மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு, ஹிந்தி, சமஸ்கிருதம் மொழிகளில் தான் பெயர் சூட்டப்படுகிறது. அத்தகைய திட்டங்கள், மாநிலங்களில் செயல்படுத்தும் போது, அந்தந்த மாநில மொழிகளில், மொழி பெயர்க்கப்பட்டு அழைக்கப்பட்டால் தான், அந்த திட்டங்களின் பலன்கள் மக்களை சென்றடையும்.
எப்படி... போன ஆட்சியில் எல்லா திட்டத்துக்கும் முதல் வார்த்தையா, 'அம்மா' சேர்த்துக்குனீங்களே அப்படியா?
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை:
விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தல் பிரசாரத்தில், முன்னாள் முதல்வரை, எஸ்.சி., பிரிவு ஜாதி பெயரை சொல்லி, ஒரு கட்சியின் தலைவர் பாடல் பாடியுள்ளார். ஆனால், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேடைகளில், ஜாதி ஒழிப்பு பேசுபவர்கள், செயலில் ஜாதி வன்மம், பிற்போக்குத் தனத்துடன் உள்ளனர். ஜாதி வன்மத்துடன் செயல்படுவோர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எல்லாரையும் உரசுற மாதிரி, நாம் தமிழர் என்ற கட்சியின் தலைவர் சீமான், போற போக்குல டாக்டரையும் சீண்டி இருக்கார்... அதோட வெளிப்பாடு தானோ இது?