Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/ஆட்டோ தம்பி!

ஆட்டோ தம்பி!

ஆட்டோ தம்பி!

4


PUBLISHED ON : ஏப் 26, 2026

Follow on Google

PUBLISHED ON : ஏப் 26, 2026

4


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தங்கள் வீட்டு வாசலில் நின்றிருந்தனர், 70 வயதைக் கடந்த, துரைசாமியும், விசாலாட்சியும். மகள் வீட்டுக்குப் போக வேண்டும். தாத்தா-பாட்டி வரப்போகின்றனர் என்று ஆவலுடன் காத்திருப்பர், பேரப் பிள்ளைகள். மருமகன் மற்றும் சம்பந்திகளை சந்திக்கவும் ஒரு வாய்ப்பு. ஆனால், அந்த ஞாயிற்றுக்கிழமை காலை வேளையில், சாலையில், நீண்ட நேரமாக ஒரு ஆட்டோவையும் காணவில்லை.

சிறிது நேரத்தில், அந்தப் பக்கமாக போன ஒரு ஆட்டோவை நோக்கி இடது கையைக் காட்டினார், துரைசாமி. வலது கையில், கனமான, ஒரு கட்டைப்பையை பற்றியிருந்தார். விசாலாட்சியும் அதே பாரம் கொண்ட ஒரு பையை பிடித்திருந்தாள். மகளுக்கும், பேர பிள்ளைகளுக்கும் கொடுக்க, இடைக்கால சீதனம்!

காலியாக போன ஆட்டோ, 30 அடி தள்ளிப் போய் நின்றது. டிரைவர் சீட்டிலிருந்து வெளியே எட்டிப் பார்த்தான், இளவயது ஆட்டோ தம்பி.

நேற்றிரவு பெய்த அற்ப மழைக்கே தெரு வெள்ளக்காடாகி, எந்த அடைப்பு காரணமாகவோ, சாலையில் மழைநீர் அப்படியே தேங்கிக் கிடந்தது. சற்றே மேடான பகுதியில் நின்றிருந்த தம்பதியர் தொலைவில் நிற்கும் ஆட்டோவை எப்படி அடைவது என்று திகைத்தனர்.

ஆட்டோ தம்பி கீழே இறங்கினான். வண்டியில், 'ரிவர்ஸ் கியர்' வேலை செய்யவில்லை போலிருக்கிறது; இடது கையால் ஹாண்டில்பாரையும், வலது கையால் குறுக்குக் கம்பியையும் பற்றியபடி, மழைத் தண்ணீரில் சளக், புளக்கென்று நடந்து, பின்னோக்கி ஆட்டோவை இழுத்து வந்து, அவர்கள் அருகே நிறுத்தினான்.

'நல்ல பிள்ளை...' என, நினைத்துக் கொண்டாள், விசாலாட்சி.

''திருவான்மியூர் போகணும் எவ்ளோ?'' என்றார், துரைசாமி.

''முன்னுாறு ரூபாய்,'' என்றான், ஆட்டோ தம்பி.

''என்னப்பா இவ்வளவு அநியாயமா கேட்கறே?'' என்ற, துரைசாமிக்கு சட்டென்று கோபம் எகிறியது.

''சார், அதான் என் கட்டணம்,'' என்று அவனும் கணீரென்று சொன்னான்.

விசாலாட்சிக்கோ பேரப்பிள்ளைகள் காத்திருப்பரே என்ற ஆதங்கம், கையால் கணவரை இடித்து, ''ஒப்புக்கோங்க,'' என்றாள்.

''ஏம்ப்பா கம்பெனி ஆட்டோவிலே, 220 ரூபா தானேப்பா, நீ, 80 ரூபா அதிகமா கேட்கறியே!'' துரைசாமி விடுவதாயில்லை.

''அதான் சொன்னேனே சார், இதுதான் என் ரேட்டு.''

''சரி, 250 ரூபா வெச்சுக்கோ.''

''முடியாது சார்!''

