ADDED : மே 06, 2026 04:04 AM

ஹாவேரி: கே.எஸ்.ஆர்.டி.சி., சொகுசு பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது. நுாலிழையில் 17 பயணியர் உயிர் தப்பினர்.
பெங்களூரில் இருந்து கதக் நோக்கி கே.எஸ்.ஆர்.டி.சி.,யின் சொகுசு பஸ் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. இந்த பஸ் ஹாவேரி மாவட்டம், ராணிபென்னுார் தாலுகா தேவரகுட்டா பகுதியில் நேற்று காலை சென்று கொண்டிருந்தது.
அப்போது, பஸ்சில் இருந்து ஏதோ கருகிய வாடை வருவதை ஓட்டுநர் உணர்ந்தார். உடனடியாக பஸ்சை நிறுத்தினார். பஸ்சில் இருந்த அனைத்து பயணியரும் வேகமாக கீழே இறங்கினர்.
சிறிது நேரத்தில் பஸ் தீப்பிடித்து எரிய துவங்கியது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், பஸ் முற்றிலும் எரிந்து நாசமாகியது.
பஸ் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பஸ்சில் இருந்த 17 பயணியரும் நுாலிழையில் உயிர் தப்பினர். தீ ஏற்பட்டதற்கான சரியான காரணம் தெரியவில்லை.
