Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ விஜயேந்திராவின் தலைவர் பதவி தப்புமா? 

 விஜயேந்திராவின் தலைவர் பதவி தப்புமா? 

 விஜயேந்திராவின் தலைவர் பதவி தப்புமா? 


ADDED : மே 06, 2026 03:58 AM

Follow on Google

ADDED : மே 06, 2026 03:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -:

பொதுவாக பா.ஜ., தலைமை, மாநிலங்களுக்கான கட்சி தலைவர்களை நியமிக்கும் போது, தகுதியான நபர்களை பார்த்து நியமிப்பதே வழக்கம். அதற்காக எத்தனை நாட்கள் எடுத்தாலும் பொறுமையாக முடிவு எடுப்பர். கர்நாடகாவில், 2023 சட்டசபை தேர்தலுக்கு முன், பா.ஜ., தலைவராக நளின்குமார் கட்டீல் இருந்தார்.

அவரது தலைமையில் தேர்தலை சந்தித்த பா.ஜ., வெறும், 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆளுங்கட்சியாக இருந்து எதிர்க்கட்சியாக மாறியது. புதிய தலைவரை நியமிக்க கோரிக்கை எழுந்த நிலையில், தலைவர் பதவிக்கான போட்டியில் ரவி, அரவிந்த் லிம்பாவளி உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்டன.

சாதனை ஆனாலும், தலைவர் பதவி விஷயத்தில் அவசரம் காட்டாத பா.ஜ., மேலிடம், ஆறு மாதங்களுக்கு பின், விஜயேந்திராவை தலைவராக நியமித்தது. 2023 நவம்பர், 10ம் தேதியில் இருந்து, அவர் மாநில பா.ஜ., தலைவர் பதவியில் உள்ளார்.

இளம் தலைவர் என்பதால், கட்சியை வேகமாக வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்வார் என்று எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ஆனால், எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படுகிறாரா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை என்று, கட்சியினரே சொல்லும் நிலைமை உருவாகி உள்ளது.

முடா முறைகேடு வழக்கில், முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக பாதயாத்திரை நடத்தியது; வால்மீகி மேம்பாட்டு ஆணைய வழக்கில், அமைச்சராக இருந்த நாகேந்திராவை பதவி விலக வைத்தது போன்றவை, விஜயேந்திராவின் சாதனை என்று பேசப்பட்டாலும், கட்சியை வளர்க்க பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

கடந்த, 2024 லோக்சபா தேர்தலை விஜயேந்திரா தலைமையில், பா.ஜ., தேர்தலை சந்தித்தது. 2019 தேர்தலில், 28க்கு 25 இடங்களில் பா.ஜ., வென்றது. ஆனால், 2024 தேர்தலில் பா.ஜ.,வால், 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அதுவும் கூட்டணியில் உள்ள ம.ஜ.த., தயவில்.

நிதினுக்கு ஐஸ் லோக்சபா தேர்தலுக்கு பின், ஷிகாவி, சென்னப்பட்டணா, சண்டூர் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. பா.ஜ., கோட்டையான ஷிகாவியில் மீண்டும் பா.ஜ., வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கு காங்கிரஸ் களம் இறக்கிய முஸ்லிம் வேட்பாளர் வெற்றி பெற்றார்.

தற்போது நடந்து முடிந்த தாவணகெரே தெற்கு, பாகல்கோட் தொகுதி இடைத்தேர்தலில், பா.ஜ., வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தது. ஆனாலும், இரு தொகுதியிலும் கோட்டை விட்டு உள்ளனர்.

விஜயேந்திரா தலைவரான பின், தேர்தலில் பா.ஜ., பெரிய அளவில் சாதிக்கவில்லை.

தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதே நிலை நீடித்தால், 2028 ல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருவது கஷ்டம் தான்.

இந்த சூழ்நிலையை இப்போதே பயன்படுத்தி கொண்டால், பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் விஜயேந்திராவை தலைவர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, அவருக்கு பதிலாக, வேறு ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என, கட்சிக்குள் அவருக்கு எதிராக சிலர் குரல் கொடுக்கத் துவங்கி உள்ளனர்.

இதனால், விஜயேந்திராவின் தலைவர் பதவி தப்புமா என்ற கேள்வி எழுந்துஉள்ளது.

அதேநேரம் பதவியை தக்க வைக்க, தேசிய தலைவர் நிதின் நபினுக்கு, ஐஸ் வைக்கும் பணியை விஜயேந்திரா செய்து வருகிறார்.

மேற்குவங்கத்தில் பா.ஜ., அபார வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா காரணம் என்று, தலைவர்கள் பேசும் நிலையில், மோடி, அமித்ஷாவை தவிர நிதின் நபினும் காரணம் என்று விஜயேந்திரா அழுத்தமாக கூறி இருப்பது கவனிக்கத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us