Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தங்கவயல் செக் போஸ்ட்

தங்கவயல் செக் போஸ்ட்

தங்கவயல் செக் போஸ்ட்

தங்கவயல் செக் போஸ்ட்

ADDED : அக் 14, 2025 04:56 AM


Google News

குடம் நிரம்புமா?

கோ ல்டு சிட்டிக்கு குடிநீர் ஆதாரமாக இருந்தது பேத்தமங்களா ஏரி. இது, கடலா மாறியிருக்கு. ஆனாலும் அங்கு நிரம்புற நீர், கோல்டு சிட்டியின் வீடுகளில் உள்ள குடங்களில் எப்போ வந்து நிரம்புமோ. சுத்திகரிக்கப்பட்ட இந்த சுத்தமான ஏரி நீர், கோல்டு சிட்டிக்காகவே உருவானதாக 'கல்வெட்டு' அடையாளம் காட்டினாலும், அது வெறும் பாட்டி சொன்ன நிலாவில் வடை சுட்ட கதையாக தான் இருக்குது.

தங்கமான நகருக்கு நிரந்தர குடிநீருக்கு வழியற்ற நிலையே இப்பவும் நீடிக்குது. பேத்தமங்களா ஏரி நிரம்பினதாக மகிழ்ச்சியில் பூஜை செய்தால் மட்டுமே போதுமா. கோல்டு சிட்டிக்கு குடிநீராக கிடைக்க ஏற்பாடு செய்யணுமே.

கோல்டன் சிட்டிக்கு நிலத்தடி போர்வெல் நீர் மட்டுமே போதுமா. பேத்தமங்களா நீர் வந்து சேராதா. இது கோல்டு சிட்டி மக்களின் எதிர்பார்ப்பு. அரசு, பல கோடி ரூபாய் செலவு செய்து கட்டப் பட்ட 'எரகோள்' அணை நீர் கூட ஏட்டு சுரைக்காய் போல் தான் இருக்குது.

'நைனா'வுக்கு ஓய்வு?

சீ னியர்கள் கட்சி வேலையை கவனிக்கணுமாம். புதியவர்களுக்கு மந்திரி பதவி என கை கட்சி ஆட்சியில புது தகவலை பரப்பி வர்ராங்க. இதில, தேசிய அரசியலில் வேர் பிடித்த மூத்தவரான 77 வயதை தாண்டியவரிடம் உள்ள மந்திரி பதவியை பறிக்க போறாங்களாம். அவரை சமாதானப்படுத்த, அவரோட மகள மந்திரி ஆக்குறதா 'லிஸ்ட்' கசிந்திருக்கு.

ஆனால், நைனா பதவியை பறிக்க மகள் ஒப்புக்கொள்ள மாட்டேன்னு சொல்றாராம். தனக்கு கிடைக்கிற மந்திரி பதவியை விட நைனாவுக்குள்ள கவுரவமே முக்கியம்னு சொல்லி வராராம்.

மகளுக்கு மந்திரி பதவி வேண்டுமா; வேண்டாமா என்று, நைனாவிடம் எந்த ரியாக் ஷனும் இல்லையாம். புரளிக்கு எல்லாம் எதுக்கு பதில் சொல்லணுமுன்னு கிணற்றில் விழுந்த கல்லாக மவுனமாக இருக்கிறாராம்.

தாமரை மலருமா?

கோ லார் மாவட்டத்தில் அடுத்த அசெம்பிளி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி, '6 க்கு 6' திட்டத்தை வகுத்து வராங்க. இதில் ப.பேட்டைக்கு புல்லுக்கட்டு; கோல்டு சிட்டிக்கு தாமரை என உள் ஒப்பந்தம் செய்துக்குறாங்களாம். தாமரை -இரு முறை கோல்டு சிட்டி வசம் இருந்தது. பறிகொடுத்ததை மீட்க, 'மாஜி' செங்கோட்டைக்காரர் தான் சரியான 'அம்பு' என ஏவுவதற்கு தயாராக இருக்குறாங்க.

ப. பேட்டைக்கு புல்லுக்கட்டுக்கார செங்கோட்டைக்காரரின் குடும்பத்தில் ஒருத்தரை தயார்படுத்துறாங்க. அதனால தான், 'கை' வசம் இருப்பதை இழந்து விடாமல் இருக்க கேட்டதெல்லாம் மாநில முதல்வர் வழங்குவதாக சொல்றாங்க. இதன் பேரில் 'ஸ்பெஷல் அட்டென்ஷன்' தராங்களாம்.

புது மாற்றம் தொடருமா?

த னி மரம் தோப்பு ஆகாது. அந்த ஒத்தை மரத்துக்கு, அதோட தெனாவட்டு தான் கம்பீரம். புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்று தான் தனித்து செல்வாக்கு காட்டப்பட்டது. அதனால் தான் ஆல் பார்ட்டியே வேணாம்னு அசால்டா உதறி தள்ளியதை இதுவரை பார்க்க முடிந்தது.

ஆனால், திடீரென பாலிசியை மாற்றி, எல்லோரையும் அழைத்திருப்பது, புது மாற்றம் தான். எது எப்படியோ மண்ணின் மைந்தர்கள் ஒண்ணு கூடிட்டாங்க. இவங்க தலைமை நீதிபதிக்கு ஆதரவாக ஒண்ணு சேர்ந்தாங்க. இந்த 'உறவு' நீடிக்குமா; அவ்வப்போது புட்டுக்குமா. ஒண்ணா சேர்ந்தவங்க முனிசி., தேர்தலில் கூட்டாக இருப்பாங்களா. சின்ன சின்ன ஆசைகளுக்கு சிறகடித்து பறந்திடுவாங்களா.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us