sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

1


PUBLISHED ON : மே 10, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 10, 2026

1


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ப.சோமசுந்தரம், சென்னை: 'சினிமா நடிகர்களை, புத்திசாலிகளாக நினைக்க வேண்டாம்...' என்கிறாரே, நடிகர், எஸ்.வி.சேகர்?

தானே ஒப்புக்கொண்டு விட்டார், பாருங்கள்! ஆனாலும் அதை மறந்து, அமெரிக்க அதிபர், டிரம்ப் போல பேசி, அடிக்கடி, 'வாங்கி'க் கட்டிக் கொள்வதிலும் சளைத்தவரல்ல!

மு.நாகூர், ராமநாதபுரம்: தமிழக மருத்துவத் துறை வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த, மூன்றரை மாதங்களில், 100 பேரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, 500 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது குறித்து...

மக்கள் மத்தியில், உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு நன்கு பரவியுள்ளது. அதே சமயம், பாசத்திற்குரிய உறவுகளின் இழப்பு ஏற்பட்டதும், அவர்களது உடல் உறுப்புகளை தானம் செய்பவர்கள் அனைவருக்கும் ஒரு, 'ராயல் சல்யூட்' அடிப்போம், நாகூர்!

ஏ.கணேசன், சென்னை: தன்னை இயேசு கிறிஸ்துவாக சித்தரித்து, படம் வெளியிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் குறித்து...

நம்மூர் அரசியல்வாதிகளுக்கு, அவர்களது தொண்டர் படையினர் தான், இத்தகைய, 'தமாஷ்'களை அரங்கேற்றுவர். தானே இப்படி ஒரு, 'ஸ்டன்ட்' அடிக்கிறார், டிரம்ப். கோமாளித்தனங்களைப் பார்த்து, சிரித்து மகிழ்வோமே, கணேசன்!

* வெ.பரமசிவன், செங்கல்பட்டு: ஆந்திராவில் கோதாவரி, கிருஷ்ணா உட்பட அனைத்து நதிகளும் இணைக்கப்பட்டு வருகின்றன. அங்கே, முதல்வர், சந்திரபாபு நாயுடு செய்வது போல், நம் தமிழகத்தில் நதிகளை ஒன்றாக இணைத்தால் வறண்ட பகுதிகளும் வளமாகுமே...

ஆந்திர முதல்வராக முதல்முறையாக பொறுப்பேற்றதில் இருந்தே, அம்மாநில வளர்ச்சிக்காக, சாதுர்யமாக முழுமூச்சுடன் பணியாற்றி வந்தவர், சந்திரபாபு; இந்த முறையும் அதை தொடர்கிறார். நதிநீர் இணைப்பில், மத்திய - மாநில அரசுகள் ஒன்றிணைந்து, முழு மனதுடன் செயல்பட்டால், நாடு இன்னும் சிறப்பாக மேம்படும்!

* ஆர்.வித்யா, சென்னை: தொழில் தொடங்க தேவை படிப்பா, பணமா, முன் அனுபவமா?

எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளக் கூடிய மன தைரியம் தான் முக்கியம், வித்யா!

ச.வீமராஜன், சிவகாசி: புதுச்சேரி அரசு, 18 வயதுக்கு உட்பட்டோர் வாகனம் ஓட்டி பிடிபட்டால், பெற்றோருக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனை என்றும், பிடிபட்ட நபர், 25 வயதுக்கு மேல் தான் ஓட்டுநர் உரிமம் பெற முடியும் என்றும் அறிவித்து இருக்கிறது. நடைமுறையில் இது சாத்தியமா?

நாடு முழுவதும் கட்டாயமாக அமல்படுத்த வேண்டிய உத்தரவு இது. இதன்மூலம், சிறுவர்கள் வண்டி ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் குறையும்; பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை, தவறு செய்ய விடாமல் தடுப்பர்!

டி.என்.பாலகிருஷ்ணன், சென்னை: நடிகர் சிவகுமார், 'டாஸ்மாக்'கை மூட வேண்டும் என்று கூறுகிறாரே... அது சாத்தியமா?

சிவகுமார் தன் ஆதங்கத்தை, தற்போதைய ஆட்சியின் கடைசி கட்டத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அது சாத்தியப்படாது என்பது, அவருக்கே தெரியும், பாலகிருஷ்ணன்.

* ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு: இமாச்சல பிரதேச மாநிலம், நிதி நெருக்கடியில் இருப்பதால், காங்., கட்சியைச் சேர்ந்த முதல்வர், சுக்விந்தர் சிங், தன் சம்பளத்தில், 50 சதவீதம்; அமைச்சர்களின் சம்பளத்தில், 30 சதவீதம் மற்றும் எம்.எல்.ஏ.,களின் சம்பளத்தில், 20 சதவீதம் குறைக்க உத்தரவிட்டுள்ளாராமே...

