Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ஜீரோ பேலன்ஸ்: எந்த மியூச்சுவல் பண்டு சிறந்தது?

ஜீரோ பேலன்ஸ்: எந்த மியூச்சுவல் பண்டு சிறந்தது?

ஜீரோ பேலன்ஸ்: எந்த மியூச்சுவல் பண்டு சிறந்தது?


UPDATED : பிப் 23, 2026 07:18 AM

ADDED : பிப் 23, 2026 04:59 AM

Follow on Google

UPDATED : பிப் 23, 2026 07:18 AM ADDED : பிப் 23, 2026 04:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய மியூச்சுவல் பண்டு திட்டங்கள் பற்றி நிறைய விஷயங்களைப் படிக்கிறோம், கேட்கிறோம். ஆனால், அவற்றைப் பற்றி கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம். அதோடு, யார் எத்தகைய முதலீடுகளை மேற்கொள்வது பொருத்தமாக இருக்கும் என்பதையும் தெரிந்துகொள்வோம்.

இந்திய மியூச்சுவல் பண் டுத் துறையில், 50க்கும் மேற்பட்ட சொத்து நிர்வகிக்கும் நிறுவனங்கள் உள்ளன. இவை, தோராயமாக 80 லட்சம் கோடி ரூபாய் சொத்துகளை நிர்வகிக்கின்றன. இதில், குறிப்பாக மூன்று வகையான பண்டுகள் உள்ளன.

பங்குச் சந்தை சார்ந்ததை, 'ஈக்விட்டி' என்றும், கடன் பத்திரங்கள் சார்ந்ததை, 'டெப்ட்' பண்டுகள் என்றும், இவையிரண்டும் சேர்ந்ததை, 'ஹைபிரிட்' பண்டுகள் என்று வகைப்படுத்தலாம்.

பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்டுகளை மட்டும் இப்போது பார்ப்போம். இவை தான் மிகவேகமாக வளரக்கூடியவை. அதே நேரம், இவை சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை.

அதாவது, எல்லா நேரமும் லாபமே பெற்றுத் தரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. பங்குச் சந்தை சார்ந்த பல்வேறு மியூச்சுவல் பண்டுத் திட்டங்களில், கிட்டத்தட்ட 37 லட்சம் கோடி ரூபாய் நிர்வகிக்கப்படுகின்றன.

இதில், இரண்டு பெரும் பிரிவுகள் உள்ளன. ஒன்று, 'பாசிவ் ஈக்விட்டி பண்டு'கள். மற்றொன்று 'ஆக்டிவ் ஈக்விட்டி பண்டு'கள்.

பாசிவ் ஈக்விட்டி பண்டுகள்


பாசிவ் ஈக்விட்டி பண்டுகள், இந்தியாவில் இப்போது தான் மவுசு பெற்று வருகின்றன. ஆனால், மேலை நாடுகளில் இத்தகைய பண்டுகளுக்குத் தான் கிராக்கி அதிகம்.

அதற்குக் காரணம் இருக்கிறது. முதலில், இந்தப் பண்டுகளை எந்த மேலாளரும் தனியாக நின்று கவனித்துக்கொள்ள வேண்டியதில்லை. அதாவது, அந்தப் பண்டு, எந்த குறியீட்டை அடிப்படையாக கொண்டிருக்கிறதோ, அதைப் போலவே வளர்ச்சி பெறும் வருவாய் ஈட்டித் தரும்.

உதாரணமாக, 'நிப்டி 50' என்ற பிரதான குறியீட்டை அடிப்படையாக கொண்ட ஏராளமான பண்டுகள் உள்ளன. அது, இண்டக்ஸ் பண்டாகவோ, இ.டி.எப்.ஆகவோ, குறிக்கோள் சார்ந்த பண்டாகவோ இருக்கலாம்.

நிப்டி50ல் என்னென்ன பங்குகள், என்னென்ன விகிதத்தில் உள்ளனவோ, அவை அப்படியே இந்தப் பண்டுகளில் காப்பி அடித்து வாங்கிச் சேமிக்கப்படும்.

