Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பொது இடங்களை சுத்தம் செய்யும் அமைப்பு

 பொது இடங்களை சுத்தம் செய்யும் அமைப்பு

 பொது இடங்களை சுத்தம் செய்யும் அமைப்பு


ADDED : மே 03, 2026 02:42 AM

Follow on Google

ADDED : மே 03, 2026 02:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சமஸ்கிருத மொழியில், 'பரோபகாரம் இதம் சரீரம்' என்று கூறுவர். இதன் அர்த்தம் மற்றவருக்கு உதவி செய்யவே இந்த தேகம் உள்ளது என்பதாகும். இந்த தத்துவம் ஷிவமொக்காவில் செயல்படும் தொண்டு அமைப்புக்கு பொருந்தும்.

சாலை சுத்தம் இல்லை, பூங்காவில் சுகாதாரம் இல்லை என, குற்றம் சாட்டுவோர் எண்ணிக்கை அதிகம். ஆனால், நாமே இறங்கி சுத்தப்படுத்தலாம் என்று தோன்றுவது இல்லை. ஷிவமொக்காவில், 'பரோபகாரம்' என்ற அமைப்பு செயல்படுகிறது.

கடந்த, 10 ஆண்டுகளாக, எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் துப்புரவு பணியில் ஈடுபடுகின்றனர். பொது மக்கள் பயன்படுத்தும் இடங்களை தேடித்தேடி, குப்பைகளை அள்ளி சுத்தம் செய்கின்றனர்.

புராதன கோவில்கள், குளங்கள், பூங்காக்கள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், சமுதாய பவன்கள் உட்பட, பொதுமக்கள் நடமாடும் இடங்களை அடையாளம் கண்டு, பரோபகாரம் அமைப்பினர் அங்கு செல்கின்றனர். அப்பகுதி மக்களின் உதவியுடன், துாய்மை செய்கின்றனர். வாரந்தோறும் ஞாயிறு மற்றும் புதன் கிழமையன்று துப்புரவு பணிகளை செய்கின்றனர்.

அமைப்பினருடன் வியாபாரிகள், கடை நடத்துவோர், பேராசிரியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள் கைகோர்க்கின்றனர்.

துாய்மைக்கு தேவையான, அனைத்து உபகரணங்களையும், பரோபகாரம் அமைப்பினரே கொண்டு வருகின்றனர். ஷிவமொக்காவின், சவளங்கா சாலையின், நேமோஜிராவ் லே - அவுட்டில், பரோபகாரம் அமைப்பினர் சில நாட்களுக்கு முன் சுத்தம் செய்தனர்.

மாநகராட்சி பூங்காவில் மழையால், தேவையற்ற செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டிக் கிடந்தது. பொது மக்களின் நடமாட்டத்துக்கும், தொந்தரவாக இருந்தது. இதை கண்ட அமைப்பினர், செடி, கொடிகளை அப்புறப்படுத்தினர்.

துாய்மை செய்யும் போது, களைப்பு தெரியாமல் இருக்க பழைய கன்னடம், ஹிந்தி பாடல்கள் போடப்படுகின்றன. துப்புரவு பணிகள் முடிந்த பின், அனைவரும் ஒரு இடத்தில் சேர்ந்து, உலகில் சாதனை செய்தவர்களை பற்றி நினைவு கூறுகின்றனர்.

அமைப்பின் உறுப்பினர் யாருக்காவது பிறந்த நாள் என்றால், அவர்களுக்கு வாழ்த்து கூறுவர். இறுதியாக தேசப்பற்றை உணர்த்தும் வகையில், தேசிய கீதத்தை பாடி, அன்றைய துப்புரவு நிகழ்ச்சியை முடிக்கின்றனர்.

அதன்பின் அனைவருக்கும் சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்படுகிறது. துப்புரவு பணியை மக்களுக்கு செய்யும் சேவையாக கருதுகின்றனர். அமைப்பின் உறுப்பினர் ஸ்ரீதர் கூறியதாவது:

நானும், 'பரோபகாரம்' உறுப்பினர். இதை நாங்கள் குடும்பம் என, கூறுவோம்.

இந்தியர்கள் ஒரே குடும்பத்தினர் என்பதை போன்று, எங்கள் அமைப்பும் ஒரு குடும்பம் போல செயல்படுகிறது. கடந்த, 10 ஆண்டுகளாக, எங்கள் அமைப்பு செயல்படுகிறது.

பொது மக்கள் தங்களின் உரிமைகளை கேட்கின்றனர். ஆனால், தங்களின் கடமைகளை செய்ய விரும்புவது இல்லை. அனைவரும் கடமையை பின்பற்ற வேண்டும்.

ஒற்றுமையுடன் பணியாற்றினால், நல்லது நடக்கும். நாங்கள் துாய்மை பணிக்காக, நேமோஜிராவ் லே - அவுட்டுக்கு சென்ற போது, அப்பகுதியினர் நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தனர்.

வரும் நாட்களில் மற்ற பகுதிகளிலும், இதே போன்று ஒத்துழைப்பு கொடுத்தால் உதவியாக இருக்கும். பூங்கா, நதிக்கரை, மயானம், கோசாலை, அரசு மருத்துவமனை உட்பட, பல இடங்களை சுத்தம் செய்கிறோம். நாம் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மாநகராட்சியினர் வந்து சுத்தம் செய்வார்கள் என, நினைத்து அமர்ந்திருந்தால், எந்த வேலையும் நடக்காது.

நமது சுற்றுப்பகுதிகளை சுத்தமாக வைத்திருப்பது, நமது பொறுப்பு. நாமே சுத்தம் செய்து கொள்வது நல்லது.

பொது இடங்களை சுத்தம் செய்வதுடன், பூங்காவில் செடிகள் நட்டு பராமரிக்கிறோம். நாங்கள் எங்கள் தொழிலுடன், பொதுச்சேவைக்கு, வாரத்தில் இரண்டு நாட்கள் ஒதுக்குகிறோம். ஷிவமொக்கா மாவட்டம் முழுதையும், சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது, எங்களின் குறிக்கோளாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us