பெங்., உட்பட 8 மாவட்டங்களில் மின்சார கட்டணம் திடீர் உயர்வு
பெங்., உட்பட 8 மாவட்டங்களில் மின்சார கட்டணம் திடீர் உயர்வு
ADDED : மே 02, 2026 03:48 AM
பெங்களூரு: பெஸ்காம் எல்லைக்கு உட்பட்ட பெங்களூரு உட்பட எட்டு மாவட்டங்களில், மின்சார கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டு உள்ளது.
பெஸ்காம் என்ற, பெங்களூரு மின்சார வினியோக நிறுவனம் பெங்களூரு, பெங்களூரு ரூரல், ராம்நகர், கோலார், துமகூரு, சித்ரதுர்கா, தாவணகெரே, சிக்கபல்லாபூர் என, எட்டு மாவட்டங்களில் உள்ள வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், பெஸ்காம் எல்லைக்கு உட்பட்ட எட்டு மாவட்டங்களில், மின்சார கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது, யூனிட்டிற்கு 56 பைசா அதிகரிக்கப்பட்டு உள்ளது. திருத்தப்பட்ட கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது.
முந்தைய நிதியாண்டில் ஏற்பட்ட நிதி இழப்புகளை ஈடுகட்ட, திடீர் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
கடந்த, 2024 - 2025ம் நிதியாண்டில் பெஸ்காம் 34,084 கோடி ரூபாய் வருவாய் எதிர்பார்த்தது. ஆனால், 32,019 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்தது. அதனால், மின் கட்டணத்தை உயர்த்த, கர்நாடக மின்சார ஒழுங்கு முறை ஆணையம் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
