Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/நம்மிடமே இருக்கு மருந்து: அதிமதுரம்!

நம்மிடமே இருக்கு மருந்து: அதிமதுரம்!

நம்மிடமே இருக்கு மருந்து: அதிமதுரம்!

நம்மிடமே இருக்கு மருந்து: அதிமதுரம்!

PUBLISHED ON : மார் 09, 2025


Google News
Latest Tamil News
சர்வதேச மருத்துவ மூலிகை, அதிமதுரம். இதன் மருத்துவ குணங்கள், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

அனேக நோய்களை நீக்குகிறது. மனிதர்களுக்கு தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்தி நிரம்பியது.

* அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும், பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் சிறப்பாக செயல்படுகிறது

* ஊட்டச் சத்தாகவும், ரத்தப் போக்கை கட்டுப் படுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்தி செய்யவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும், கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது

* அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து, வறுத்து, சூரணம் செய்து வைத்து, 5 கிராம் அளவில் தேனில் குழைத்து சாப்பிட்டால், அதிகச் சூட்டால் ஏற்படும் இருமல் தீரும்

* அதிமதுரம், சீரகம் சரிசமமாக எடுத்து பொடித்து, 20 கிராம் பொடியை, 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைக்க வேண்டும். 100 மில்லியாக சுண்டியதும் வடிகட்டி, காலை வேளையில், மூன்று தினங்கள் சாப்பிட்டால், கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கு நிவர்த்தி ஆகும்

* அதிமதுரம் மற்றும் தேவதாரம், தலா, 35 கிராம் எடுத்து, வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன், இரண்டு முறை கொடுத்தால், சுகப்பிரசவம் ஏற்படும்

* அதிமதுரச் சூரணம் - 2 கிராம் எடுத்து, தேனில் குழைத்து, தினம், மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக்கட்டு, இருமல், சளி குணமாகும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும்

* பெண்களுக்கு ஏற்படும் கருப்பை தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும்

* அதிமதுரம், ரோஜா மொட்டு, சோம்பு இவற்றை சம அளவில் எடுத்து, இடித்து சலித்து, இரவு படுக்கும் போது, பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது

* அதிமதுரச் சூரணம், கலப்படம் இல்லாத சந்தனச் சூரணம், தலா, 0.5 கிராம் எடுத்து, பாலில் கந்து, நான்கு வேளை சாப்பிட்டால், வாந்தியுடன் ரத்தம் வருதல் நிற்கும். உள் உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்

* போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள், அதிமதுரச் சூரணம் - 1 கிராம் எடுத்து, பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்கு கூடுதலாக ஊட்டச்சத்து கிடைக்கும்

* அதிமதுரம், வாதுமைப் பிசின், வேலம் பிசின் சமமாக தலா, 10 கிராம் அளவில் எடுத்துக் கொள்ளவும். 250 கிராம் சர்க்கரையை தண்ணீர் சிறிதளவு விட்டு, பாகு பதம் வரும் வரை காய்ச்ச வேண்டும். தேன் பதம் வரும் போது, மேற்கண்ட சூரணங்களைக் கொட்டி, லேகியம் தயாரித்துக் கொள்ளவும். தினம், மூன்று முறை, இரண்டு தேக்கரண்டி அளவு சாப்பிட்டால், வறட்டு இருமல் தீரும். கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப்புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும்

* அதிமதுரத்தை நன்றாக அரைத்து, பசும்பாலில் கலந்து தலைக்கு தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும். முடி உதிர்தல் இருக்காது

* அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால், உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால், தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கிவிடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்துவிடும்

* பொதுப் பிரயோகமாக அதிமதுரச் சூரணத்தை தினசரி ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தலாம்.

- ஏ.எஸ். கோவிந்தராஜன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us