Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

PUBLISHED ON : பிப் 25, 2024


Google News
Latest Tamil News
பா -- கே

குளிர் விடைபெற்று, இதமான காற்று வீசிக் கொண்டிருந்த ஒரு மாலை வேளை...

'பீச்'சில் வழக்கமான இடத்தில் சகலரும் கூடியிருந்தோம். புது வரவாக, கால்நடை மருத்துவ நண்பர் ஒருவர், அன்று வந்திருந்தார்.

லென்ஸ் மாமா அண்டு கோ, தத்தம் காரியத்தில் கண்ணாக இருக்க, நானும், கால்நடை மருத்துவரும், நெருப்பில் சுட்ட சோளக்கதிரை கொறித்தபடி, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.

சிறுவர்கள் இருவர், குதிரை சவாரி செய்தபடி இருந்தனர். நோஞ்சானாக இருந்த அந்த குதிரை, மணலில், குதித்து, குதித்து ஓடியதில், அதன் காலடி மணல் தெறித்து, அங்கு குடும்பத்தோடு அமர்ந்திருந்தவர்களின் முகத்தில் பட, சிறு சலசலப்பு எழுந்து, அடங்கியது.

இதைப் பார்த்ததும், சில பல ஆண்டுகளுக்கு முன், குதிரையேற்ற பயிற்சிக்கு சென்றது நினைவுக்கு வந்தது, எனக்கு.

'ஏன் டாக்டர், இந்த குதிரைகளைப் பார்த்தாலே நாலு நாள் பட்டினி கிடந்தது போல் இருக்கிறதே... இதை வைத்தா பிழைப்பு நடத்துகின்றனர்?' என்று, அங்கலாய்த்தேன்.

'நீ சொல்வது சரிதான் மணி... இங்குள்ளவைகளில் பாதி, குதிரை பந்தயத்திலிருந்து, 'ரிட்டயர்ட்' ஆனவைகளாகவே இருக்கும். மேலும், குதிரை வண்டி வைத்திருந்தவர்கள் மற்றும் சினிமா படப்பிடிப்புகளுக்கு வாடகைக்கு விட்டு பிழைத்தவர்களின் குதிரைகளாக இருக்கும்.

'இதுபோன்ற கால்நடைகளை, 'ஷூட்டிங்'குகளில் பயன்படுத்தக் கூடாது என்பதால், 'பீச்' சவாரிக்கு வந்து விட்டன. குதிரையின் கண்களைப் பற்றி சொல்லியே ஆகணும்...' என்று கூற ஆரம்பித்தார், டாக்டர்:

குதிரையோட கண்கள் இருக்கே அது கொஞ்சம் வித்தியாசமானது, ஆட்டுக்கும், மாட்டுக்கும் இருக்கற மாதிரி இல்ல. குதிரையின் தலையில், கண் பக்கவாட்டுல இருப்பதால், ஒரே சமயத்துல, தன்னோட ரெண்டு பக்கவாட்டு திசைகள்லேயும் பார்க்க முடியும். அதுமட்டுமல்ல, தனக்குப் பின்னால என்ன நடக்குதுங்கிறதையும் அதால பார்க்க முடியும்.

தனக்கு முன் இருக்குற ஒரு பொருளை ரெண்டு கண்ணாலயும் பார்க்கறப்போ, விழிகளை முன்பக்கம் திருப்பி, பார்வையை குவியப்படுத்தும். அப்போ, அதுக்கு பக்கவாட்டுப் பார்வையும், பின்புறப் பார்வையும் மறைஞ்சுடும்.

அப்படி அது ரெண்டு கண்ணு பார்வையையும் குவிச்சு பார்க்கிறப்போ, அதோட கண்கள் சுமார், 1.2 மீட்டருக்கு குறைவான தொலைவுல இருக்குற பொருட்களை குவியப்படுத்த முடியாது. அதனால, அது தன் இரையை கூட பார்க்க இயலாது.

குதிரையை வண்டியில் கட்டும் போதும், சவாரி பண்ணும் போதெல்லாம், அதோட கண்ணுக்கு கண்ணடக்கம்ன்னு சொல்லி, திரை போட்டு மறைச்சுடறது ஏன் தெரியுமா?

அப்ப தான் அது போற திசையில் மட்டும் கவனத்தை வச்சுக்கிட்டு ஓடும். பக்கத்துலயும், பின்னாலயும் என்ன நடக்குதுங்கறதே அதுக்குத் தெரியாது.

குதிரைப் பந்தயத்துல தடை தாண்டுற போட்டி பார்த்திருக்கீங்களா? நடுவுல வெச்சுருக்கிற தடைகளை தாண்டி, தாண்டி ஓடும்.

அந்த சமயம், அதனால தரையையோ, தடுப்பையோ பார்க்க முடியாது. ஆனால், எந்த நேரத்துல கால்களை துாக்கி எம்பணும்ங்கிறதை, குதிரை மேல உட்காந்திருக்கிறவர், 'சைகை' மூலமா தெரிவிச்சுடுவார். அதை புரிஞ்சிக்கிட்டு அது தாண்டிடுது. அவ்வளவு தான்.

