PUBLISHED ON : மே 11, 2026 01:45 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேட்டி:
வருங்கால முதல்வர் பழனிசாமி நல்லாசியுடன், நான் இதுவரை எம்.எல்.ஏ.,வாக இருந்த திருமங்கலம் தொகுதி மக்களுக்கும், மதுரை மாவட்ட வளர்ச்சிக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் தொடர்ந்து தொய்வின்றி முன்பை விட ஆழமாக, உறுதியாக, விசுவாசத்துடன் பணியாற்றுவேன். ஆளும் கட்சியாக நாங்கள் இருந்தபோது பல திட்டங்களை, மக்கள் இல்லத்துக்கே கொண்டு சேர்த்து, மக்கள் இதயங்களில் இடம் பிடித்தோம். இனி, ஆளுங்கட்சி செய்ய தவறியதை சுட்டிக்காட்டி வளர்ச்சி திட்டங்களை பெற்றுத்தர, முன்பை விட வேகமாகவும், விசுவாசத்துடனும் பணியாற்றுவேன்.
அது சரி... இதுவரை, ஆளுங்கட்சியாக யார் வர்றதுன்னு அடிச்சுக்கிட்ட அ.தி.மு.க.,வும் தி.மு.க.,வும், அடுத்து யார் சிறந்த எதிர்க்கட்சி என்ற போட்டிக்கு மாறிடுவாங்களோ?
தமிழக பா.ஜ., முன்னாள் செய்தி தொடர்பாளர் பிரசாத் அறிக்கை:
பா.ஜ., செய்தி தொடர்பாளராக, முழு சுதந்திரத்துடன் என்னை செயல்பட அனுமதித்த தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, தற்போதைய மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோருக்கு நன்றி. அதே சமயம், தமிழக பா.ஜ.,வின் மோசமான தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று, தலைவர் பதவியில் இருந்து நயினார் நாகேந்திரன் விலக வேண்டும். அதே போல, தன் தொடர் தோல்விக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் முருகனும், தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இன்னும் யார் யாருக்கு, சொந்த கட்சிக்காரங்க மேலேயே புகைச்சலா இருக்கோ... தமிழகத்தில் பா.ஜ., அதிகம் வளராம போகுறதுக்கு, இவர் தான் மிகப்பெரிய சாட்சி போலிருக்கு!
தேசிய முன்னேற்ற கழகத்தின் தலைவர், ஜி.ஜி.சிவா அறிக்கை: கம்யூனிஸ்ட்கள் என்று சொன்னாலே, நாடு முழுதும் மக்கள் மத்தியில் ஒரு நன்மதிப்பு இருந்தது. ஆனால், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் பதவி சுகத்திற்காகவும், சமூக நீதியை காற்றில் பறக்க விட்டும், த.வெ.க., ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்துள்ளது, தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம்.
அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க முடிவு செய்ததுடன் ஒப்பிட்டு பார்த்தால், கம்யூ.,க்களின் செயல் துரோகமா தெரியாது!
மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் தேசிய பொதுச் செயலர், எம்.ஏ.பேபி பேட்டி: உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் அரசியல் மரபுகளின்படி, தனிப்பெரும் கட்சியையோ அல்லது தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை யோ ஆட்சி அமைக்க அழைப்பது கவர்னரின் கடமை. ஆனால், தமிழக கவர்னர் அர்லேகர், 'விஜய் எவ்வாறு பெரும்பான்மையை நிரூபிப்பார்?' என்று கேள்வி எழுப்பியது முறையற்றது.
பெரும்பான்மையை நிரூபிக்கிறதுக்காக, குதிரை பேரம் நடந்துடக் கூடாதுன்னு கவர்னர் விழிப்பாக இருந்தது தப்புன்னு சொல்றாரா?
