ADDED : ஆக 26, 2026 12:37 AM

சமீப நாட்களாக வேகமாக உயர்ந்த சர்க்கரை நிறுவனங்களின் பங்குகளில் முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்ததால் நேற்று 6 சதவீதம் வரை சரிந்தன. இந்த மாதத்தில் சர்க்கரை துறை பங்குகள் 20 - 30 சதவீதம் வரை உயர்ந்திருந்த நிலையில், இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.
சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்தவும், சந்தையில் தட்டுப்பாட்டை சமாளிக்கவும் கச்சா சர்க்கரை இறக்குமதி விதிகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இதனால் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா சர்க்கரையை சுத்திகரித்து உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்வது இறக்குமதியாளர்களுக்கு எளிதாகியுள்ளது. இதனால் உள்நாட்டில் சர்க்கரை வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சர்க்கரை விலை உயர்வு பங்குகளுக்கு சாதகமாக இருந்தாலும், இறக்குமதி அதிகரிப்பதற்கான வாய்ப்பு மற்றும் கையிருப்பு கட்டுப்பாடுகள் துறையின் விலை சூழலில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். எனவே, சமீபத்திய உயர்வை மட்டும் அடிப்படையாக கொண்டு பங்குகளை மதிப்பிடாமல், சர்க்கரை விலை மற்றும் அரசின் அடுத்தடுத்த நடவடிக்கைகளையும் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது அவசியம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
