Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ திருட்டு வழக்கில் ரவுடிகள் உட்பட 3 பேர் கைது; ரூ.50 லட்சம் தங்கம், வெள்ளி நகை பறிமுதல்

திருட்டு வழக்கில் ரவுடிகள் உட்பட 3 பேர் கைது; ரூ.50 லட்சம் தங்கம், வெள்ளி நகை பறிமுதல்

திருட்டு வழக்கில் ரவுடிகள் உட்பட 3 பேர் கைது; ரூ.50 லட்சம் தங்கம், வெள்ளி நகை பறிமுதல்

திருட்டு வழக்கில் ரவுடிகள் உட்பட 3 பேர் கைது; ரூ.50 லட்சம் தங்கம், வெள்ளி நகை பறிமுதல்

ADDED : செப் 17, 2025 08:39 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு : பெங்களூரில் திருட்டு வழக்கில் ரவுடிகள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவை மீட்கப்பட்டன.

பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் நேற்று அளித்த பேட்டி:

ஞானபாரதி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மரியப்பன பாளையாவில் மத்திய அரசு ஊழியர் கிரிஷ் பாபு, அவரது சகோதரர் சாப்ட்வேர் இன்ஜினியர் காந்தராஜ் ஆகியோர் ஒரே கட்டடத்தில் உள்ள, இரு வீடுகளில் வசிக்கின்றனர்.

கடந்த 2ம் தேதி சகோதரர்கள் குடும்பத்துடன், துமகூரில் உள்ள சொந்த ஊருக்கு சென்றிருந்தனர். மறுநாள் திரும்பி வந்தபோது, தங்கள் வீடுகளில் திருட்டு நடந்திருப்பதை கண்டு சகோதரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கிரிஷ் பாபு அளித்த புகாரில், ஞானபாரதி போலீசார் விசாரித்தனர்.

திருட்டு தொடர்பாக, சி.கே.அச்சுக்கட்டை சேர்ந்த ரவுடி தனுஷ் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், இன்னொரு ரவுடி ஆபிரகாம் என்ற அபி, கூட்டாளி நிகில் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 423 கிராம் தங்க நகைகள், 710 கிராம் வெள்ளி பொருட்கள், இரண்டு விலை உயர்ந்த கைக்கடிகாரம், ஒரு பைக், 4,000 ரூபாய் ரொக்கம் ஆகியவை மீட்கப்பட்டன. மொத்த மதிப்பு 50 லட்சம் ரூபாய்.

கைக்கடிகாரம் திருட்டு வழக்கில் ஆந்திராவின் சேஷாத்ரி ரெட்டி, 27, என்பவரை பரப்பன அக்ரஹாரா போலீசார் கைது செய்தனர். எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள கைக்கடிகார நிறுவனத்தில் வேலை டெலிவரி பாயாக வேலை செய்த சேஷாத்ரி ரெட்டி, நிறுவனத்தில் இருந்து கைக்கடிகாரங்களை திருடி விற்றுள்ளார். அவரிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 70 கைக்கடிகாரங்கள் மீட்கப்பட்டன.

ஹெப்பகோடி பவானி ரோட்டில், நகல் எடுக்கும் கடையில் போலி ஆதார் அட்டை, போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து கொடுப்பதாக கிடைத்த தகவலின்படி, அந்த கடையில் ஹெப்பகோடி போலீசார் சோதனை நடத்தி, கடை உரிமையாளர் ரகுவீர், ஊழியர் யஷ்வந்த்தை கைது செய்தனர்.

இந்த வழக்கில் போலி மதிப்பெண் சான்றிதழ், போலி ஆதார் அட்டைகள், ஒரு கணினி, பிரின்டிங் மற்றும் லேமினேஷன் இயந்திரங்கள், ஹார்ட் டிஸ்க், இரண்டு மொபைல், 2,000 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

6 பேர் கைது இரவு ரோந்து சென்றபோது, ஆயுதங்களுடன் சுற்றிய ரவுடி மவுலா, அவரது கூட்டாளிகள் சையத் இசாக், அப்சர் பாஷா, ஷாபாஸ், இப்ராஹிம், பர்மன் ஆகிய ஆறு பேரை சம்பிகேஹள்ளி போலீசார் கைது செய்தனர். எதிர்கும்பலை சேர்ந்த ரவுடி மீது தாக்குதல் நடத்த காத்திருந்தது தெரிந்தது.

திருட்டு வழக்கில், ராஜஸ்தானை சேர்ந்த யாசின், 22, என்பவரை சஞ்சய்நகர் போலீசார் கைது செய்தனர். டைல்ஸ் பதிக்கும் தொழிலாளியான இவர், வயதான தம்பதி வீட்டில் புகுந்து 40,000 ரூபாய் ரொக்கம், 300 கிராம் நகைகளை திருடியிருந்தார்.

கைதான அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, கைதானவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட நகை, பணம், கை கடிகாரங்களை சீமந்த்குமார் சிங் பார்வையிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us