Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

PUBLISHED ON : ஜூன் 23, 2024


Google News
Latest Tamil News
அன்புள்ள சகோதரிக்கு —

நான், 47 வயது பெண். பெற்றோருக்கு நாங்கள் நான்கு பெண்கள். நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த என் அப்பா, சிக்கனமாக இருந்து, எங்கள் நால்வரையும் ஓரளவுக்கு படிக்க வைத்து, திருமணமும் செய்து வைத்தார். மற்ற மூன்று சகோதரிகளுக்கும், இரண்டிரண்டு குழந்தைகள் பிறந்தனர்.

அரசு பணியிலிருந்தார், கணவர். எங்களுக்கும் ஒரு மகன் பிறந்தான். ஆனால், மூளை வளர்ச்சி குறைவாக இருந்ததால், ஐந்து வயது வரை பேச ஆரம்பிக்கவில்லை. மருத்துவர்களை அணுகியபோது தான், இந்த உண்மை தெரிய வந்தது.

ஐந்தாம் வகுப்பு வரை, சிறப்பு பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தோம். மற்ற குழந்தைகளோடு சேர்ந்து சிரித்து, விளையாடினாலும், படிப்பில் பின்தங்கியே இருந்தான்.

படிப்படியாகத்தான் நார்மலுக்கு வருவான் என்று மருத்துவர் கூறியதால், வேறு சாதாரண பள்ளியில் சேர்த்தேன். மிகுந்த அக்கறையுடன், பராமரித்து வளர்த்ததில், பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றான். பி.காம்., பட்டப்படிப்பில் சேர்த்து படிக்க வைத்தேன்.

படிப்பு முடித்த கையோடு, தனியார் நிறுவனம் ஒன்றில், 'அக்கவுன்டன்ஸ்' பிரிவில், வேலைக்கு சேர்த்து விட்டார், கணவர்.

அவனுக்கு இப்போது வயது: 27. கர்நாடக இசையில் ஆர்வம் கொண்டு, கற்று தேர்ந்தான். நன்றாக பாடக் கூடியவன்.

பார்த்து பார்த்து பக்குவமாக வளர்ந்த மகன், இப்போது கல்யாண வயதில் உள்ளான். பள்ளி நாட்களில் தான், தினமும் அவனுடன் நான் சென்று வருவேன். கல்லுாரியில் படிக்கும்போது, தனியாக பஸ்சில் சென்று வர பழக்கலானேன்.

இப்போது, அவனாகவே தனியாக பஸ்சில் பயணித்து, வேலைக்கு சென்று வருகிறான். புன்முறுவலுடன், களையான முகம், நடை, உடையில் நேர்த்தியாக பார்ப்பதற்கு நார்மலாக இருப்பான். பேச ஆரம்பிக்கும் போது தான், அவன் திக்கி பேசுவதும், கேட்கும் கேள்விக்கு சற்று தாமதமாக பதில் கூறுவதும், அவன் நார்மல் இல்லை என்று மற்றவர்களுக்கு புரியும்.

போதிய அளவுக்கு சம்பாதித்தாலும், அவனுடைய குறையை ஏற்று, பெண் தர யார் சம்மதிப்பர். ஆறுதல் சொல்ல என் பெற்றோரும் உயிருடன் இல்லை. சகோதரிகளும், அவரவர் வாழ்க்கை என்று இருக்கின்றனர்.

தன் வாழ்நாளை இவனுக்காக அர்ப்பணிக்கிற பெண் கிடைப்பாளா? இவனை பற்றி அறிந்த உறவினர்கள் கூட, பெண் தர மறுக்கின்றனர்.

பொய் சொல்லி, திருமணம் செய்து வைக்கவும் எனக்கு மனமில்லை. பெத்த மனம் பித்தாக, துாக்கமில்லாமல் நடைபிணமாக வாழ்கிறேன். கணவரும், என் வருத்தங்களில் பங்கு கொண்டு காலம் தள்ளுகிறார்.

என் கவலையும், வருத்தமும் தீர, நல்ல ஆலோசனை தாருங்கள், சகோதரி.

— இப்படிக்கு,

உங்கள் சகோதரி.



அன்பு சகோதரிக்கு —

உங்கள் மகனின் பேச்சு குறைபாட்டுக்கு கீழ்க்கண்ட மருத்துவப் பிரச்னைகளில் எதாவது ஒன்று காரணமாய் இருக்கலாம்.

* பேச்சு மற்றும் மொழி வளர்ச்சி குறைபாடு

* செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடு

* மதியிறுக்கம் எனப்படும் ஆட்டிசம்

* மூளைநோய்

* நரம்பு தளர்ச்சியால், உடலை நினைத்தபடி இயக்க இயலாமை

* நாக்குழறல்

உங்கள் மகனுக்கு தாராளமாக பெண் பார்த்து மணம் முடித்து வைக்கலாம். அதற்கு முன், நீங்கள் செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்:

* உங்கள் மகனுக்கு முழு உடல் மற்றும் ரத்த பரிசோதனை மேற்கொள்ளுங்கள். தாம்பத்யம் செய்வதற்கான தகுதி பெற்றவனா என்பதற்கு மருத்துவ அறிக்கை பெறுங்கள். உங்கள் மகனுக்கு சிறு வயதிலிருந்து மருத்துவம் செய்யும் மருத்துவரை அணுகி, மகனுக்கு திருமணம் செய்து வைக்கலாமா என, ஆலோசனை பெறுங்கள். அதே ஆலோசனையை இரண்டாவது அபிப்ராயமாக இன்னொரு மருத்துவரிடமும் கேளுங்கள்.

* பேச்சும், மொழியும் மனித அனுபவத்தின் மையம். பேச்சு குறைபாடு உள்ளவர்கள் நிறைய பேர் வாழ்க்கையில் பெரும் புகழ் அடைந்திருக்கின்றனர். உன் மகன், அற்புதமாக பாடுகிறான். யாருடைய துணையும் இன்றி சுயமாக இயங்குகிறான். அவனை, நீங்கள் துளியும் குறைத்து மதிப்பிட வேண்டாம்.

* உறவில் தானே அவனுக்கு பெண் கொடுக்க மறுக்கின்றனர்? திருமண தகவல் மையங்களில், மணமகள் தேவை விளம்பரம் கொடுங்கள். உங்கள் மகனின் குறைபாட்டை மறைக்காதீர்கள். அதே நேரம் குறைபாட்டை மிகைபடுத்தி கூறாதீர்கள். உங்கள் மகனுக்கேற்ற அற்புதமான மணப்பெண் கிடைப்பாள்.

உங்கள் மகனிடமும் திருமணத்தை பற்றி பேசி, அவனை உத்வேகப் படுத்துங்கள். மகனுக்கு திருமணமான ஒரு ஆண்டில் பேரன் அல்லது பேத்தியை எடுத்து கொஞ்சுவீர்கள். வாழ்த்துகள்!



— என்றென்றும் பாசத்துடன், சகுந்தலா கோபிநாத்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow Us