Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

PUBLISHED ON : மார் 12, 2026 02:56 AM


Google News
Latest Tamil News
பா.ஜ.,மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன் பேட்டி: சிவகங்கை, 'லாக்கப்' மரணத்திற்கு காரணமான, காவல் துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றை எல்லாம் மாற்ற வேண்டும் என, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒரு அரசாணை போட்டிருந்தார். அதாவது, 'தென் மாவட்டங்களில் உள்ள காவல் துறையினரை, மேற்கு, வடக்கு அல்லது சென்னை மண்டலத்தில் பணியில் அமர்த்த வேண்டும். மேற்கு மண்டலங்களில் உள்ளவர்களை, தென் மாவட்டங்களுக்கு மாற்ற வேண்டும்' என, உத்தரவிட்டிருந்தார். ஆனால், அந்த உத்தரவுகளை, தி.மு.க.,வினர் காற்றில் பறக்க விட்டு விட்டனர். 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' திட்டத்தை கூடத்தான் கருணாநிதி ஆதரித்தார்... ஆனாலும், அவரது மகன் ஸ்டாலின், அதை கடுமையா எதிர்க்கிறாரே!

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கை: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான போலீஸ் நிலையங்களில், ஒரு குறிப்பிட்ட ஜாதியினரே பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருப்பது, பல்வேறு மனித உரிமை மீறல் சம்பவங்கள் தடையின்றி நடக்க முக்கிய காரணமாக அமைகிறது. இத்தகைய போக்கு குறித்து ஏற்கனவே, நாம் சுட்டிக்காட்டிய போது, மாவட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் மறுப்பு அறிக்கை வெளியிட்டனர். இப்போது, 'லாக்கப்'பில் மீண்டும் ஒரு உயிர் பறிபோயிருப்பது, அந்த மறுப்பு அறிக்கைகள் யாவும் உண்மைக்கு மாறானவை என்பதை உறுதிப் படுத்துகின்றன.

எந்த போலீஸ் அதிகாரியாவது, தங்கள் துறை மீதான தவறுகளை ஒப்புக் கொள்வாரா?

தமிழக துணை முதல்வர் உதயநிதி பேச்சு: உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத்திறனாளிகளுடைய குரல் எதிரொலிக்க வேண்டும் என, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக, நியமன அடிப்படையில், மாற்றுத்திறனாளிகளை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்வு செய்யும் முறையை, நம் முதல்வர் அறிமுகப்படுத்தி, அதை செயல்படுத்தியும் இருக்கிறார்.

அதே மாற்றுத்திறனாளிகள், தங்களது கோரிக்கைகளுக்காக போராடியபோது, அவங்களை குண்டுகட்டாக துாக்கி சென்று, நள்ளிரவில் சென்னைக்கு வெளியில் விட்டுட்டு வந்தது ஏன்?

தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி: தமிழகத்தில் நடக்கும் சமீபகால வன்முறை சம்பவங்களுக்கு, போதை பொருள் புழக்கமே முக்கிய காரணம். ஒரு மாநிலத்தில் இருந்து, மற்றொரு மாநிலத்துக்கு போதை பொருள் கடத்தப்படுவதை தடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. தமிழகத்தை சீரழிக்க வேண்டும் என்ற நோக்கில், இந்த போதை பொருள் புழக்கம் துாண்டப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.

தமிழக அரசின், 'டாஸ்மாக்'கில் விற்கப்படுவது, சத்து டானிக் என்று நினைச்சிட்டாரோ?





      Our Apps Available On




      Dinamalar

      Follow us