தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/தீபாவளி மலர்/ஐ.பி.எஸ்., அக்காவும் ஐ.ஏ.எஸ்., நானும்!

ஐ.பி.எஸ்., அக்காவும் ஐ.ஏ.எஸ்., நானும்!

ஐ.பி.எஸ்., அக்காவும் ஐ.ஏ.எஸ்., நானும்!


PUBLISHED ON : அக் 30, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 30, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அக்கா சுஷ்மிதா ஐ.பி.எஸ்., -ஆந்திராவில் போலீஸ் அதிகாரிக்கான பயிற்சியில் உள்ளார். தங்கை ஐஸ்வர்யா ஐ.ஏ.எஸ்.,- துாத்துக்குடியில் கூடுதல் கலெக்டராக உள்ளார். இவர்கள் கடலுாரை சேர்ந்த விவசாயி ராமநாதன், இளவரசி தம்பதியின் மகள்கள். தங்கை முதலில் சிவில் சர்வீஸ் தேர்வில் வென்றார். அக்கா அண்மையில் வென்றிருக்கிறார். ஒரு விவசாயியின் வீட்டில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., என பலருக்கும் ஆச்சரியம் மேலிட்டது.

பெரிய படிப்பறிவு உள்ள பெற்றோரின் பிள்ளைகள், அரசு உயர்பதவியில் இருப்பவர்களின் பிள்ளைகள் தான் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஆவார்கள் என்ற பேச்சுக்களை என்பதை உடைத்தெறிந்திருக்கிறது ஐஸ்வர்யா- - சுஷ்மிதா சகோதரிகளின் வெற்றி.

அக்காவும் தங்கையும் ஜெயித்த கதையை தங்கை ஐஸ்வர்யா ராமநாதன் ஐ.ஏ.எஸ்.,சொல்கிறார்...

அக்காவும் நானும் ஒரே பள்ளியில் படித்தோம். அக்காவிற்கு டாக்டராக ஆசை. ஆனால் பிளஸ் 2 கட் ஆப் சற்று குறைந்ததால் அது நடக்கவில்லை. எனக்கு ஐ.ஏ.எஸ்., ஆக ஆசை இருவரும் இன்ஜினியரிங் படித்தோம். டிகிரி முடித்துவிட்டு சிவில் சர்வீஸிற்கு முயற்சிக்க வேண்டும் என்ற எண்ணம் அப்போது அக்காவிற்கும் தோன்றியது.

அவர் எனக்கு ஒரு வயது மூத்தவர். எனக்கு ஒரு வருடம் முன்னால் இன்ஜினியரிங் முடித்து சென்னையில் சிவில் சர்வீஸ் பயிற்சி மையத்தில் சேர்ந்தார். இன்ஜினியரிங் படித்து வந்ததால் எங்களுக்கு பொருளாதாரம், அரசியல் அறிவியல் போன்ற பாடங்களில் ஆழ்ந்த அறிவு தேவைப்பட்டது. எனவே பயிற்சி மையத்தில் சேர்ந்து, பாடங்களில் புலமை பெற்ற பின்பு வீட்டில் இருந்து நாங்களாகவே தேர்வுக்கு தயாரானோம்.

எங்களுக்குள் அடிக்கடி மாதிரி டெஸ்ட்' வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு டெஸ்டிற்கும் நமக்கு மார்க் உயரவேண்டும். அப்போது தான் இறுதியில் வெற்றி கிடைக்கும். இருவரும் விருப்ப பாடமாக சோஷியாலஜி எடுத்தோம். அக்கா, முதலில் ஐ.ஏ.எஸ்., எழுதினார். இன்டர்வியூ வரைக்கும் போனார்; ஆனால் கிடைக்கவில்லை. அவர் பள்ளியில் முதல் மாணவி; கல்லுாரியில் கோல்டு மெடலிஸ்ட். என்றாலும் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தது அவருக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் பேரதிர்ச்சி.

