PUBLISHED ON : ஜூன் 13, 2026 12:21 AM

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி பேட்டி:
போதை பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., லீமா ரோஸின் சகோதரர் ஜான் பிரிட்டோ, பல ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டு, பல ஆயிரம் கோடி ரூபாய் பரிவர்த்தனை நடத்தியிருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஜான் பிரிட்டோ, லீமா ரோஸ், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் மனைவி டெய்சி ஆகியோர் மீது கேரளாவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊழல், போதை இல்லாத ஆட்சியை தருவதாக முதல்வர் விஜய் வாக்குறுதி கொடுத்திருப்பதால், சம்பந்தப்பட்டவர்கள் நிரபராதி என்பதை நிரூபிக்கும் வரை, ஆதவ் அர்ஜுனாவை அமைச்சர் பதவி, கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி வைக்க வேண்டும்.
ஆதவ் அர்ஜுனா குடும்பத்தினர் மீது கேரளாவில் வழக்கு பதிவானதற்கு, அவர் ஏன் பதவி விலகணும்?
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
தமிழகத்தில் ஜல்லி, சிமென்ட், இரும்பு கம்பி, எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது, பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கட்டுமான தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.ஏழை, நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவு சிதையாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விலை உயர்வு, அரசு கட்டுமான திட்டங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், மத்திய, மாநில அரசுகள் கண்டிப்பா நடவடிக்கை எடுத்தே ஆகணும்!
தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கை: சுவாமிமலை வெண்கல சிற்ப கலைக்கு, நினைவு தபால் முத்திரை வெளியிட்டு, தேசிய அங்கீகாரம் வழங்கிய பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றிகள். தமிழ் பண்பாடு, பாரம்பரியம் மற்றும் கலை மரபுகளின் மீது பிரதமர் கொண்டுள்ள மரியாதைக்கு, இத ு மற்றொரு சான்று.
வாஸ்தவம் தான்... அப்படியே, மதுரை, 'எய்ம்ஸ்' மருத்துவ மனையையும் சீக்கிரம் கட்டி முடிச்சு பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால், பிரதமர் மோடியை தமிழ் சமூகம் இன்னும் வாழ்த்தும்!
வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி அறிக்கை:
'திருமண பதிவு செய்யும்போது, பெற்றோர் நேரில் வர வேண்டும் என வலியுறுத்தும் சார்- - பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக பத்திரப்பதிவு துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கூறியிருப்பது அதிர்ச்சியும், கவலையும் அளிக்கிறது. திருமண பதிவின்போது, பெற்றோர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் உடனிருப்பது தான், பெண்கள் பாதுகாப்பிற்கான முக்கியமான உத்தரவாதமாக விளங்குகிறது.
தமிழகத்துல காதல் திருமணங்களே நடக்கக் கூடாதுன்னு நினைக்கிறாரோ?
