PUBLISHED ON : மார் 30, 2026 03:50 AM

அ நிறம் | அளவு
தமிழக பால் வளத்துறை அமைச்சரான, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த, மனோ தங்கராஜ்: நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். என் தாத்தா, நெல் விவசாயம் செய்து வந்தார். எனக்கு சிறு வயது முதலே, விவசாயத்தில் ஈடுபாடு அதிகம்.
அதனால், ஓய்வு நேரத்தில் வயலில் இறங்கி, என்னால் இயன்ற வேலைகளை பார்ப்பேன். தற்போது, இயற்கை விவசாயத்தில் வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்கிறேன்.
எங்கள் வீட்டு தேவைக்காக, மாடி தோட்டத்தில் காய்கறிகளையும், கீரை வகைகளையும் வளர்த்து வருகிறேன்.
எங்கள் சிறு வயதில், நாஞ்சில் நாடு எனும், தற்போதைய குமரி மாவட்டத்தில் விளையும் சம்பா அரிசியை தான் சாப்பிட்டோம்.
வீட்டில் சோறு வடித்தால், சாலையே மணக்கும்... இரண்டரை ஏக்கர் நிலத்துடன் கூடியதாக எங்கள் வீடு இருந்தது.
ஊறுகாய் போட பயன்படுத்தும், 15 ரகங்களை சேர்ந்த மாமரங்கள் எங்கள் தோட்டத்தில் இருந்தன . கொய்யா உள்ளிட்ட பல வகையான பழ மரங்களும், எங்கள் தோட்டத்தில் செழிப்பாக விளைந்தன.
குமரி மாவட்டத்தின் பெருமை மிகு அடையாளமாக விளங்கும் நேந்திரம் வாழைப்பழத்தில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்போர், தினமும் ஒரு நேந்திரம் வாழைப்பழம் சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
நான், அமைச்சர் ஆனதும் நேந்திரம், செவ்வாழை, மட்டி உள்ளிட்ட, 35 வாழை ரகங்களை மீட்டெடுக்கும் விதமாக, அவற்றை சேகரித்து, குமரி பழத்தோட்டத்தில் பயிரிட்டு, அந்த இனங்களை பெருக்க நடவடிக்கை எடுத்தேன். அது, வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது.
யானை போன்ற காட்டு விலங்குகள், உணவு தேடி ஊருக்குள் வராமல் இருப் பதற்காக, வனப்பகுதி களில் நடவடிக்கை எடுத்துள்ளேன்.
பள்ளியில் நான் படிக்கும் காலத்தில், எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள கருங்கல் என்ற நகரின் சந்தையிலிருந்து சேனைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, புடலங்காய், கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள், நுாற்றுக்கணக்கான லாரிகளில், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்லும்.
ஆனால், இன்று வெளியூர்களிலிருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில், காய்கறிகள் கருங்கல் சந்தைக்கு வருவதை பார்க்க முடிகிறது. பாரம்பரிய காய்கறிகளை காப்பாற்ற வேண்டும். அதற்கு அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்!


