Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கூட்ட நெரிசலால் ரயிலில் ஏறாத தம்பதி; ரூ.8,892 இழப்பீடு வழங்க உத்தரவு 

கூட்ட நெரிசலால் ரயிலில் ஏறாத தம்பதி; ரூ.8,892 இழப்பீடு வழங்க உத்தரவு 

கூட்ட நெரிசலால் ரயிலில் ஏறாத தம்பதி; ரூ.8,892 இழப்பீடு வழங்க உத்தரவு 

கூட்ட நெரிசலால் ரயிலில் ஏறாத தம்பதி; ரூ.8,892 இழப்பீடு வழங்க உத்தரவு 

ADDED : ஜூன் 02, 2025 01:43 AM


Google News
பெங்களூரு : கூட்ட நெரிசலால் ரயிலில் முன்பதிவு பெட்டியில் ஏற முடியாத தம்பதிக்கு, ரயில்வே இழப்பீடாக 8,892 ரூபாய் வழங்குமாறு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

பெங்களூரு ஹூடியில் வசிப்பவர் ராமகிருஷ்ணா. இவரது மனைவி ஹேமாவதி. இவர்கள் கடந்த 2022 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ம் தேதி கே.ஆர்.புரத்தில் இருந்து ஆந்திராவின் விஜயவாடா செல்ல 'கவுகாத்தி எக்ஸ்பிரஸ்' ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்தனர். இதற்கு 892 ரூபாய் கட்டணம் செலுத்தி இருந்தனர்.

கடும் கூட்டம்


ஹூடியில் இருந்து ரயில் நிலையத்திற்கு ஆட்டோவில் 165 ரூபாய் கொடுத்து, தம்பதி வந்தனர். குறிப்பிட்ட நேரத்திற்கு ரயிலும் வந்தது. ஆனால் தம்பதி முன்பதிவு செய்து இருந்த 'எஸ்2' பெட்டியில் கூட்டம் அலைமோதியது. முன்பதிவில்லாத பெட்டியில் பயணம் செய்ய டிக்கெட் எடுத்தவர்களும், இந்த பெட்டியில் ஏறி இருந்தனர். இதனால் ரயிலுக்குள் ஏற முடியாததால் தம்பதி பயணத்தை கைவிட்டு வீட்டிற்கு திரும்பினர்.

டிக்கெட் முன்பதிவு செய்த கட்டணத்தை திரும்ப தரும்படி ரயில்வே துறைக்கு மின்னஞ்சல் மூலம் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதற்கு பதில் கிடைக்கவில்லை. இதனால் சேவை குறைபாட்டை காரணம் காண்பித்து, ரயில்வே நிர்வாகம் மீது, சாந்திநகரில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு செய்தனர்.

132 பேர் பயணம்


கடந்த 2023ல் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மனம் தளராத தம்பதி, மாநில சட்ட சேவை ஆணையத்தில் மனு செய்தனர். வழக்கை மீண்டும் விசாரிக்க நுகர்வோர் நீதிமன்றத்திற்கு உத்தரவிடப்பட்டது. ரயிலில் ஏற முடியாதது பற்றி தம்பதி, ரயில் நிலைய அதிகாரியிடம் தகவல் தெரிவிக்கவில்லை.

அந்த பெட்டியில் பயணிக்க முன்பதிவு செய்த 134 பேரில் தம்பதியை தவிர 132 பேரும் பயணித்து உள்ளனர்.

அவர்கள் பயணத்தை ரத்து செய்தது தனிப்பட்ட முடிவு என்றும் ரயில்வே தரப்பு கூறியது. ஆனாலும் முன்பதிவு செய்த பெட்டியில், டிக்கெட் எடுக்காமல் நிறைய பேர் பயணம் செய்தததை ரயில்வே ஒப்பு கொண்டது.

பல கட்டமாக நடந்த விசாரணை முடிந்த நிலையில், தம்பதிக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்து உள்ளது. சேவை குறைபாடு, மன உளைச்சலுக்கு 5,000 ரூபாய்; வழக்கு செலவுக்கு 3,000 ரூபாய்; டிக்கெட் முன்பதிவு கட்டணம் 892 ரூபாய் என மொத்தம் 8,892 ரூபாய் தம்பதிக்கு இழப்பீடு வழங்க ரயில்வேக்கு, நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டு உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us