Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரு, ஹாசனில் பல தனியார் பள்ளிகளுக்கு... குண்டு மிரட்டல்! அலறியடித்து ஓடி வந்த பெற்றோரால் பரபரப்பு

பெங்களூரு, ஹாசனில் பல தனியார் பள்ளிகளுக்கு... குண்டு மிரட்டல்! அலறியடித்து ஓடி வந்த பெற்றோரால் பரபரப்பு

பெங்களூரு, ஹாசனில் பல தனியார் பள்ளிகளுக்கு... குண்டு மிரட்டல்! அலறியடித்து ஓடி வந்த பெற்றோரால் பரபரப்பு

பெங்களூரு, ஹாசனில் பல தனியார் பள்ளிகளுக்கு... குண்டு மிரட்டல்! அலறியடித்து ஓடி வந்த பெற்றோரால் பரபரப்பு

ADDED : ஜூன் 17, 2025 08:16 AM


Google News
Latest Tamil News
கர்நாடகாவில் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது, நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. பெங்களூரு உட்பட பல்வேறு நகரங்களின் பள்ளி, பொறியியல், மருத்துவ கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், விமான நிலையங்கள் உட்பட, பல இடங்களுக்கு அவ்வப்போது, 'இ - மெயில்'கள் வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் நடக்கின்றன.

மக்களை அச்சுறுத்தும் நோக்கில் மர்ம கும்பல், இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர். மர்ம நபர்களை கண்டுபிடிப்பது, போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது.

கடந்த மே 2ம் தேதியன்று, ராய்ச்சூர், சாம்ராஜ்நகர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுக்கு, வெடிகுண்டு மிரட்டல் வந்தது, பெரும் பீதியை கிளப்பியது. தகவலறிந்து வந்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், இரண்டு கலெக்டர்கள் அலுவலக ஊழியர்களை வெளியேற்றிவிட்டு, சோதனை நடத்தினர். வெடி பொருள் ஏதும் தென்படவில்லை.

ஜூன் 2ம் தேதி, மைசூரு நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு, மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இம்மாதம் 6ம் தேதி, பெங்களூரின் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கும், முதல்வர் சித்தராமயாவின், காவிரி இல்லத்துக்கும், வெடிகுண்டு மிரட்டல் வந்தது. போலீசார் சோதனைக்கு பின், வெற்று மிரட்டல் என்பது தெரிந்தது.

பொய்யான மிரட்டல் என்றாலும், போலீசார் அலட்சியப்படுத்துவது இல்லை. தகவல் வந்தவுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களின் உதவியுடன், சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று சோதனை நடத்துகின்றனர். ஆனால் மிரட்டல் விடுப்பவர்களை கண்டுபிடிக்க முடியாமல், போலீசார் திணறுகின்றனர்.

இந்நிலையில், பெங்களூரு மற்றும் ஹாசனின், பல தனியார் பள்ளிகளுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பதற்றமான சூழ்நிலை உருவானது. பெங்களூரின், ராஜராஜேஸ்வரி நகர், கலாசிபாளையா, கும்பலகோடுவில் உள்ள சில பள்ளிகளுக்கு, மின்னஞ்சல் மூலம் நேற்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

அதில், 'ஹைதராபாதில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்துக்கு, நியாயம் கிடைக்க வேண்டும். இல்லையென்றால் இன்று (நேற்று) மதியம் 1:30 மணிக்கு, பள்ளிகள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம்' என மிரட்டியிருந்தனர்.

இது குறித்து, பள்ளி ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தினர். வெடிபொருள் ஏதும் தென்படவில்லை.

இது வெற்று மிரட்டல் என்பது தெரிந்தது. பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அறிந்த, மாணவர்களின் பெற்றோர் அலறி, அடித்து கொண்டு பள்ளிகளுக்கு ஓடி வந்தனர். பிள்ளைகள் அழைத்து சென்றனர். இதனால், பள்ளிகளின் வாசல்களிலும் பெரும் பரபரப்பு நிலவியது.

இதேபோன்று, ஹாசனின் வித்யாசவுதா பப்ளிக் ஸ்கூல், கிட்ஸ் பள்ளி உட்பட சில பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் வழியாக, வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இது குறித்து, பள்ளி முதல்வர், போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் பள்ளிகளில் சோதனை நடத்தி, பொய்யான மிரட்டல் என்பதை கண்டுபிடித்தனர்.

உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கர்நாடகாவுக்கு சமீப நாட்களாக, வெற்று வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகம் வருகின்றன. குறிப்பாக பெங்களூரு, ஒயிட்பீல்டின், 'ராமேஸ்வரம் கபே' ஹோட்டலில் வெடிகுண்டு சம்பவம் நடந்த பின், பொய்யான மிரட்டல் விடுப்பது அதிகரித்துள்ளது.

கடந்த ஒன்றரை மாதத்தில், தற்போது வந்த மிரட்டல், நான்காவது வெடிகுண்டு மிரட்டலாகும். டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மிரட்டல் வருவதால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது, போலீசாருக்கு சவாலாக உள்ளது. மக்களை அச்சுறுத்தி, அமைதியை குலைக்கும் நோக்கில் பொய்யான மிரட்டல் விடுக்கின்றனர்.

பொய்யான மிரட்டலாக இருந்தாலும், எந்த தகவலையும் நாங்கள் அலட்சியப்படுத்துவதில்லை. மிரட்டல் வந்த இடங்களுக்கு மோப்ப நாய், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுடன் சென்று சோதனை நடத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us