விபத்தில் காயம் அடைந்தவரை வேடிக்கை பார்த்த போலீசார்
விபத்தில் காயம் அடைந்தவரை வேடிக்கை பார்த்த போலீசார்
விபத்தில் காயம் அடைந்தவரை வேடிக்கை பார்த்த போலீசார்
ADDED : ஜூலை 20, 2024 06:27 AM
பெங்களூரு: விபத்தில் காயமடைந்த வாலிபரை, மருத்துவமனைக்கு அழைத்து செல்ல மறுத்த ஹொய்சாளா போலீசாரிடம் விசாரணை நடத்தும்படி, டி.சி.பி., உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரின் சட்ட கல்லுாரி ஒன்றில் படிப்பவர் ராகுல் கவுடா, 20. இவர் சில நாட்களுக்கு முன், நண்பரின் வீட்டுக்கு சென்றிருந்தார். சிறிது நேரத்துக்கு பின், பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார்.
யஷ்வந்தபூரின் திரிவேணி சாலையில் பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உருண்டது. இதில் கீழே விழுந்த ராகுல் கவுடா காயமடைந்தார். இதை பார்த்த அப்பகுதியினர் ஆம்புலன்சுக்கும், ஹொய்சாளா போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
ஆம்புலன்ஸ் வர தாமதமானது. அதற்கு முன், அங்கு வந்த ஹொய்சாளா போலீசாரிடம், காயமடைந்த வாலிபரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், போலீசார் சம்மதிக்கவில்லை. அதன்பின், அந்த வழியாக காரில் வந்த ஒருவர், தன் காரில் ராகுல் கவுடாவை அழைத்து சென்று, மருத்துவமனையில் சேர்த்தார்.
இது சமூக வலைதளத்தில் பரவியுள்ளது. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவரை, மருத்துவமனைக்கு அழைத்து செல்ல மறுத்த ஹொய்சாளா போலீசாரை கண்டித்தனர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர். இதை தீவிரமாக கருதிய, வடக்கு மண்டல டி.சி.பி., சையதுல்லா அதாவத் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
விபத்தில் சிக்கி காயமடைந்து, சாலையில் விழுந்து கிடந்தவரை, மனிதநேயத்துடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்திருக்க வேண்டும். இது தொடர்பாக, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். அறிக்கை வந்த பின், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவர், தற்போது குணமடைந்து வருகிறார். விபத்து நடந்த போது, அவர் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை. இருசக்கர வாகன பயணியர் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.