ADDED : மே 13, 2025 11:44 PM

பெங்களூரு : பெங்களூரில் தனியார் கல்லுாரி நிகழ்ச்சியில், பின்னணி பாடகர் சோனு நிகம் பாடும் போது, கன்னடத்தில் பாட வேண்டும் என்று சிலர் கூறினர்.
இதற்கு சோனு அளித்த பதிலால், கன்னட அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதனால், அவர் மன்னிப்பு கேட்டார்.
ஆனாலும் மே 3ல் ஆவலஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. மே 5ம் தேதி அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர். தன் மீதான வழக்கை ரத்து செய்யும்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சோனு நிகம் மனு செய்தார்.
இம்மனு நேற்று நீதிபதி சிவசங்கர் அமரன்னவர் முன் விசாரணைக்கு வந்தபோது, ஆட்சேபனை மனு தாக்கல் செய்யும்படி கூறி, வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


