/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரு - மைசூரு இடையே புல்லட் ரயில்?
/
பெங்களூரு - மைசூரு இடையே புல்லட் ரயில்?
ADDED : மே 08, 2026 12:31 AM

பெங்களூரு - சென்னை, பெங்களூரு - ஹைதராபாத், ஹைதராபாத் - சென்னை நகரங்களை இணைக்கும் அதிவேக புல்லட் ரயில் திட்டங்களுக்கான விரிவான வழித்தட திட்டங்கள் விபரங்களை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது . ஏமாற்றம் இந்தத் திட்டம் நடப்பாண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 'வைர நாற்கரம்' அதிவேக ரயில் வலையமைப்பின் ஒரு பகுதியாகும்.
முதற்கட்டமாக இரண்டு வழித்தடங்களுக்கான முழு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பெங்களூரின் முக்கிய போக்குவரத்து மையமாகத் திகழும் மெஜஸ்டிக்கை, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த இரண்டு புல்லட் வழித்தடங்களும் தொடவில்லை என்பது நகர மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
அதே வேளையில், கர்நாடக மக்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கும் வகையில் பெங்களூரில் இருந்து மைசூரு இடையே புல்லட் ரயில் திட்டத்துக்கான வழித்தடம் பற்றிய அ றிவிப்பு பட்ஜெட்டில் அறிவிக்கப்படாத நிலையிலும், இதில் இடம்பெற்றுள்ளது. இந்த வழித்தடத்தில் ராம்நகர் நிலையம் ஆரம்பகட்ட திட்டத்தில் இல்லை.
அங்கு பெங்களூரின் இரண்டாவது விமான நிலையம் அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், ராம்நகர் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதனால் அங்கு விமான நிலையம் அமைவது ஏறக்குறைய உறுதியாகி இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மைசூரு - பெங்களூரு வழித்தடம் கோடிஹள்ளியில் சென்னை வழித்தடத்துடன் இணையும்.
ஹைதராபாத் - புனே வழித்தடத்தில் கலபுரகியில் ஒரு நிலையம் இருக்கும்.
இந்தத் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய மூன்று முக்கிய நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் பாதியாகக் குறைந்து, தென்னிந்தியாவின் பொருளாதார மேம்பாட்டுக்கு முக்கியப்பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டங்களையும் செயல்படுத்தவுள்ள தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் நான்கு வழித்தடங்களுக்குமான ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
பி - 28 ரயில்கள் புல்லட் ரயில் திட்டங்களில், பாரத் தயாரிப்பு புல்லட் ரயில் தொகுப்புகள் என்றும் அழைக்கப்படும் பி - 28 ரயில்கள் இடம்பெறும்.
இவற்றை பெங்களூரில் பொதுத்துறை நிறுவனமான பி.இ.எம்.எல்., ஒரு சிறப்பு வளாகத்தில் உற்பத்தி செய்கிறது. புல்லட் ரயில் திட்டப் பணிகள் 2027 - 28ல் துவங்கலாம் என, அந்த நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.
முக்கிய அம்சங்கள் ரயில்கள் மணிக்கு 350 கி.மீ., வேகத்தில் இயக்க திட்டம்
உயர்மட்ட பாதைகள் மற்றும் சில இடங்களில் சுரங்கப்பாதைகள் பயன்படுத்தப்படும்
கர்நாடக அமைச்சரவை இந்த திட்டங்களுக்கு ஏப்ரல் 30ல் நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளது
தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து நிலம் கையகப்படுத்தும் பணிகளைத் தொடங்கி உள்ளது.
சென்னை - பெங்களூரு
வழித்தடம்
இந்த வழித்தடமானது, கர்நாடகாவில் 100.7 கி.மீ., துாரம் செல்கிறது. இதில் 15.94 கி.மீ., துாரம் சுரங்கப்பாதையாகவும், மற்றவை தரை அல்லது மேல்மட்டப் பாதையாகவும் இருக்கும். இதற்காக 8,297 ஏக்கர் நிலம் தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.
பயண நேரம்: 1 மணி 13 நிமிடங்கள்.
துாரம்: 306 கி.மீ.,
வழித்தடம்: சென்னை சென்ட்ரல், பூந்தமல்லி, சென்னை பசுமை விமான நிலையம் அமையவுள்ள பரந்துார், ஆந்திராவின் சித்துார், கர்நாடகாவின் கோலார், ெஹாஸ்கோட் அருகில் கோடிஹள்ளி, ஒயிட்பீல்ட், பையப்பனஹள்ளி (பெங்களூரு).
முக்கிய அம்சங்கள்: பெங்களூரு நகருக்குள் 15.94 கி.மீ., துாரம் சுரங்கப்பாதையாக புல்லட் ரயில் வழித்தடம் அமைக்கப்படுகிறது.
சென்னை, பெங்களூரு இடையே தற்போதுள்ள வந்தே பாரத் ரயில் நேரத்தை (4.15 மணி நேரம்) இது பாதியாகக் குறைக்கும்.
பெங்களூரு - ஹைதராபாத் வழித்தடம்
இந்த வழித்தடம் கர்நாடகாவில் 101.03 கி.மீ., துாரத்தில் அமைகிறது. இதற்கு 586 ஏக்கர் நிலம் தேவைப்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
பயண நேரம்: 2 மணி நேரம்.
துாரம்: 607.03 கி.மீ.,
வழித்தடம்: ஹைதராபாத் விமான நிலையம் (ஷாம்ஷாபாத்), ஷாம்ஷாபாத், பரத் சிட்டி, மன்னனுார் (நாகர்கர்னுால்), கர்னுால், தோன், ஹூடி,- அனந்தபூர்,
பெனுகொண்டா அருகில் துத்தேபண்டா, ஹிந்துபூர், கோடிஹள்ளி, கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அருகில் தேவனஹள்ளி, சிக்கபல்லாபூரில் அலிபுரா, பெங்களூரு.
முக்கிய அம்சங்கள்: கர்நாடகாவில் 101 கி.மீ., துாரம் இந்த வழித்தடம் அமைகிறது.
பெங்களூரு மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களை இணைக்கும் வகையில் இந்த பாதை திட்டமிடப்பட்டுள்ளது.

