தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சிவாஜியின் 50 விதமான நடை! அசந்துபோன அமெரிக்க மேயர்! (6)

சிவாஜியின் 50 விதமான நடை! அசந்துபோன அமெரிக்க மேயர்! (6)

சிவாஜியின் 50 விதமான நடை! அசந்துபோன அமெரிக்க மேயர்! (6)


PUBLISHED ON : ஜூன் 29, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 29, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்காவில் என் விருந்தினராக சிவாஜி! குமுதம் இதழின் நிறுவனர் மற்றும் முன்னாள் ஆசிரியருமான எஸ்.ஏ.பி. அண்ணாமலையின் மகன் டாக்டர் எஸ்.ஏ.பி. ஜவஹர் பழனியப்பனின் அனுபவ தொடர்

அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து, இந்தியாவுக்கு புறப்பட்ட போது, ரொம்ப உணர்ச்சி வசப்பட்டிருந்தார், சிவாஜி. என் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டார்.

'அந்த பிரெஞ்சுக்கார டாக்டர், உடனே ஆபரேஷன் பண்ணணும்ன்னு சொல்லி, என் ஹார்ட்ல கத்தியை வைக்க தயாரா இருந்தான். நல்ல காலம் நான், அதுக்கு ஒத்துக்கலை. நீ நம்ம ஊர்க்காரன்; தமிழன். என்னைப் பத்தித் தெரிஞ்சவன். கத்தியை தொடாமலேயே மருந்து கொடுத்தே சரி பண்ணிட்டே. ரொம்ப தேங்க்ஸ்...' என்றார், சிவாஜி.

அவரது உணர்ச்சிப்பூர்வமான வார்த்தைகள், என்னை சிலிர்க்க வைத்தது.

என் மீதும், என் மருத்துவத் திறன் மீதும், அவர் கொண்டிருந்த நம்பிக்கையில் வெளிவந்த வார்த்தைகளை, என்றைக்கும் மறக்க மாட்டேன்.

நான் வசித்தது, ஒஹையோ மாகாணத்திலுள்ள, கொலம்பஸ் பகுதியில். அங்கே உள்ள குடும்பங்கள், தமிழ் பண்டிகைகளின் போது, ஒன்று கூடி இணைந்து கொண்டாடுவோம்.

'வெறும் பண்டிகை கொண்டாட்டங்களோடு நிறுத்திக் கொள்ள வேண்டாம். இங்கு ஒரு தமிழ்ச்சங்கம் ஆரம்பிப்போம்...' என, முடிவு செய்து, 'கொலம்பஸ் தமிழ்ச்சங்கம்' உருவாக்கினோம்.

அந்த தமிழ்ச்சங்கத்தில், ஒரு நுாலகமும் அமைக்கப்பட்டது. நுாலகத் திறப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார், சிவாஜி கணேசன்.

இரண்டாவது முறை சிகிச்சைக்காக சிவாஜி, அமெரிக்கா வந்திருந்த போது, இந்த விழா நடந்தது.

விழாவுக்கு வந்திருந்த இந்தியர்கள் எல்லாருமே, சிவாஜியை சினிமாவில் தான் பார்த்திருக்கின்றனர்; நேரில் பார்த்ததில்லை.

முதல் முறையாக சிவாஜியை நேரில் பார்த்ததில் எல்லாருக்கும் மகிழ்ச்சி. அவர்களை சந்தித்ததில், சிவாஜிக்கும் பெரிய மகிழ்ச்சி.

விழாவில் சிவாஜி பேசும் போது, 'தமிழர்கள் கடல் கடந்து இத்தனை துாரம் வந்திருக்கிறீர்கள். உங்களுடைய திறமை, புத்திசாலித்தனம், கடுமையான உழைப்பு மூலமாக சிறப்பான நிலையை அடைந்திருக்கிறீர்கள்.

'தமிழ் மொழியின் மீது கொண்ட ஆழமான பற்றின் காரணமாக, இங்கே ஒன்றாக, ஒற்றுமையாக ஒரு தமிழ்ச்சங்கத்தை ஆரம்பித்திருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்...' என, வாழ்த்தினார்.

தொடர்ந்து, 'வாடகை இடத்தில், ஒரு நுாலகத்தையும் துவக்கி இருக்கிறீர்கள். இதை பார்க்கும் போது, பெருமையாக இருக்கிறது. சரித்திர காலம் தொட்டு தமிழர்கள், கடல் கடந்து சென்று, வென்று ஏராளமான சாதனைகள் புரிந்திருக்கின்றனர். நீங்களும் அப்படிதான்.

'வருங்காலத்தில் உங்கள் தமிழ்ச்சங்கம் வளர்ச்சி பெற்று, இது போன்று ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்தி, தமிழை வளர்க்க வேண்டும். விரைவிலேயே தமிழ்ச் சங்கத்துக்கென்று சொந்தமாக ஒரு கட்டடம் கட்டி, அதிலே சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்...' என்றார்.

அத்துடன் நிற்கவில்லை.

'உங்கள் சங்கத்துக்கு என்னிடமிருந்து நன்கொடை எல்லாம் எதிர்பார்க்காதீர்கள். உங்க டாக்டர் (என்னை நோக்கி கை காட்டினார்) இருக்காரே, அவரிடம் நிறைய பணம் இருக்கிறது! நல்ல மனசும் இருக்கிறது, அள்ளி கொடுப்பார்...' எனச் சொல்லி, நமுட்டுச் சிரிப்புடன் என்னை ஒரு பார்வை பார்த்தார்.