அதாவது, நிப்டி50, ஓராண்டில் 10 சதவீத வருவாய் வளர்ச்சியைப் பெறுமானால், அதற்கிணையான வருவாயை இத்தகைய பாசிவ் பண்டுகளும் பெறும். தொந்தரவே இல்லை.

குறியீடு வளர்ந்தால், அதை ஒட்டியிருக்கும் இண்டக்ஸ் பண்டோ, இ.டி.எப்.,வோ தானாக வளரும்.

இதில் முக்கியமானது, இத்தகைய பாசிவ் பண்டுகளுக்கு நிர்வாகக் கட்டண விகிதம் குறைவு. அதனால் பெறக்கூடிய லாபத்தில் பெரும்பகுதி, வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும். இந்த பாசிவ் ஈக்விட்டி பண்டுகளில் தோராயமாக, 16 லட்சம் கோடி ரூபாய் நிர்வகிக்கப்படுகிறது.

ஆக்டிவ் ஈக்விட்டி பண்டுகள்


இங்கே ஆக்டிவ் என்றால், யாரோ ஒரு மேலாளர், அந்தக் குறிப்பிட்ட பண்டை நிர்வகிக்கிறார் என்று பொருள்.

அவர் இந்தப் பண்டுகளுக்கு அடிப்படையாக இருக்கும் குறியீட்டை விட, மிக அதிகமான வருவாயை ஈட்டித் தர முயல்வார். இதில் தான் எண்ணற்ற பிரிவுகள் இருக்கின்றன.

'லார்ஜ் கேப்' பண்டுகள் மிகவும் பிரபலமானவை. அதாவது, சந்தை மதிப்பில் 1 முதல் 100 இடங்களுக்குள் இருக்கும் மிக மிக பெரிய நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்யும் பண்டுத் திட்டங்கள் இவை.

அதாவது, 80 சதவீதம் வரை இத்தகைய படா படா நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்யப்படும். இந்தப் பிரிவில் தோராயமாக 4 லட்சம் கோடி ரூபாய் பணம் நிர்வகிக்கப்படுகிறது.

ரொம்ப தொந்தரவு வேண்டாம், எப்படியிருந்தாலும் பெரிய நிறுவனம் வளர்ந்தே தீரும். அவை திவாலாகவும் வாய்ப்பில்லை. போட்ட பணம் பத்திரம் என்று கருதும் பாதுகாப்பு விரும்பும் முதலீட்டாளர்களுக்கு உகந்த பண்டுகள் இவை.

'லார்ஜ் அண்டு மிட் கேப்' பண்டுகள் அடுத்த வகை. இந்தப் பண்டுகள், லார்ஜ் கேப் மற்றும் மிட் கேப் பண்டுகளில் தலா 35 சதவீதம் தொகையை முதலீடு செய்யும்.

இந்தப் பண்டுகளில் மக்கள் பணம் கிட்டத்தட்ட 4.5 லட்சம் கோடி ரூபாய் நிர்வகிக்கப்படுகிறது.

மிட்கேப் பங்குகள் என்ன பிரச்னை கொடுத்தாலும், லார்ஜ் கேப் நிறுவனங்கள் தாங்கிப்பிடித்துக்கொள்ளும். அதனால், இதில் உள்ள ரிஸ்க் சற்றே குறைவு.

'மல்டி கேப்' மியூச்சுவல் பண்டுகள் இன்னொரு வகை. லார்ஜ், மிட், ஸ்மால் கேப் நிறுவனங்களில் குறைந்தபட்சம் 25 சதவீதத் தொகையையாவது முதலீடு செய்யவேண்டும் என்பது தான் வரையறை.

இந்தத் திட்டங்களில் கிட்டத்தட்ட 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுஉள்ளன.

எல்லாவிதமான பங்கு நிறுவனங்களில் இருந்தும் லாபம் பார்க்க வேண்டும் என்று விரும்புவோர், இத்தகைய மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யலாம்.

அடுத்து, 'பிளெக்ஸி கேப்' பண்டு உள்ளிட்டவற்றையும், லாபமீட்ட எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்பது குறித்தும் அடுத்த வாரம் பார்க்கலாம்.Image 1540019

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap