காவிரி ஆற்றில் மூழ்கி ஐவர் பலி 'செல்பி' எடுக்கும் போது விபரீதம்
காவிரி ஆற்றில் மூழ்கி ஐவர் பலி 'செல்பி' எடுக்கும் போது விபரீதம்
ADDED : ஜூன் 24, 2026 11:34 PM
மாண்டியா: காவிரி ஆற்றில் நின்று போட்டோ எடுக்க முற்பட்ட போது, ஒரே குடும்பத்தின் ஐவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
ராம்நகர் மாவட்டம் சென்னப்பட்டணா தாலுகாவை சேர்ந்த குடும்பத்தினர், நேற்று மாண்டியா மாவட்டம், மலவள்ளி தாலுகா முத்தத்தியில் உள்ள பிரசித்தி பெற்ற முத்தத்தி ராயா கோவிலுக்கு சென்றனர்.
சுவாமி தரிசனம் முடிந்த பின், முத்தத்தி அருகில் பாயும் காவிரி ஆற்றை பார்க்க, நேற்று மாலை 4:45 மணியளவில் வந்தனர்.
ஆற்றின் ஆழத்தை பற்றி தெரிந்து கொள்ளாமல், நீரில் இறங்கி, போட்டோ, செல்பி எடுப்பதில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் நீரில் விழுந்தார். அவரை காப்பாற்ற முயற்சித்த நால்வரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இறந்தவர்கள் விஜயம்மா, 50, ஸ்வேதா, 38, பிரியங்கா, 28, சைத்ரா, 20, மகேஷ், 22, என்பது தெரிய வந்துள்ளது.
நடந்த சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதியினர், சுற்றுலா பயணியர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த ஹலகூரு போலீசார், தீயணைப்பு படையினர் நீரில் இருந்து ஐவரின் உடல்களை வெளியே எடுத்தனர்.
போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
முத்தத்தியில் காவிரி ஆறு பாயும் பகுதி ஆழமானது. இதையறியாமல் நீரில் இறங்கி, அபாயத்தை தேடிக்கொள்கின்றனர். அபாயமான இடம் நீரில் இறங்க வேண்டாம் என, எச்சரிக்கை பலகை வைத்திருந்தும் சுற்றுலா பயணியர் பொருட்படுத்துவதில்லை. இதன் விளைவாக அசம்பாவிதங்கள் நடக்கின்றன.
கடவுள் தரிசனத்துக்கு வந்தவர்கள், ஆழம் தெரியாமல் நீரில் இறங்கியதால், அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணியர், தொலைவில் நின்று ஆற்றை ரசித்து விட்டு செல்ல வேண்டும். நீரில் இறங்க கூடாது. போலீசாரின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