பொறுமை இழந்த விசாலாட்சி, இந்த பேரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் ஆட்டோ கதவைத் திறக்கப் போனாள். உடனே, ''இருங்கம்மா,'' என்று சொல்லி, கதவைத் திறந்து விட்டான், ஆட்டோ தம்பி. மழைநீரில் கால் நனையாதபடி தங்களுக்கு வெகு நெருக்கமாக ஆட்டோவை நிறுத்தியதோடு, கதவையும் திறந்துவிட்ட தம்பியை, இரண்டாம் முறையாக மனசுக்குள் பாராட்டினாள், விசாலாட்சி.

மனைவி ஆட்டோவில் அமர்ந்த பிறகு, வேறு வழியில்லாமல், தானும் ஏறிக் கொண்டார், துரைசாமி. ''சார், வேட்டியை உள்ளே இழுத்துக்கோங்க, சிக்கிக்காம கதவை சாத்தறேன்,'' என்றான். அவரும் உள்வாங்கி சவுகரியமாக அமர்ந்து கொண்டார்.

'பையை பின்னால வெச்சுடலாமே சார், நீங்க, கால் வைக்க வசதியா இருக்கும்,'' என்று யோசனை சொன்னான். இருவரும் சற்றே தயங்கியபோது, தானே பின் பக்கம் வந்து, உள்ளே எட்டி அந்த இரண்டு பைகளையும் எடுத்து சீட்டிற்குப் பின்னால் இருந்த மரப்பலகை மீது வைத்தான்.

ஆட்டோ புறப்பட்டது.

கணவர் முகத்தில் தெரிந்த கடுகடுப்பைக் குறைக்க முயன்றாள், விசாலாட்சி. ''ஏங்க, நீங்களும் தான் கம்பெனி ஆட்டோவுக்கு முயற்சி பண்ணினீங்க. யாராவது வந்தார்களா? ஒவ்வொருவரும் ஒவ்வொரு சாக்கு சொல்லி வர மறுத்துட்டாங்க,'' என்றாள், ரகசிய குரலில்.

''நல்லாயிருக்கே. அதுக்காக அதிகமா கொடுக்க முடியுமா?'' என்று கோபமாக கேட்டார், துரைசாமி.

அவரையும், ஆட்டோ தம்பியையும் மாறி மாறிப் பார்த்து, ''மெதுவா பேசுங்க,'' என்று, அவரை அடக்கினாள், விசாலாட்சி.

''இப்ப என்ன ஆச்சு? அதே, 80 ரூபா அதிகத் தொகைக்குதானே ஒப்புகிட்டிருக்கீங்க? ஒண்ணு தெரிஞ்சுக்கோங்க. இந்தத் தம்பி கேட்ட தொகைக்கு நாம ஒத்துகிட்டதால, இந்த மழை காலத்துல, முடிந்தவரைக்கும், 'ஷார்ட் ரூட்'ல போய் நேரத்தை மிச்சம் பிடிக்கறவனாத்தான் இருப்பான். கம்பெனி ஆட்டோன்னா உங்க மொபைல் ஒரு மேப்பை காட்டும், ஆனா, ஆட்டோ போற, 'ரூட்' வேறயா இருக்கும். நீங்ககூட சில சமயம், 'என்னப்பா, 'ரூட்' மாறி எங்கேயோ போறே?'ன்னு கேட்டிருக்கீங்க. அதுக்கு அவன், 'மேப் காட்டற, 'ரூட்'ல செம, 'டிராபிக்' சார். அதான் இப்படி போறேன்'ன்னு சால்ஜாப்பு சொல்வான். 'ஏம்ப்பா, நீ அந்த இடத்துக்கு போறதுக்குள்ள, 'டிராபிக் ஜாம் கிளியர்' ஆகிடாதா? இங்கிருந்தே ஏன் வேற, 'ரூட்' எடுக்கறே?' என்றெல்லாம் சண்டை போட்டிருக்கீங்க. இப்ப அந்தக் கவலை இல்லை. எக்ஸ்ட்ரா காசு வாங்கியதுக்காக இந்த தம்பி, 'ஷார்ட்'டாகவோ அல்லது பிரச்னையில்லாத, 'ரூட்'லயோதான் போவான்.''

