கோலாரில் அரசு அதிகாரிகள் இடமாற்றம் எம்.எல்.ஏ.,க்கள் நெருக்கடியால் பந்தாட்டம்
கோலாரில் அரசு அதிகாரிகள் இடமாற்றம் எம்.எல்.ஏ.,க்கள் நெருக்கடியால் பந்தாட்டம்
கோலாரில் அரசு அதிகாரிகள் இடமாற்றம் எம்.எல்.ஏ.,க்கள் நெருக்கடியால் பந்தாட்டம்
ADDED : ஜூன் 24, 2024 04:53 AM
கோலார், : கோலார் மாவட்டத்தில் கூடுதல் கலெக்டர் சங்கர் வணிக்கியாள், உதவி கலெக்டர் வெங்கடலட்சுமி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சில அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.
கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், அதிகாரிகளை இடமாற்றம் செய்வது வழக்கமான சம்பிரதாயமாக இருந்து வருகிறது. ஓராண்டுக்கு முன் பா.ஜ., ஆட்சியில் நியமிக்கப்பட்ட அரசு அதிகாரிகள், ஓராண்டு வரை இடமாற்றம் செய்யாமல் இருந்தது எதிர்பாராதது.
சில அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று எம்.எல்.ஏ.,க்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். ஆயினும் ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலேயே அரசு கவனம் செலுத்தி வந்தது.
இதனால், வளர்ச்சி பணிகள் பற்றியும், முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் குறை கூறிவந்தனர்.
இதன் காரணமாக லோக்சபா தேர்தலில் ஆளும் காங்கிரசுக்கு ஓட்டு சரிவு ஏற்பட்டதாக கோலார் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., கொத்துார் மஞ்சுநாத் தெரிவித்திருந்தார்.
சில அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அரசை வலியுறுத்தி இருந்தார். ஆயினும், அவர் கோரிக்கைக்கு யாரும் செவிசாய்க்கவில்லை.
இடமாற்றம் பட்டியலில் இருந்த கோலார் மாவட்ட கூடுதல் கலெக்டர் சங்கர் வணிக்யாள், உதவி கலெக்டர் வெங்கட லட்சுமி ஆகியோருக்கு ஜூன் 20ல் இடமாற்ற உத்தரவு வந்து உள்ளது. கோலார் மாவட்ட மருத்துவ அதிகாரியின் இடமாற்றம் உறுதியாகி உள்ளது.
தங்கவயல் தலைமை மருத்துவ அதிகாரிக்கு பதவி உயர்வு அளித்து, மாவட்ட அதிகாரி ஆக போகிறார் என்று மருத்துவ துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாவட்டத்தின் பிற துறைகளின் உயர் அதிகாரிகள், கோலார் நகராட்சி ஆணையர், தாசில்தார் உட்பட சிலர் இடமாற்றம் பரிசீலனையில் உள்ளது.