நம் மாநிலத்தில், இப்படிப்பட்ட உத்தரவெல்லாம் பிறப்பிக்கப்படும் என, கனவில் கூட நினைக்காதீர்கள், யோகானந்தம். ஒருவேளை அப்படி ஒரு சட்டம் இயற்றப்பட்டாலும் அதை நம் ஆட்சியாளர்கள் எப்படி எதிர்கொள்வர் என நினைத்தால், 'குபீர்' சிரிப்பு வருகிறது. ஆனால், அவர்களின், 'நிதிநிலை' முன்னேற்றம், வெறும் இந்த சம்பளத்தை வைத்தா நிகழ்கிறது!

ப.சோமசுந்தரம், சென்னை: துணை முதல்வர் உதயநிதி, துபாய்க்கும், முதல்வர் ஸ்டாலின், கொடைக்கானலுக்கும் சுற்றுலா சென்று திரும்பியுள்ளனரே... கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளை விடவா, இவர்கள் தேர்தல் வேலை செய்து களைத்து விட்டனர்...

அதானே... இந்த தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், 'டாஸ்மாக்' போதும் என, அந்த தலைவர்கள் நினைத்து விட்டனர் போலும்!

* நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி: பீஹாரில் நடைபெற்ற ஒரு லஞ்ச ஒழிப்பு வழக்கில், 'கைப்பற்றப்பட்ட லஞ்ச பணத்தை, எலி தின்று விட்டது...' என, லஞ்ச ஒழிப்பு போலீசார், கோர்ட்டில் கூறி இருப்பது நகைச்சுவையாக உள்ளதே...

இப்படி, எதிர்தரப்பினர் யாராக இருந்தாலும், அவர்களே வாய் திறக்க முடியாதபடி பொய்யை கூட மெய்யாக அவிழ்த்து விடும் பழக்கத்தை, சர்க்காரியா கமிஷன் வாக்குமூலமாக உலகுக்கே சொல்லிக் கொடுத்தவர், நம்மூர்க்காரர் தான், தெரியுமா நடேஷ் கன்னா?

ஜி.சத்தியமூர்த்தி, நாகை: செஞ்சி அருகே, 'காஸ்' தீர்ந்து விட்டதால், அரசு பேருந்து, பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டு, கொளுத்தும் வெயிலில், 30க்கும் மேற்பட்ட பயணியர் இறக்கி விடப்பட்டுள்ளனரே...

அரசு பஸ்கள், தகர டப்பாக்களாக ஓடிக் கொண்டிருந்தன. இப்போது, 'காஸ்' நிரப்பப்பட்டு இயங்கும் பஸ்கள் வந்துள்ளன. ஆனால், பஸ்சில் போதுமான அளவு, 'காஸ்' உள்ளதா என, சரிபார்க்காமல் ஓட்டுவதற்கான காரணம், போக்குவரத்துத் துறையின் மெத்தனமா, டிரைவரின் அலட்சியமா என, புரியவில்லை!

ச.வள்ளுவன், துாத்துக்குடி: 'வெங்காயத்தை சட்டைப்பையில் வைத்துக் கொண்டால், 'ஏசி'யே தேவையில்லை...' என, மத்திய அமைச்சர், ஜோதிராதித்ய சிந்தியா பேசி இருப்பது பற்றி...

வெயில் கொளுத்தும், ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களில் வாழ்பவர்கள், வெயிலில் செல்லும்போது, ஒரு வெங்காயத்தை, சட்டைப் பையிலோ, தலைப்பாகையிலோ வைத்துக் கொள்வது வழக்கம். வெயில் அதிகம் இருக்கும் நேரங்களில், வெங்காயத்தை முகர்ந்து பார்த்தால், வெயிலின் தாக்கம் குறையும் என, ஆண்டாண்டு காலமாக அவர்கள் நம்புகின்றனர். அதைத்தான், ஜோதிராதித்யா கூறி உள்ளார். மருத்துவ ரீதியாக இது இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

* பி.எம்.ஜாஸ்மின் சுமையா, நெல்லை: 'மூன்று குழந்தைகளுக்கு மேல் பெற்றாலும் வரவேற்கிறேன்...' என, ஆந்திர முதல்வர், சந்திரபாபு நாயுடு சொல்வது சரி தானா?

ஆந்திரா உட்பட பல தென் மாநிலங்களில் பல ஆண்டுகளாக, 'ஒரு குடும்பம் ஒரு குழந்தை' போன்ற திட்டங்களால், மக்கள் தொகை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்போது, 2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகையை கணக்கில் கொண்டு, தொகுதி மறுசீரமைப்பை மத்திய அரசு கொண்டு வர நினைப்பதால், தென் மாநில முதல்வர்கள் அரண்டு போய், இப்படி கூற ஆரம்பித்துள்ளனர்.

கே.கே.வெங்கடேசன், செங்கல்பட்டு: 'இலங்கை பார்லி., உறுப்பினர்களுக்கு இனிமேல் ஓய்வூதியம் கிடையாது...' என்ற முடிவு குறித்து...

நல்ல முடிவு. நம் நாட்டிலும் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டால், மத்திய அரசுக்கும் பெரும் செலவு குறையும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us