Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வங்கியில் ரூ.8 கோடி பணம் 50 கிலோ தங்கம் கொள்ளை

வங்கியில் ரூ.8 கோடி பணம் 50 கிலோ தங்கம் கொள்ளை

வங்கியில் ரூ.8 கோடி பணம் 50 கிலோ தங்கம் கொள்ளை

வங்கியில் ரூ.8 கோடி பணம் 50 கிலோ தங்கம் கொள்ளை

ADDED : செப் 17, 2025 07:36 AM


Google News
Latest Tamil News
விஜயபுரா : எஸ்.பி.ஐ., வங்கி ஒன்றில் புகுந்த முகமூடி கும்பல், ஊழியர்களை கட்டிப்போட்டு, எட்டு கோடி ரொக்கம், 50 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.

விஜயபுரா மாவட்டம், சடசனா தாலுகாவின், பண்டரபுரா பிரதான சாலையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி உள்ளது. இந்த சாலை மஹாராஷ்டிரா எல்லையை ஒட்டியுள்ளது. நேற்றிரவு 7:00 மணியளவில் வங்கி ஊழியர்கள், பணியை முடித்துக் கொண்டு வீட்டுக்கு புறப்பட தயாராகினர்.

அப்போது, முகமூடி அணிந்த மர்ம கும்பல், திடீரென முன் வாசல் வழியாக வங்கிக்குள் நுழைந்தது. அவர்கள் அடர்ந்த பச்சை நிறத்தில், ராணுவத்தினர் அணிவது போன்ற நிறத்தில் உடை அணிந்திருந்தனர். நாட்டு துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்தனர். அவற்றை காட்டி, வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்களை, 'சத்தம் போடக்கூடாது' என மிரட்டினர்.

அனைவரின் கை, கால்களை கட்டிப்போட்டனர். அதன்பின் லாக்கரில் இருந்த பணம், தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு, வாகனங்களில் தப்பினர். இதுகுறித்து, தகவலறிந்து சடசனா போலீசார், சம்பவம் நடந்த வங்கிக்கு வந்து பார்வையிட்டனர். அதிகாரிகள், ஊழியர்களிடம் மர்ம கும்பல் குறித்து விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த தகவல், காட்டுத்தீ போன்று பரவியதில், ஆயிரக்கணக்கான மக்கள், வங்கி முன் குவிந்தனர்.

முதற்கட்ட விசாரணையில், எட்டு கோடி ரூபாய் ரொக்கம், 50 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதை பற்றி ஊழியர்கள் கணக்கிட்டு வருகின்றனர்.

விஜயபுரா எஸ்.பி., லட்சுமண் நிம்பரகி, வங்கிக்கு விரைந்து வந்து பார்வையிட்டார். கொள்ளை நடந்த வங்கி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை, போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

கொள்ளையர்கள் மஹாராஷ்டிராவை நோக்கிச் சென்றது தெரிய வந்துள்ளது. அவர்கள் அம்மாநிலத்துக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தொடர் கொள்ளைகள்

கர்நாடகாவில் ஆங்காங்கே வங்கிகள், ஏ.டி.எம்.,களில் கொள்ளை நடப்பது, போலீசாருக்கு தலைவலியாக உள்ளது. நடப்பாண்டு ஜனவரி 16ம் தேதி, பீதரில் ஏ.டி.எம்.,மில் பணம் நிரப்ப வந்த ஊழியரை, மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடித்து சென்றது. ஜனவரி 17ல், மங்களூரில் பட்டப்பகலில், வங்கியில் புகுந்த மர்மநபர்கள், வங்கி ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி, 12 கோடி ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். ஹூப்பள்ளியிலும் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது. நடப்பாண்டு மே மாதம், விஜயபுராவின், மனகோலியில் கேனரா வங்கியில் கிலோக்கணக்கில் தங்கநகை கொள்ளையடிக்கப்பட்டது. இப்போது மீண்டும், இதே மாவட்டத்தில், மீண்டும் கொள்ளை நடந்துள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us