கொலை வழக்கு விசாரணை தீவிரம் காங்., வினய் குல்கர்னி கலக்கம்
கொலை வழக்கு விசாரணை தீவிரம் காங்., வினய் குல்கர்னி கலக்கம்
கொலை வழக்கு விசாரணை தீவிரம் காங்., வினய் குல்கர்னி கலக்கம்
ADDED : ஜூலை 09, 2024 04:59 AM

தார்வாட், : பா.ஜ., பிரமுகர் யோகேஷ் கவுடா கொலை வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது. சி.பி.ஐ., அதிகாரிகள் தார்வாடுக்கு திடீரென வருகை தந்து, விசாரணை நடத்தினர்.
தார்வாடின் ஹெப்பள்ளி மாவட்ட பஞ்சாயத்து பா.ஜ., உறுப்பினர் யோகேஷ் கவுடா. இவர் 2016 ஜூன் 15ல், தனக்கு சொந்தமான உடற்பயிற்சி மையத்தில், மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். சம்பவம் நடந்த மறுநாள், பசவராஜ் முத்தகி உட்பட சிலரை போலீசார் கைது செய்தனர்.
அதன்பின் இந்த வழக்கு சி.பி.ஐ.,க்கு ஒப்படைக்கப்பட்டது. விசாரணையை துவக்கிய அதிகாரிகள், கொலை வழக்கு தொடர்பாக, காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், தார்வாட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுமான வினய் குல்கர்னி, அவரது சகோதரர் விஜய் குல்கர்னி ஆகியோரை கைது செய்தனர்.
பல மாதங்கள் சிறையில் இருந்த வினய் குல்கர்னிக்கு, கீழ்நிலை நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜாமின் மறுக்கப்பட்டது. அதன்பின் உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் கிடைத்தது. 'தார்வாடில் கால் வைக்கக் கூடாது' என, அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனால், அவர் தார்வாட் செல்வதில்லை.
இதற்கிடையில் சிறப்பு நீதிமன்றத்தில், சி.பி.ஐ., அதிகாரிகள் முதற்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். விசாரணையை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என, நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. எனவே சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
சி.பி.ஐ., விசாரணை அதிகாரி ராகேஷ் ரஞ்சன் தலைமையிலான குழுவினர், நேற்று காலை திடீரென தார்வாட் வந்தனர். சிறப்பு அரசு வக்கீல் கங்காதர் ஷெட்டியுடன் ஆலோசனை நடத்தினர். யோகேஷ் கவுடா கொலை நடந்த உடற்பயிற்சி மையத்துக்கும், சி.பி.ஐ., அதிகாரிகள் சென்று தகவல் சேகரித்தனர்.
சி.பி.ஐ., அதிகாரிகள், விசாரணையை தீவிரப்படுத்தியதால், யோகேஷ் கவுடா கொலை வழக்கில் தொடர்புடைய வினய்குல்கர்னி உட்பட மற்றவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.