பயங்கரவாதத்தால் ஒருநாளும் இந்தியாவை வீழ்த்த முடியாது
பயங்கரவாதத்தால் ஒருநாளும் இந்தியாவை வீழ்த்த முடியாது
பயங்கரவாதத்தால் ஒருநாளும் இந்தியாவை வீழ்த்த முடியாது
UPDATED : ஜூலை 27, 2024 10:30 AM
ADDED : ஜூலை 26, 2024 11:44 PM

திராஸ் : “பயங்கரவாதத்தால் ஒரு நாளும் இந்தியாவை வீழ்த்த முடியாது,” என பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார்.
பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரில் வெற்றி பெற்றதன் 25ம் ஆண்டு வெற்றி தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அதில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:
கார்கில் போரில் நம் வீரர்கள் தேசத்திற்காக செய்த தியாகங்கள் என்றும் அழியாதவை. நுாற்றாண்டுகள் கடந்தாலும் தேசத்தின் எல்லைகளை காக்க தியாகம் செய்த உயிர்களை மறக்க முடியாது. அவர்களுக்கு இந்த தேசம் என்றைக்கும் கடமைப்பட்டுள்ளது.
அதிர்ஷ்டம்
கார்கில் போரின் போது நம் வீரர்களுடன் இருக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. இவ்வளவு உயரமான பகுதியில், கடினமான போரை அவர்கள் எப்படி எதிர்கொண்டனர் என்பது நினைவில் உள்ளது.
துணிச்சலான வீரமகன்களுக்கு தலை வணங்குகிறேன். அண்டை நாடுகளுடன் அமைதியை நிலைநாட்ட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம். ஆனால் பாகிஸ்தான், அதன் உண்மையான நிறத்தை காட்டியது. இருப்பினும், பொய்யும், பயங்கரவாதமும் உண்மைக்கு முன் மண்டியிட்டன.
பயங்கரவாத தலைவர்கள் என் குரலை நேரடியாக கேட்கும் இடத்தில் இருந்து இன்று உரையாற்றிக் கொண்டிருக்கிறேன். அவர்களின் தீய எண்ணங்கள் ஒருபோதும் நிறைவேறாது. பயங்கரவாதத்தால் இந்தியாவை ஒருநாளும் வீழ்த்த முடியாது.
தீய எண்ணம்
கடந்த காலங்களிலும் பாகிஸ்தான் நம்முடன் மோதி தோல்வி அடைந்துள்ளது. ஆனால், கடந்த கால வரலாற்றில் அவர்கள் பாடம் படிக்கவில்லை. பயங்கரவாதிகள் பின்னால் ஒளிந்து கொண்டு நம் மீது போர் தொடுக்கின்றனர். அவர்களின் தீய எண்ணம் என்றைக்கும் நிறைவேறாது.
நம் ராணுவத்தை என்றும் இளமையாகவும், போருக்கு தயாராகவும் வைத்திருக்கும் நோக்கத்தில் தான், அக்னிபத் திட்டம் துவங்கப்பட்டது.
தேசிய பாதுகாப்பு தொடர்புடைய இந்த விஷயத்தை சிலர் அரசியலாக்கி வருகின்றனர்.
அக்னிபத் திட்டம்
நம் ராணுவ வீரர்களின் சராசரி வயது, உலக சராசரியை விட அதிகமாக இருப்பது கவலை அளிக்கிறது. அதற்கு தீர்வாகவே அக்னிபத் திட்டம் துவங்கப்பட்டது.
ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு அடுத்த மாதத்துடன் ஐந்தாண்டுகள் நிறைவடைகிறது.
ஜம்மு - காஷ்மீரும், லடாக்கும் வளர்ச்சியை நோக்கி நடைபோடுகின்றன. சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டுஉள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.