செடிகள் வளர்ப்பது உடற்பயிற்சி; மகிழ்ச்சியும் கிடைக்கும்!
செடிகள் வளர்ப்பது உடற்பயிற்சி; மகிழ்ச்சியும் கிடைக்கும்!
PUBLISHED ON : மே 08, 2026 12:00 AM

தன் வீட்டு மொட்டை மாடியில், 1,200 சதுர அடியில் மாடித்தோட்டம் அமைத்து பராமரித்து வரும், சென்னை முகப்பேரைச் சேர்ந்த, 64 வயதான வள்ளி: கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன், 10 தொட்டிகளில் செடிகளை வளர்க்க ஆரம்பித்தேன். எனக்கு மாடித் தோட்டத்தில் ஈடுபாடு அதிகரிக்கவே, பெரிய அளவில் மாடித்தோட்டம் அமைக்க ஆசைப்பட்டேன். நாங்கள், சொந்த வீட்டுக்கு வந்த பின், அது சாத்தியமானது.
ஆரம்பத்தில் நிறைய பணத்தை செலவு செய்து விட்டேன். அதன்பின், இணையதளம், புத்தகங்கள் வாயிலாகவும், என் நேரடி அனுபவத்திலும், பல நுணுக்கங்களை தெரிந்து கொண்டேன்.
செடிகளுக்கு விடும் தண்ணீர், தரைக்கு வருவதால் பாதிப்புகள் ஏற்படும். எனவே, மண்ணில் ஈரப்பதம் இருக்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றினால் போதுமானது.
மேலும், தரையில் நீர் புகாத பெயின்ட் பூசியும், தண்ணீர் ஊடுருவதை தடுக்கலாம். ஒரு முறை இதை செய்து விட்டாலே, பல ஆண்டுகளுக்கு பலன் கொடுக்கும்.
செடிகள் வளர்ப்பதற்கு பழைய தண்ணீர் கேன், பிளாஸ்டிக் டப்பாக்கள் மாதிரியான எடை குறைந்த பொருட்களை பயன்படுத்தினால், மாடியில் கனம் ஏறாது. எங்கள் மாடித்தோட்டத்தில், கொடி வகை காய்கறிகளுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
செடி வகை காய்கறிகளை விட, கொடி வகை காய்கறிகளில், அதிக விளைச்சல் கிடைக்கும். பராமரிப்பும் அதிகமில்லை; பூச்சி நோய் தாக்குதல்களும் குறைவு.
இயற்கை விவசாயிகளிடம் இருந்து, நாட்டு ரக விதைகளை வாங்கி பயிர் செய்கிறேன்; அதனால் தான் அவற்றில் சுவை அதிகம். எங்கள் குடும்பத்துக்கு, தினமும் தேவையான காய்கறி, கீரைகள் மாடித் தோட்டத்திலேயே கிடைத்து வருகிறது.
ஒரு மாதத்தில், 15 கிலோ முதல் 20 கிலோ வரை காய்கறிகள், கீரைகள் கிடைக்கின்றன.
தேவைக்கு போக மீதமுள்ள காய்கறிகளை நண்பர்கள், உறவினர்களுக்கு கொடுப்போம். இதுபோக, மூலிகைகளையும் பயிரிட்டுள்ளோம். பூஜைக்கு தேவையான பூக்களும் கிடைக்கின்றன.
மகரந்த சேர்க்கையை அதிகப்படுத்தி, கூடுதல் விளைச்சல் எடுக்க, தேனீக்கள் மற்றும் பட்டாம் பூச்சிகள் அவசியம்.
அதனால், பூச்சிகளை ஈர்க்க, மஞ்சள் நிறப் பூக்கள் பூக்கக்கூடிய செடிகளையும் வளர்க்கிறோம்.
தினமும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது, காய்கறிகளை அறுவடை செய்வது, உரமிடுவது, களை எடுப்பது என்று எல்லா வேலைகளையும் மிகவும் ரசித்து செய்கிறேன்; இதனால், சந்தோஷமும், நிம்மதியும் கிடைக்கிறது. இது ஒரு உடற்பயிற்சியாகவும் இருக்கிறது.
தொடர்புக்கு
88383 62787