அவர் தவறுதலா ஏதாவது, 'சைகை' செய்து விட்டால், குப்புற விழ வேண்டியது தான்.

குதிரையின் கண்களை விட, உயர்ந்த மட்டத்துல இருக்கிற பொருளையும், அதனால தெளிவா பார்க்க முடியாது. ரொம்ப துாரத்துல உள்ள பொருளையும் பார்க்க முடியாது. அதுமட்டுமில்லாம, நிறங்களையும் அதால கண்டுபிடிக்க முடியாது.

சரி, இப்படியெல்லாம் இருந்தும் குதிரை எப்படி சமாளிக்குது? இதுக்கு கை கொடுக்குறது அதோட கழுத்து.

நீளமான கழுத்து உதவியால, தலையை அப்பப்ப தகுந்த நிலைமைக்கு மாத்தித் திருப்பி, தன்னோட கண்ணுல பொருள் தெளிவா தெரியற மாதிரி பண்ணிக்கும்.

தலையை துாக்கிச்சுன்னா துாரத்துல உள்ளதை பார்க்கும். தாழ்த்துச்சுன்னா கிட்டத்துல உள்ளதை பார்க்கும்.

கண்ணுல விழித்திரை ஒண்ணு இருக்கும்ல, அது மற்ற விலங்குகளுக்கு குழிவா இருக்கும். ஆனால், குதிரைக்கு தட்டையா இருக்கும். அதனால தான், தலையை திருப்பி பிம்பம் விழற மாதிரி பண்ணிக்க முடியாது.

ஒரு நல்ல தரமான குதிரைக்கு, நெற்றி குறுகலா இருக்கணும். ரெண்டு பக்கமும் கண்ணு சமமா, சரியா இருக்கணும். இப்படி இருந்தா தான் அந்தக் குதிரை, தன் தலைக்கு முன் இருப்பதை தெளிவா பார்க்க முடியும். அதுதான் உயர்தரமான குதிரையும் கூட.

என்று, டாக்டர் கூறி முடிக்க, அட... இது, புது தகவலா இருக்கே! சமீபத்தில், 75வது குடியரசு தின விழாவின்போது, புதுடில்லியில், தேசிய கொடியை ஏற்ற வந்த ஜனாதிபதி, ஆறு குதிரைகள் பூட்டப்பட்ட அழகான சாரட் வண்டியில், மிடுக்காக வந்து இறங்கியதும், அவருக்கு முன்பாக, பாதுகாப்பு வீரர்கள் குதிரையில் கம்பீரமாக அமர்ந்தபடி அணிவகுத்து வந்த காட்சியும், நினைவுக்கு வந்தது.



நேர்மையான எண்ணங்கள் மனதில் கொண்டு வர, 1-0 எளிமையான வழிகாட்டிகள்:

1.உங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள் எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பழிவாங்க அல்ல; தப்பித் தவறி கூட அதே தவறை இன்னொருவருக்கு செய்து விடக் கூடாது.

2. யாரையும் இளக்காரமாக பார்க்காதீர்கள். அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் ஏதாவது ஒன்று இருக்கும்.

3. நமக்கு பிடிக்காதவர்களாகவே இருந்தாலும், அவரின் சிறு வெற்றிக்கு மனதார வாழ்த்து சொல்லுங்கள்.

4. 'என்ன வாழ்க்கையடா இது...' என்று நினைப்பதை விட, 'இந்த வாழ்க்கைக்கு என்னடா குறை...' என்று எண்ணி வாழுங்கள்.

5. மற்றவர்கள் என்ன நினைப்பர் என்ற எண்ணத்தை ஒழித்துக் கட்டுங்கள்.

6. நீங்கள் நேசிப்பவர்கள் பிரிந்து சென்றால் சபிக்காதீர்கள். அவர்கள் நல்லபடியாக வாழ பிரார்த்தனை செய்யுங்கள். உண்மையான அன்பு இதுதான்.

7. சிறிய வாய்ப்புகள் என்றாலும், அவற்றை சிறப்பாக செய்து முடியுங்கள். பெரிய வாய்ப்புகள் தேடி வரும்.

8. பிறரை தவிர்க்கும் முன், ஒரு நிமிடம் சிந்தியுங்கள். உங்களை பிறர் தவிர்த்தால் தாங்கிக் கொள்ள முடியுமா!

9. எதிரே வருபவரின் தகுதியை பாராமல், சிறு புன்னகை உதிர்த்தபடி கடந்து செல்லுங்கள்.

10. உங்களைப் பிடிக்காமல் ஒருவர் விலகி சென்றால், அமைதியாக ஒதுங்கி விடுங்கள்.

இந்த, 10 சிந்தனைகளை கடைப்பிடித்தாலே போதும். நம் மனதில் நேர்மையான எண்ணங்களே சுழல ஆரம்பிக்கும்; வாழ்வும் சிறக்கும்.

எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.  





      Our Apps Available On




      Dinamalar

      Follow us