வளர்ப்பு யானைகளை பயன்படுத்தி காட்டெருமைகள் விரட்டியடிப்பு
வளர்ப்பு யானைகளை பயன்படுத்தி காட்டெருமைகள் விரட்டியடிப்பு
ADDED : மே 16, 2026 03:29 AM

சிக்கமகளூரு: மக்களை அச்சுறுத்திய காட்டெருமைகளை, வளர்ப்பு யானைகள் வாயிலாக வனத்துறையினர் வனத்துக்குள் விரட்டினர். காட்டெருமைகளை விரட்ட வளர்ப்பு யானைகள் பயன்படுத்தப்பட்டது, இதுவே முதன் முறையாகும்.
சிக்கமகளூரு மாவட்டத்தில், வன விலங்குகளின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. யானைகள், சிறுத்தைகள், காட்டெருமைகள் என, பல்வேறு விலங்குகள் ஊருக்குள் நுழைந்து, மக்களை அச்சுறுத்துகின்றன.
பயிர்களை நாசமாக்குவதுடன், உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகின்றன. விலங்குகளை அப்புறப்படுத்தும்படி, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதன்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வளர்ப்பு யானைகளை பயன்படுத்தி, சிக்கமகளூரின் கொப்பாவில் எஸ்டேட் அருகில் காட்டு யானைகளை விரட்டினர்.
இப்போது பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மீது அவ்வப்போது தாக்கிய காட்டெருமைகளை, வனத்துக்குள் விரட்டும் பணியை துவக்கியுள்ளனர். இதுவரை அபாயமான காட்டெருமைகளை பிடித்து தான், வேறு இடத்துக்கு மாற்றி வந்தனர்.
இதுவரை கிராமங்களில் நுழைந்து, அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை பிடிப்பதற்காக மட்டுமே, வளர்ப்பு யானைகள் பயன்படுத்தப்பட்டன. மத்திய பிரதேசத்தில் காட்டெருமைகளை விரட்ட, வளர்ப்பு யானைகளின் உதவி பெறப்படுகிறது.
இப்போது இதே வழிமுறையை, கர்நாடக வனத்துறை பின்பற்றுகிறது.
இதன் மூலம் காட்டெருமைகளை விரட்ட, வளர்ப்பு யானைகளை பயன்படுத்திய தென் மாநிலங்களின் முதல் மாநிலம் என்ற பெருமை கர்நாடகாவுக்கு கிடைத்துள்ளது.இதற்காக, வனத்துறை ஊழியர்கள், சிறப்பு வல்லுநர்களிடம் பயிற்சி பெற்றுள்ளனர்.