அடுத்த ஆண்டில் இருவரும் சேர்ந்தே எழுதினோம். என்னை விட மிக புத்திசாலியான அக்காவே தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது என்பதை நினைத்து இன்டர்வியூ போகும் போது துவண்டுவிட்டேன். அப்போது ஆறுதலும் தன்னம்பிக்கையும் தந்தது அக்கா தான்.'இன்டர்வியூ' அரைமணி நேரம் தான்; அதில் நீ சரியாக பதிலளித்து விட்டால் வெற்றி வசமாகும்' என்றார். இன்டர்வியூ அனுபவங்களை எல்லாம் எனக்கு சொல்லித்தந்திருந்தார். அது எனக்கு உதவியது. வென்று விட்டேன். ஆனால் அக்காவிற்கு வெற்றி கிடைக்கவில்லை; அதற்கு காரணம் நன்றாக படிக்கின்ற அவர் எதிர்பாராத தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்குள் அடுத்த தேர்வு வந்து விட்டது. மூன்றாவது முறை இன்டர்வியூவிற்கு சென்றும் கிடைக்கவில்லை. என்றாலும் அவர் மனம் தளராது முயற்சித்துக்கொண்டே இருந்தார்.

'தங்கை கூட ஜெயித்துவிட்டாளே என்னால் முடியவில்லையே' என வெறுப்பாக இல்லாமல், 'என்னை விட குறைவாக படிக்கும் தங்கையே ஜெயித்துவிட்டாள்; என்னால் முடியும்' என்று அவர் 'பாசிட்டிவாக' நினைத்தார். விடாமுயற்சி செய்ததன் விளைவு 6வது முறையில் வென்று இப்போது ஆந்திராவில் ஐ.பி.எஸ்., பயிற்சி பெற்று வருகிறார்.

எனக்கு ஐ.ஏ.எஸ்., தான் பிடிக்கும். 'ஐ.ஏ.எஸ்., ஆ- ஐ.பிஎஸ்., ஆ' என்று எங்கள் வீட்டில் இருவருக்கிடையே செல்லமான சண்டையே நடக்கும்.

ஊக்கம் தந்த அம்மா

அப்பா, அக்கா போல அம்மா தந்த ஊக்கம், ஒத்துழைப்பு தான் நான் இந்த அளவுக்கு வர காரணம். என் அம்மாவிற்கு சின்ன வயதிலேயே திருமணம் முடிந்தது. அவருக்கு இன்னும் நிறைய படிக்க ஆசை இருந்தது. அதற்கு அப்பா ஊக்கமளித்தார். நாங்கள் குழந்தைகளாக இருந்த போது தான் அம்மா பாலிடெக்னிக் டிப்ளமோ படித்தார். ஒரு போட்டித்தேர்வுக்கு பிளஸ் 2 அடிப்படை தகுதி என தேவைப்பட்ட போது, பிளஸ் 2 தேர்வை எழுதினார். அப்போது நானும் பிளஸ் 2 தேர்வு எழுதினேன் என்பது சுவாரஸ்யமானது. தோழிகள் எல்லாம் கிண்டல் செய்வார்கள். அம்மாவும் மகளும் படிக்கிறீர்களே என்று! பிறகு அஞ்சல் வழியில் டிகிரி முடித்தார். நான் கல்லுாரி முதலாம் ஆண்டு படிக்கும் போது அவர் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2ல் தேர்வாகி, கல்வித்துறையில் பணிபுரிகிறார்.

யார் வேண்டுமானலும் சிவில் சர்வீஸ் தேர்வில் ஜெயிக்கலாம். அதற்கான நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை என்பது நமக்குள் இருக்கும் எரிபொருள். கடின முயற்சி என்பது நமது செயல்பாடு. தேர்வை பார்த்து பயம் வேண்டாம். இந்த தேர்வுக்குரிய மரியாதையை தர வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us