சிவாஜியின் குறும்பை ரசித்தேன்.

கொலம்பஸ் நகரத்தில் ஒரு பெரிய ஏரி உண்டு. அதற்கு, 'ஆப்பிள் வேலி லேக்' என, பெயர்.

எனக்கு அந்த ஏரிப்பகுதியை ஒட்டி, 'ரிசார்ட்' போல இன்னொரு பெரிய வீடு இருக்கிறது.

என்னுடைய விடுமுறை தினங்களை அங்கே செலவிடுவேன்.

சிவாஜி வந்திருந்த சமயம், சிவாஜியை கவுரவிக்கும் வகையில், என்னுடைய அமெரிக்க டாக்டர் நண்பர்கள், அவர்களுடைய குடும்பத்தினர்கள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் என, 150 பேரை அழைத்து, ஒரு விருந்து அளிக்க ஏற்பாடு செய்தேன்.

அந்த விருந்துக்கு சிறப்பு விருந்தினராக வந்தவர், கொலம்பஸ் நகரத்தின், மேயர்.

நிகழ்ச்சியில் ஒரு சிறப்பு ஏற்பாட்டை செய்திருந்தேன்.

சிவாஜி நடித்து பெரும் வெற்றி பெற்ற, 12 திரைப்படங்களில் இருந்து, அவரது அற்புதமான நடிப்புத்திறனை வெளிபடுத்தும் காட்சிகளைத் தேர்ந்தெடுத்து, தொகுக்கப்பட்ட வீடியோவை, திரையிட திட்டமிட்டிருந்தேன்.

திரையிடப்படும் காட்சிகளில் சிவாஜியின் நடிப்புத்திறன், அதன் சிறப்பம்சம், அவருக்கு அந்த சமயத்தில் கிடைத்த பாராட்டுக்கள் என, பல தகவல்களை திரட்டினேன். ஒவ்வொரு திரைப்பட காட்சி முடிந்தவுடன், அந்த காட்சியைப் பற்றி விளக்கி பேசுவது தான் திட்டம்.

முதல் ஒன்றிரண்டு படங்களின் காட்சிகளுக்கு நான் அளித்த விளக்கங்களைக் கேட்டுக் கொண்டிருந்த, சிவாஜிக்கு, சட்டென்று உற்சாகம் வந்து விட்டது.

அடுத்த படத்தின் காட்சி முடிந்தவுடன், அந்த காட்சி குறித்த தன்னுடைய அனுபவத்தையும், கருத்துக்களையும் அவரே சொல்ல ஆரம்பித்து விட்டார். அவர் சொல்லச் சொல்ல எனக்கும், விழாவுக்கு வந்தவர்களுக்கும் ஆனந்தம்.

அவரது எளிமையான, அதே சமயம், ஸ்டைலான ஆங்கிலப் பேச்சில் இதுவரை யாருமே காணாத புதிய சிவாஜியை அங்கே கண்டோம்.

படக்காட்சிகள் முடிந்ததும், இன்னொரு சிறப்பு தொகுப்பு காத்திருந்தது.

ஏழை மனிதனாக, போலீஸ் அதிகாரியாக, நீதிபதியாக, டாக்டராக என, சிவாஜி நடித்த பல்வேறு கதாபாத்திரங்களின், 50 விதமான நடைகளின் தொகுப்பு ஒன்றையும் போட்டுக் காட்டினோம்.

பரத நாட்டியக் கலைஞர், பத்மா சுப்ரமணியம் தொகுத்து வைத்திருந்தது அது.

சிவாஜி மகன் ராம்குமார், எனக்கு அனுப்பி வைத்திருந்தார்.

ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒவ்வொரு நடை.

விருந்தினர்கள் அனைவரும் சிவாஜியின் நடிப்புத் திறனைப் பார்த்து, அசந்து போயினர். முக்கியமாய் கொலம்பஸ் நகர, மேயர்.

'வாவ்! இப்படிப்பட்ட அபார திறமை வாய்ந்த நடிகருடனா, இந்த விழாவில் கலந்து கொள்கிறேன்...' என, வியந்து சிவாஜியை பாராட்டினார்.

அவர் பாராட்டில் நெகிழ்ந்து போனார், சிவாஜி.

படத்தொகுப்புகள் முடிந்ததும் மீண்டும் பேசினார், சிவாஜி.

அமெரிக்க அரசின் அழைப்பில், அரசு விருந்தினராக அமெரிக்காவுக்கு அவர் வந்தது பற்றியும், ஹாலிவுட் நட்சத்திரங்களை சந்தித்து உரையாடிய அனுபவங்கள் குறித்தும் நினைவு கூர்ந்தார்.

அமெரிக்க அரசின் அழைப்புக்கு, ஒரு குட்டி கதை இருக்கிறது; நிஜமாகவே குட்டி தான்.

சென்னையில் உள்ள அமெரிக்க துாதரக அலுவலகத்தில், சிவாஜிக்கு ஒரு நண்பர் இருந்தார். அவர், 'நீங்கள் அமெரிக்கக் குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு பரிசு கொடுங்களேன்...' எனக் கேட்டார்.

அவரது கோரிக்கையை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்ட, சிவாஜி, அமெரிக்க குழந்தைகளுக்கு அனுப்பி வைத்த அன்பு பரிசு என்ன தெரியுமா?

அடுத்த வாரம் சொல்கிறேன்.



— தொடரும்எஸ். சந்திரமவுலி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us