ADDED : ஜூன் 10, 2025 02:31 AM
* ரூ.16 லட்சத்துடன் ஓட்டம்
பல்லாரி நகரின், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றியவர் ரவி தாவரகெரே. இவர் வங்கிக்கு செலுத்த வேண்டிய 16.72 லட்சம் ரூபாயை செலுத்தாமல் தலைமறைவானார். நான்கைந்து நாட்களாக அலுவலகத்துக்கு வரவில்லை. இவர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.
* வீடு இடிந்து பெண் பலி
விஜயபுரா, திரிகோட்டாவின் பாபா நகரில் வீட்டின் கூரை, நேற்று அதிகாலை இடிந்து விழுந்தது. துாங்கிக் கொண்டிருந்த சங்கீதா, 30, படுகாயமடைந்து உயிரிழந்தார். அவரது கணவர், பிள்ளைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
* உண்டியல் திருட்டு
ஷிவமொக்கா, பத்ராவதி நகரின் ஹளேநகரில் வரலாற்று பிரசித்தி பெற்ற, பூதப்ப சுவாமி கோவில் உள்ளது. 3 ஆண்டுகளாக கோவில் உண்டியல் திறக்கப்படவில்லை. பல லட்சம் ரூபாய், தங்கம், வெள்ளி, காணிக்கைகள் நிரம்பியிருந்தன. இதையறிந்த மர்ம கும்பல், நேற்று முன் தினம் நள்ளிரவு, கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, உண்டியலில் இருந்த பணம், தங்க நகைகளை திருடிச் சென்றது. நேற்று காலையில் அர்ச்சகர் பூஜை செய்ய வந்தபோது, திருட்டு நடந்தது தெரிந்தது.
* நீரில் மூழ்கி இருவர் பலி
சாம்ராஜ்நகர், ஹனுார் தாலுகாவின், ஆனேகுந்தி கிராமத்தில் வசித்தவர்கள் சாமராஜு, 25, ஆகாஷ், 22. இவர்கள் நேற்று முன் தினம் மாலையில் கிராமத்தின் குளத்தில் நீச்சலடித்து விளையாடும்போது, நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
* இருவர் பலி
பெங்களூரு - சென்னை காரிடார் சாலையிலிருந்து வந்த கார், தங்கவயல் பெமல் ஆலமரம் பகுதியில் சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த ஆகாஷ் 30, நாகராஜ், 35, ஆகியோர் இருவர் உயிரிழந்தனர். இருவர் படுகாயம் அடைந்தனர்.