Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மென்பொருள் நிறுவன பெண் ஊழியர்களை ஆபாசமாக படம் பிடித்த பணியாளர் கைது

மென்பொருள் நிறுவன பெண் ஊழியர்களை ஆபாசமாக படம் பிடித்த பணியாளர் கைது

மென்பொருள் நிறுவன பெண் ஊழியர்களை ஆபாசமாக படம் பிடித்த பணியாளர் கைது

மென்பொருள் நிறுவன பெண் ஊழியர்களை ஆபாசமாக படம் பிடித்த பணியாளர் கைது

ADDED : ஜூலை 03, 2025 05:10 AM


Google News
Latest Tamil News
எலக்ட்ரானிக் சிட்டி: 'இன்போசிஸ்' நிறுவனத்தின் கழிப்பறையில் மொபைல் போன் மூலம் பெண்களை வீடியோ எடுத்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் இன்போசிஸ் நிறுவனம் உள்ளது. இங்கு பணியாற்றும் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த பெண் ஊழியர், கடந்த மாதம் 30ம் தேதி கழிப்பறைக்குச் சென்றார்.

அந்த அறையின் கதவில், யாரோ மொபைல் போனுடன் தன்னை நோக்கி நிற்பதைப் போன்ற பிம்பம் தென்பட்டது. அதிர்ச்சி அடைந்து அந்த பெண் கூச்சலிட்டார்.

அவர் அருகில், அதே நிறுவனத்தில் மூத்த உதவி ஆலோசகராக பணியாற்றும் சுவப்னில் நாகேஷ் மாலி, 28 வந்து மன்னிப்புக் கேட்டார்.

இதை ஏற்காத அப்பெண், உடனடியாக நடந்ததை நிறுவன எச்.ஆரிடம் புகார் அளித்தார். சுவப்னில் நாகேஷ் மாலியின் மொபைல் போனை வாங்கி பார்த்தார்.

அதில் 30க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்தன.

அந்த பெண்ணிடம் சுவப்னில் நாகேஷ் மாலியை மன்னிப்பு கேட்கும்படி எச்.ஆர்., கூறினார்.

அவரும் மன்னிப்புக் கேட்டதை அடுத்து, பெண்ணை சமாதானப்படுத்த எச்.ஆர்., முயன்றார். அவரது செயலால் அதிர்ச்சி அடைந்த அப்பெண், தன் கணவரிடம் கூறினார்.

எலக்ட்ரானிக் சிட்டி போலீசில் அவர் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுவப்னில் நாகேஷ் மாலியை நேற்று கைது செய்தனர்.

அவரது மொபைல் போனை கைப்பற்றிய போலீசார், அதில் இருந்த ஆபாச வீடியோக்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக இன்போசிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:

இவ்விவகாரம் எங்கள் கவனத்துக்கு வந்தது. ஊழியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகார் தொடர்பாக, போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்.

துன்புறுத்தல் இல்லாத சூழலை உருவாக்க இன்போசிஸ் நிறுவனம் உறுதிபூண்டுள்ளது. பூஜ்ய சகிப்புத்தன்மை கொள்கையை கொண்டு உள்ளது.

நிறுவனத்தின் நடத்தை விதிகளை மீறுவது தொடர்பான ஒவ்வொரு புகாரையும் நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

ஆபாச மெசேஜ் அனுப்பிய

டெலிவரி ஊழியர் கைது

ஹூப்பள்ளி நகரத்தை சேர்ந்தவர் ரமேஷ் ஷெட்டி, 35. இவர், டெலிவரி ஊழியராக வேலை செய்து வந்தார். இவர், டெலிவரி செய்யும்போது பெண்களின் மொபைல் போன் எண்களை சேகரிப்பார்.

இந்த எண்களுக்கு, வாட்ஸாப்பில் ஆபாச குறுந்தகவல்களை அனுப்புவதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால் பல பெண்கள், ரமேஷின் எண்ணை, 'பிளாக்' செய்தனர்.

இந்நிலையில், ரமேஷ் மீது இரண்டு பெண்கள் கோகுல் சாலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரில், ரமேஷ் ஆபாசமாக அனுப்பிய குறுந்தகவல்களை சாட்சியாக இணைத்தனர். ரமேஷை நேற்று முன்தினம் கோகுல் சாலை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து, நேற்று ஹூப்பள்ளி - தார்வாட் எஸ்.பி., சஷிகுமார் கூறுகையில், “டெலிவரி செய்யும் வேலைக்கு ஆட்களை பணியமர்த்தும்போது, அவர்கள் குறித்த பின்னணி விபரங்களை நிறுவனங்கள் கட்டாயம் சரிபார்க்க வேண்டும். தங்கள் மொபைல் எண்களை வழங்கும்போது, பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,” என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us