நாடு முழுதும் காங்., நாளை போராட்டம்
நாடு முழுதும் காங்., நாளை போராட்டம்
நாடு முழுதும் காங்., நாளை போராட்டம்
ADDED : ஜூன் 20, 2024 01:44 AM
புதுடில்லி, மருத்துவ படிப்புக்கான 'நீட்' நுழைவுத்தேர்வில் நடந்த முறைகேட்டை கண்டித்து, நாடு முழுதும் காங்கிரஸ் நாளை போராட்டம் நடத்துகிறது.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை, மே 5ம் தேதி நடத்திய 2024ம் ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவு ஜூன் 4ல் வெளியிடப்பட்டது.
இதில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பீஹார், குஜராத், ஹரியானாவில் நீட் வினாத்தாள் கசிந்ததாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1,563 பேருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கியதாகவும், அதனால் 67 பேர் அதிகபட்ச மதிப்பெண்ணான 720 பெற்றதாகவும் தேர்வு முகமை தெரிவித்திருந்தது.
உச்ச நீதிமன்றம் கண்டிப்பை தொடர்ந்து கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டு, அவர்கள் விரும்பினால் மறுதேர்வில் பங்கேற்கலாம் என உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் நீட் தேர்வில் நடந்த முறைகேட்டை கண்டித்து நாளைய தினம் மாநில தலைநகரங்களில் காங்கிரஸ் போராட்டம் நடத்தும் என அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில காங்., தலைவர்கள் மற்றும் சட்டசபை காங்., தலைவர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் பொதுச்செயலர்கள் உள்ளிட்டோருக்கு கட்சியின் பொதுச்செயலர் வேணுகோபால் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுஉள்ளதாவது:
நீட் தேர்வில் நடந்த முறைகேட்டை கண்டித்து பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில், வரும் 21ம் தேதி காங்கிரஸ் போராட்டம் நடத்துகிறது. மாநில தலைநகரங்களில் நடத்தப்படும் இந்த போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள் தவறாது பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.