''கம்பெனி ஆட்டோன்னா, 'ரேட் பிக்ஸடா' இருக்கும்; ஆனா, இவங்ககிட்ட பேரம் பேசலாமே! ஆனா, இந்த பையன் கொஞ்சம்கூட இறங்கி வரமாட்டேங்கறானே!'' துரைசாமிக்குக் கோபம் கொஞ்சம் குறைந்தது.

''ஏங்க, கம்பெனிகாரங்க மட்டும் சளைச்சவங்களா என்ன? 'நாம சொல்ற கட்டணத்துக்கு ஒரு ஆட்டோவும் வருவதாக இல்லை. மேலே, 20, 40, 80, 100 ரூபாய் என்ற ஏதேனும் கூடுதல் தொகை கொடுத்தீர்களானால் ஒருவேளை வருவார்கள்'ன்னு அவங்களே, 'எக்ஸ்ட்ரா ரேட்' கேட்டு, 'மெஸேஜ்' போடறாங்க. நீங்க சத்திய சீலன். மொதல்ல சொன்ன கட்டணத்தைதான் தருவீங்க. என்னாச்சு? ஒரு மணி நேரம் லேட்டாச்சு,'' என்றாள், விசாலாட்சி.

''சரி, சரி விடு,'' என்றார், துரைசாமி. அவருடைய கோபம் கொஞ்சம் அடங்கியது போலிருந்தது. சீட்டிலிருந்து சற்றே எழுந்து அகலக் கரை போட்ட பட்டு வேட்டியை வாகாக இழுத்து விட்டுக் கொண்டார். இந்த அசைவில் இடது மோதிர விரல் நவரத்தின மோதிரம் சற்றே திரும்பிக் கொள்ள, அதை நேர் செய்தார். முழுக்கைச் சட்டையின் மேல் பட்டனைக் கழற்றி, திறந்து விட்டுக் கொண்டார். இரண்டு பவுன் மைனர் செயின், அதற்குள் வியர்வையில் ஈரமாகிவிட்டது.

ஆட்டோ தம்பிக்கு போன் அழைப்பு வந்தது. உடனே சலித்துக் கொண்டார், துரைசாமி...

''இது வேறயா? 'லொட லொட'ன்னு பேசிகிட்டே ஓட்டுவான் பார். பேச்சு சுவாரஸ்யத்துல ரோட்டை பார்த்து ஓட்ட மாட்டான். தடால், தடால்ன்னு மேடு பள்ளம் எல்லாத்திலேயும் குதிச்சு எழுந்து, நம்ம எலும்பைக் கழட்டிடுவான்,'' என்று, மனைவியிடம் மெல்லிய குரலில் சொன்னார்.

விசாலாட்சிக்கும் அந்த அனுபவம் இருந்ததால், அவர் சொன்னதை ஆமோதிப்பதைப் போல அமைதியாக இருந்தாள்.

ஆனால், ஆட்டோ தம்பியோ, ''டேய் மச்சி, நான் சவாரில இருக்கேண்டா, அப்புறம் பேசறேன்,'' என்று சொல்லி, உடனே, தொடர்பைத் துண்டித்தான்.

தம்பதிக்கு ஆச்சரியம்.

விசாலாட்சி கொஞ்சம் இடுப்பை அசைத்து சரியாக அமர்ந்து கொண்டாள். விலை உயர்ந்த பட்டுப் புடவையைக் கட்டிக் கொண்டிருந்ததால், அது உடலை வியர்க்க வைத்திருந்தது. வழக்கமாக செய்து கொள்வதுபோல, தன்னுடைய ஏழு கல் வைரத் தோடுகளை, பட்டுப் புடவை முந்தானையால் துடைத்து, மேலும் பளபளப்பாக்கிக் கொண்டாள். திருகாணி லுாசாகியிருக்கிறதா என்பதையும் விரல்களால் சோதித்து திருகி விட்டுக் கொண்டாள். இடது மோதிர விரலில் பவளம் பதித்த ஒரு பவுன் நெளி மோதிரத்தை சரியாகப் பொருத்திக் கொண்டாள். நான்கு பவுன் தாலிக் கொடி கொஞ்சம் பாரமாகவே இருந்தாலும், அது தனக்குரியது என்ற பெருமை அந்த சுமையை ஒன்றுமில்லாமல் செய்து விட்டது. அதோடு, சம்பந்திக்கு முன்னால் பந்தாவாக இருக்கும் தானே!

சாலை ஓரளவு சீராக இருந்த இடங்களில் எல்லாம் ஆட்டோ சற்று வேகமாகவே போயிற்று. பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக, மேடும், சரிவுமாகத்தான் இருந்தன. ஆனால், ஆட்டோ அந்தப் பள்ளங்களில் விழுந்து விழுந்து எழவில்லை. மேடுகளில் சரேலென ஏறவில்லை. நிதானமாகவே போயிற்று. அதிகமாக குலுக்கல் இல்லை, அதனால், இதுபோன்ற பயணங்களில் வழக்கமாக ஏற்படும் உடல் வலியும் இல்லை. 'நல்ல டிரைவர்' மனசுக்குள் பாராட்டினர், தம்பதியர்.

நடுநடுவே ஏழெட்டு சிக்னல்கள். சோதனையாக ஆட்டோ நெருங்கும்போது சிகப்பு எரிந்து சின மூட்டியது. ஆட்டோ தம்பியோ ரொம்பவும் கர்ம சிரத்தையாக, சிக்னல் எல்லைக் கோட்டுக்கு முன்னாலேயே ஒவ்வொரு முறையும் ஆட்டோவை நிறுத்தி, சாலை விதிகளை மதித்து நடந்து கொண்டான்.

அ ப்பாடா! திருவான்மியூர் வந்தாயிற்று. மகள் வசித்திருக்கும், 'அபார்ட்மென்ட்' வாசலில் செக்யூரிடி ஆட்டோவை மறித்தார். 'ஜி-4' என்று மகளுடைய 'ப்ளாட்' எண்ணை, துரைசாமி சொல்ல அனுமதி கிடைத்தது. உள் நுழைவாயிலினுள் ஆட்டோ சென்று நின்றது. கதவைத் திறந்து இறங்கினார், துரைசாமி. கூடவே, இறங்கிய விசாலாட்சி இருக்கைக்குப் பின்னாலிருந்து பைகளை எடுக்க முனைந்தாள்.

''இருங்கம்மா, நான் எடுத்துத் தர்றேன்,'' என்ற, ஆட்டோ தம்பி, இரு பைகளையும் எடுத்தான். ''எத்தனாவது, 'ப்ளோர்' சார், 'லிப்ட்' எந்த பக்கம்?'' என்று கேட்டான். அவனை வியப்புடன் பார்த்த அவர் கை காட்டிய திசை நோக்கி, பைகளைச் சுமந்து சென்று, 'லிப்ட்' வாசலில் வைத்தான்.

துரைசாமியும், விசாலாட்சியும் நெகிழ்ந்து போயினர்.

''ஏம்ப்பா இவ்ளோ நல்லவனா இருக்கே, கட்டணத்தை மட்டும் குறைச்சுக்க மாட்டேங்கறே?'' என்றார், துரைசாமி.

''சார், நான் உதவினது உங்களோட வயோதிகத்தை பார்த்து. கட்டணம் கேட்டது உங்க வசதியைப் பார்த்து,'' என்று சிரித்தபடி சொன்ன தம்பி, அவர் நீட்டிய, 300 ரூபாயை வாங்கி, கண்களில் ஒற்றிக் கொண்டு, ஆட்டோவை நோக்கி நடந்தான்.

பிரபு சங்கர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap